பின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன்.
ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன்.
*
நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து வளர்ந்த மூன்று அக்ரகார கிராமத்திற்கு அருகில். மாட்டின் கொம்புகளுக்கு எட்டாத ஆசாரமான உயரத்தில் நண்பன் ‘நாணி’யுடன் திடமான புளியமரக்கிளையில் மீதமர்ந்து.
காளை அணியும் நவ வர்ணக் காகிதப்பூ மாலைகளும், வாலைத் திருகி நெடுக்குத் தெருவில் ஓட விடுகையில் கூட்டம் எழும்பும் ‘டுர்…’ சப்தங்களும், காளையைத் தழுவச் சென்றவன் அதன் சீற்றத்தில் தடுமாறித் தடுக்கி விழுந்து மடித்துக் கட்டியிருந்த கருநீலக் கட்டம் போட்ட லுங்கி (கைலி) கொம்பில் சிக்கிக் கிழிந்து அவிழ்ந்து அம்மணமாய்த் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் எனப் புழுதி பறக்கக் குறுக்குச் சந்தில் ஓடுவதைக் கண்டுத் திகிலுடன் மரக்கிளையினின்று விழுந்து விடாமல் ‘விழுந்து விழுந்து’ கண்களில் நீர்வரச் சிரித்ததுமே இன்றைய எஞ்சும் ஞாபகங்கள். நினைவேக்கங்கள் என்று கூறுவதற்கில்லை. பொறுக்கி வந்த காகிதப்பூ மாலையைத் தாத்தாவிற்குத் தெரியாமல் கூடத்து ஓரமாய்க் கிடக்கும் அரக்கு மேஜையின் எப்போதுமே கோணலாய் மூடிக்கொள்ளும் டிராயரை எம்பித் திறந்து கரப்புப் புழுக்கைகளுடன் சேகரித்துவைத்திருந்தேன்.
பின்னர் பெரும்பாலான பிராமண மத்யமர்கள் அன்றைய காலகட்டத்தில் செய்ததைப் போலவே என் பெற்றோரும் கிராமம் வீடு விவசாயம் துறந்து நகரம் கல்வி நல்வாழ்வு என்று நகர்ந்துவிட, நானும் நகரருகே ஶ்ரீரங்கவாசியாகி கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டேன்.
Continue reading