மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களை — உயிர் மெய் உயிர்மெய் என — வைத்துக்கொண்டு அம்மொழியின் சொற்களை உருவாக்கலாம். அதே பழைய அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களால் திடீரென ஒருநாள் அன்றுவரை அம்மொழியில் இல்லாத புதிய சொற்களையுமே உருவாக்கலாம். உச்சரிப்பிற்குத் தேவை எனக் கருதி இன்னொரு நாள் சொல்லாகவே கண்டெடுத்த ஓசைத்துண்டைப் பிரித்து மேய்ந்து புதிய அடிப்படை ஒலிக்குறி ஒன்றை அதுவரையில் அம்மொழியில் இல்லை என்றாலும் கண்டுகொண்டு சேர்த்துக் கொள்ளல்லாம். மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களையே விருத்தி செய்கிறோம் என்றாகலாம். அம்மொழி ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அதற்கான சமாளிப்புகளும் தனி.
மொழி வளர்ச்சியில் மேற்படி முறைமை ஒருவாறு இயங்குவதால் கூடுதலாக ஒன்றையும் சொல்லலாம்: முயன்றால் அடிப்படை எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் — அம்மொழி அகராதியை — உருவாக்கிவிடலாம். ஆனால் எதிர்போக்கில் ஒரு மொழியின் சொற்களில் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அம்மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் அனைத்தையும் கண்டுகொள்ள இயலாது. அதாவது சொல்லகராதி எனும் புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த பின்னரும் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் தெரிந்துகொண்டுவிட இயலாது.
மேற்படி வியர்த்தமான முயற்சியே அறிவியலில் — குறிப்பாக இயற்பியலில் — இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
Continue reading