யார் நல்ல இலக்கிய வாசகர்?

Standard

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்துவரும் சென்னை இலக்கியத் திருவிழா 2024 இல் நேற்று (28/02/2024) பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அதற்காகத் தயார் செய்த உரையை கீழே அளித்துள்ளேன். அவகாசம் கருதிக் கூட்டத்தில் ஓரளவே பேச முடிந்தது. பின்னர் கேள்வி பதில் நேரம் நன்றாகப் போனதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் திரளாகப் பங்கெடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பும் செயல்பாடும் பிரமாதம். இன்முகத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்பட்டிருந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அனைத்துப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகள்.
*

அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அருண் நரசிம்மன். அருண்-தான் என் பெயர். நரசிம்மன் என் தந்தையார். குடவாசலில் பிறந்தேன். ஶ்ரீரங்கத்தில் வளர்ந்தேன். அமெரிக்காவில் படித்தேன் முனைவர் பட்டம் பெற்றேன். இன்று சென்னை மாநகரவாசி. பொறியியலில் முனைவர் பட்டதாரி. கடந்த இருபது ஆண்டுகளாக இதோ இங்கிருக்கும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ஐஐடியில் இயந்திரவியல் துறையில் மெக்கானிக்கல் பேராசிரியனாக வேலை. அதனால் ஓரளவு வசதியுடன் வாழமுடிந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன் என என்னைக் கருதலாம். வேலையில் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன். பேசவேண்டும். தமிழில் இல்லை. இந்தியில் பேசுவதில்லை.

நானும் ஒரு புனைவெழுத்தாளன் என்பதற்கு அத்தாட்சியாகத் தமிழில் இதுவரை மூன்று நாவல்கள் வெளிவந்துள்ளன. சில அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளேன். தமிழினி வெளியிட்டுள்ளனர்.

கேள்வி: இந்த நாவல்களை வாசிக்கத் தேர்வு செய்கையில் அறிமுகத்திற்காக முன்னர் குறிப்பிட்ட என்னைப் பற்றிய சில தகவல்கள் உங்களுக்குப் பயன்படுமா? பயன்படுமா என்பதைவிட அவசியப்படுமா?
Continue reading

இல்புறம் — நாவல்

Standard

ilpuram novel frontஇல்புறம் என்னுடைய மூன்றாவது தமிழ் நாவல்.

தமிழினி வெளியிட்டுள்ளது. விலை 690 ரூபாய். நடந்துவரும் சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினியிடம் தொடர்பு கொண்டால் பெறலாம். அல்லது உங்கள் ஊரில் புத்தக விழா நடக்கையில் அங்கு தமிழினி விரிக்கும் கடையில் கிடைக்கும். புத்தகக் கடைகளிலோ நூல்நிலையங்களிலோ தென்படாது.

இல்புறம் நான் உருவாக்கிய சொல். இல்லறம் என்பதற்கு எதிர்ப்பதம் இல்லை. புறத்தே ஒரு இல் என்று சுருக்கிவிடவும் வேண்டாம். மனது ஒவ்விச் செய்ய விரும்புவது அறம். மனங்கள் ஒவ்விப் பழகுவது இல்லறம். ஒவ்வா மனங்கள் நாடுவது இல்புறம். இவ்வாறுதான் நாவலின் பின்னட்டையில் விளக்கமளித்துள்ளேன்.

கதை என்ன என்றால்… நூற்றாண்டுகளாக இலக்கிய மையப்பொருளாக இயங்கிவரும் ஆண்-பெண் உறவுச் சிக்கல் சார்ந்த புனைவிழையே. சமகாலச் சூழலில் தமிழ் பேசும் நகர்ப்புற மத்தியதரக் குடும்பங்களின் வாயிலாகப் பரிசீலிக்கப்பட்டுள்ளது. Continue reading

நிறமற்ற வானவில்

Standard

நிறமற்ற வானவில் என்கிற தலைப்பில் என்னுடைய அறிவியல் சார்ந்த சில கட்டுரைகளை தமிழினி நூலாக வெளியிட்டுள்ளது. விலை 200 ரூபாய்.

இது தமிழினி வெளியிடும் என்னுடைய நான்காவது அறிவியல் சார்ந்த நூல். முன்னர் பிரசுரமான மூன்று அறிவியல் நூல்களும் இந்த ஆண்டு மறுபதிப்பு கண்டிருக்கிறது. அனைத்தும் நடந்துவரும் 2024 சென்னை புத்தக விழாவில் தமிழினி கடையில் கிடைக்கும். பிறகும் தமிழினி-யிடம் தொடர்புகொண்டால் கிடைக்கும்.

நூலின் பின்னட்டை விளம்பர வரிகள்: பள்ளி கல்லூரிகளில் தேர்வு விழுக்காடு நல்ல வேலை என்று ஏதோ ஒரு முடிவை நோக்கி அவசரகதியில் பரிமாறிக்கொள்ளப்படும் அறிவியில் சார்ந்த விஷயங்களை பாடம் என்று தெரியாமல் சற்று நகைச்சுவையுடன் வரலாற்று விஸ்தாரத்தில் சாய்வு நாற்காலியில் இருந்து புரட்டினால் எப்படி இருக்கும் என்கிற உந்துதலின் வெளிப்பாடே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளின் நோக்கம்.
Continue reading

அமெரிக்க தேசி — வாசகர் கடிதம் — விக்னேஷ்வரன்

Standard

novel-tஅன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம். என் பெயர் விக்னேஷ்வரன். சில ஆண்டுகளுக்கு முன்னால் நானும் என் மனைவி விஷ்ணுப்ரியாவும் UK-வில் வசித்துவந்த போது நாங்கள் இருவரும் சேர்ந்து வாசித்து மகிழ்ந்த ‘அமெரிக்க தேசி’யை அவள் வெகுவாய் ரசித்து தங்களுக்கொரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். லட்சியம், கனவு, கற்பனை, விருப்பம், தேடல் என்ற பல உந்துதல்களால் வெளிநாட்டில் மேற்படிப்பு படிக்க வந்த நான், பல்வேறு சம்பவங்கள் மற்றும் அனுபவங்களின் வழியாக என் தேடலின் முடிவு நான் தொடங்கிய இடத்திலேயே உள்ளது என்று கண்டுகொண்ட நாட்களில் தான் நாங்கள் அமெரிக்க தேசியை வாசித்தோம். ஆகையால் தேசிகனின் வாழ்க்கையை மிகத் தெளிவாக என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நான் இப்படி கனவுத்தேடலில் (பொறுப்புணர்ச்சியோடும் தான்) ஈடுபட்டுக்கொண்டிருந்த காலங்களில் என் பெற்றோர்களும் உற்றோர்களும் எங்கள் வருங்காலத்தைப் பற்றியும் என் நடவடிக்கைகளையும் எண்ணி எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்று பின்னால் இப்போது தெளிவாகப் புரிந்தாலும் அப்போது அந்த அனுபவங்கள் எனக்குத் தேவை தான் என்றும் நம்புகிறேன். ஒருமுறை என் மனைவி என் அப்பாவிடம் அமெரிக்க தேசியைப் பரிந்துரைத்து புத்தகத்தை ஆர்டர் செய்து வரவழைத்தும் கொடுத்தாள். அப்பா நூலினை அவ்வப்போது ‘வாக்கிங்க்’ போகும்போது எடுத்துச் சென்று வாசித்தார் என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் அது அவருக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அவரது டைரிக்குறிப்புகள் வழியாக அறிந்தேன். அதனைப் புகைப்படம் எடுத்து இத்துடன் இணைத்துள்ளதோடு அவரது எழுத்தினை சுலபமாகப் படிப்பதற்கு ஏதுவாக ஒரு வேர்டு டாக்குமெண்ட்டில் தட்டச்சு செய்து அதனையும் இணைத்துள்ளேன்.
Continue reading

மாநகர் (சு)வாசம்

Standard

மார்கழி தை முடிந்து இன்றும் குளிர்கிறதே காலையில் பத்து மணிக்கும் மாநகரில் பல இடங்களில் பனிப்புகை போலிருக்கிறதே. உலகில் பல மாநகரங்களில் மாசுக் காற்றினால் இன்றளவில் ஆண்டு முழுவதும் இவ்வாறான பனிப்புகைக்காலமே. முன்பனி பின்பனி என்றில்லை நடுபனி கெடுபனி. அனைத்துமே பகலில் வெளிர் மஞ்சள் நிறத்தில்.

மதிபேசிக்களில் ‘க்ளீன் யேர் இண்டக்ஸ்’ போன்ற ஆப்புக்களின் வழியே சுற்றுச்சூழலையும் அவற்றின் மாசுக்களையும் பொறுப்பான குடிமகனாக நாள்தோறும் கவனித்து காரேரி அலுவலகம் சென்றதும் ‘இந்த நாடு நேரே நாய்களிடம் சென்றுகொண்டிருக்கிறது’ என்று சக மதிபேசித் தலைமுறையினரிடம் கையாலாகாத அறச்சீற்ற முறையீட்டில் பொறுப்பைத் தட்டிக்கழித்துவிடும் என்னைப்போன்ற மற்றுமொரு ‘வாட்ஸப் வாரியர்’ ஆக இருக்கும் உங்களுக்கும் இது தெரிந்ததே.

உலக நாடுகளின் சுவாசக் காற்றுத் தரத்தின் அளவீடு மணிநேர துல்லியத்தில் [https://waqi.info/] இணையதளத்தில் கிடைக்கிறது. கார்பன் சல்பர் நைட்ரஜன் இவற்றின் ஆக்சைடுகள் சுவாசிப்பதால் காலப்போக்கில் கேடு என்றால் சாலைப் போக்குவரத்தினால் காற்றில் உலவும் துகள் மாசுக்கள் நுரையீரலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்பவை.
Continue reading

நூலறிவு

Standard

மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களை — உயிர் மெய் உயிர்மெய் என — வைத்துக்கொண்டு அம்மொழியின் சொற்களை உருவாக்கலாம். அதே பழைய அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களால் திடீரென ஒருநாள் அன்றுவரை அம்மொழியில் இல்லாத புதிய சொற்களையுமே உருவாக்கலாம். உச்சரிப்பிற்குத் தேவை எனக் கருதி இன்னொரு நாள் சொல்லாகவே கண்டெடுத்த ஓசைத்துண்டைப் பிரித்து மேய்ந்து புதிய அடிப்படை ஒலிக்குறி ஒன்றை அதுவரையில் அம்மொழியில் இல்லை என்றாலும் கண்டுகொண்டு சேர்த்துக் கொள்ளல்லாம். மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்களையே விருத்தி செய்கிறோம் என்றாகலாம். அம்மொழி ஆதரவாளர்களின் எதிர்ப்பும் அதற்கான சமாளிப்புகளும் தனி.

மொழி வளர்ச்சியில் மேற்படி முறைமை ஒருவாறு இயங்குவதால் கூடுதலாக ஒன்றையும் சொல்லலாம்: முயன்றால் அடிப்படை எழுத்துக்களை வைத்துக்கொண்டு ஒரு மொழியின் அனைத்துச் சொற்களையும் — அம்மொழி அகராதியை — உருவாக்கிவிடலாம். ஆனால் எதிர்போக்கில் ஒரு மொழியின் சொற்களில் சிலவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அம்மொழியின் அடிப்படை ஒலிக்குறி எழுத்துக்கள் அனைத்தையும் கண்டுகொள்ள இயலாது. அதாவது சொல்லகராதி எனும் புத்தகத்தைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழியில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை வாசித்த பின்னரும் அம்மொழியின் அனைத்துச் சொற்களையும் தெரிந்துகொண்டுவிட இயலாது.

மேற்படி வியர்த்தமான முயற்சியே அறிவியலில் — குறிப்பாக இயற்பியலில் — இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
Continue reading

மெக்கானிக்கல் பொறியியல் துறையின் வருங்காலம்

Standard

அடுத்த பத்து வருடங்களில் நம் நாட்டில் ‘மெக்கானிக்கல் இஞ்சினியரிங்’ துறையின் வருங்காலத்தை அலசுவதற்கென ஒரு வருடம் முன்னால் அகில இந்திய தொழிற் கல்வி குழு (AICTE) இணையம் வழி கருத்தரங்கு ஒன்றை நடத்தினர். அக்கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிற்றுரை வழங்கச் சொன்னார்கள்.

2021 AICTE FutureME Workshop at IISc கருத்தரங்கு சுட்டி: [https://mecheng.iisc.ac.in/mecheng75/workshop.html]

ஆங்கிலத்தில் சுமார் ஐந்து நிமிடங்கள் வரவேற்புரையைக் கானொளியாகச் செய்து அனுப்பியிருந்தேன். வரவேற்புரை வரவேற்பைப் பெற்றதாக அறிந்தேன். அக்கானொளியை கீழே கொடுத்துள்ளேன்.

தமிழில் சாரம் பின்வருமாறு. (வாசிக்க ஐந்து நிமிடத்திற்கு மேலாகலாம்)

அனைவருக்கும் வணக்கம். கருத்தரங்கின் மூன்று உட்பிரிவுகளில் விவாதங்களை வழிநடத்தும் நோக்கில் சுருக்கமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.

கணினி நிரல்கள் எழுத முடிந்தவர்களுக்குக் கல்லூரிப் பட்டப்படிப்பு தேவையில்லை. இதுவே இன்றைய சிலிக்கன் பள்ளத்தாக்கின் வாதம். கணினி ஐடி துறையைப் பொறுத்தவரை சரியே — முன்னோடிகள் என்று அறியப்படும் அத்துறையின் தலைவர்கள் இவ்வகையினரே. கல்லூரிப் படிப்பை முடிக்காமல் கைவிட்டவர்கள். ஆனால் மிகக் கடுமையான உழைப்பாளிகள். இந்த விஷயம் கேலிப்பேச்சின் முனைப்பில் மறந்துவிடும். இது கேலிப்பேச்சல்லவே.

Continue reading

புத்தகம் பேசுது — நேர்காணல்

Standard

தமிழர்களுக்கு என் சிந்தனையும் எழுத்தும் இன்றளவிலும் பயனளிக்கும் என்று என்னைத் தவிர இன்னமும் மூன்று நான்கு பேர்கள் நம்பிவருகின்றனர். அவர்களில் ஒரு விடாப்பிடி அன்பர் பாரதி பதிப்பாலயம் நடத்திவரும் பாரதி டிவி-யில் எனது நேர்காணல் வரவேண்டும் என விரும்பினார். அந்நேர்காணலின் எழுத்து வடிவம் ஜூலை 2021 மாதம் புத்தகம் பேசுது இதழில் வெளிவந்துள்ளது — இணைய இதழின் சுட்டி.

நேர்காணலின் சாரத்தைத் தொகுத்து கீழேயும் அளிக்கிறேன். அனைத்து கேள்விகளும் உலகே உன் உருவம் என்ன எனும் என் கட்டுரைத் தொகுப்பு நூலை முன்வைத்து கேட்கப்பட்டுள்ளது.

Continue reading

அமெரிக்க தேசி — கோமாளி மேடை குழு வாசிப்பு அனுபவம்

Standard

novel-tமதிப்பிற்குரிய எழுத்தாளர் அருண் நரசிம்மன் அவர்களுக்கு, வணக்கம்.

தங்கள் நாவலை பற்றி விரிவாக எழுத வேண்டியே இந்தப் பதிவு. நன்றி

திருச்சி ஶ்ரீரங்கத்தில் படித்த இயற்பியல் பட்டதாரி அமெரிக்காவில் ஆய்வுப் படிப்பு படிக்கச் சென்று அந்த கலாசாரத்தில் கலந்து என்ன கற்றுக்கொண்டார், பெற்றுக்கொண்டார் என்பதுதான் கதை.

தேசிகன் நரசிம்மச்சாரி என்ற கதைநாயகனின் பெயர்தான், அமெரிக்கன் தேசி என்று மாறியிருக்கிறது. நூல் ஏறத்தாழ சேட்டன் பகத்தின் நாவல் போன்றதுதான் என்று மேலோட்டமாக தோன்றும். ஆனால் வாசிக்கும்போது, அந்த நினைப்பே உங்களுக்குள் வராது. காரணம், அருண் நரசிம்மன் அந்தளவு தமிழ் இலக்கிய விஷயங்களை உள்ளே நுட்பமாக வைத்திருக்கிறார். தமிழ் பாசுரங்களை, திருக்குறள்களை சூழலுக்கு ஏற்ப நுணுக்கமாகப் பயன்படுத்தியிருப்பதால் நாவல் எழுநூறு பக்கத்திற்கு நீண்டாலும் பெரிய சோர்வு ஏற்படவில்லை. நிறைய இடங்களில் அவல நகைச்சுவை காட்சிகளை புன்னகையுடன் படிக்க முடிகிறது. எழுத்தாளரின் சொல்லாட்சி ஆச்சரியப்படுத்துகிறது.
Continue reading

கலை என்றால் என்ன — தொல்ஸ்தோய்

Standard

தொல்ஸ்தோய் சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் ‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பில் What is Art? ஒரு ஆக்கத்தை வழங்கினார். எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து பதினைந்து வருடங்கள் பல வடிவங்களில் எழுதி இறுதியிலும் முடிவான வடிவமென்று தனக்கு முழுவதும் திருப்தியில்லாத ஒன்றையே அளித்தார். அவ்வாக்கத்திற்கு இன்றளவில் இரண்டு ஆங்கில வடிவங்கள் உள்ளன. இவற்றை வாசித்ததும் புரிபடுவது எவை நல்ல கலை எனச் சொல்ல முனைந்து எவையெல்லாம் நல்ல கலைகளல்ல என்பதையே தொல்ஸ்தோய் தன் பார்வையில் நிறுவியுள்ளார் என்பதே.

‘கலை என்றால் என்ன’ எனும் தலைப்பின் கீழுள்ள புத்தக வடிவம் சில அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் சில நூறு பக்கங்களில் ஒரே பெரிய கட்டுரை. அதைச் சுருக்கிச் ‘சிறு கட்டுரை’யாக்குவது அபத்தம். சோம்பேறிகளின் வசதிற்கேற்ப மூலத்தைச் சுருக்கி முகநூல் பதிவாக்கும் செயல். அப்பணியையே இங்கு செய்ய முனைந்துள்ளேன். முன்பின் தொடர்பு துறந்து பிய்த்தெடுத்தாலும் பொதுவான பொருள் மாறுபடாதிருக்கும் என நான் கருதும் சிற்சில பகுதிகளை மட்டும் தொகுத்து இக்கட்டுரையில் வழங்கியுள்ளேன். முன்பசிக்கு என்றே கொள்ள வேண்டும். வாசித்ததும் கலை பற்றி தெளிவுகளைவிட மேலதிகச் சந்தேகங்களையே கிளப்பி விட்டிருக்குமானால் வெற்றியே. புத்தகத்தின் ஆங்கில வடிவையோ அல்லது தமிழில் வெளியாகும் முழு வடிவையோ நாடுவதற்கு இக்கட்டுரை உங்களுக்கு வழிகோலியிருக்கும்.

இது வரிக்கு வரி ருஷ்ய மொழியில் இருந்து தமிழுக்கு செய்யப்பட்ட மொழியாக்கம் அல்ல. அவ்வாறு செய்வதற்கான மொழி நிபுணத்துவமும் முனைப்பும் என்னிடம் இல்லை. மேற்சொன்ன இரண்டு ஆங்கில வடிவங்களையும் சில துணை நூல்களையும் வாசித்து தொல்ஸ்தோய் கலை பற்றி கொண்டிருந்த கருத்துகளின் சாரத்தையே இப்புத்தகத்தில் (சுருக்கி இக்கட்டுரையில்) வழங்கியுள்ளேன்.

வழக்கம் போல பூச்செண்டுகளை தொல்ஸ்தோயிடமும் செங்கற்களை என்னிடமும் அனுப்பிவையுங்கள்.

இனி தொல்ஸ்தோய்…

Continue reading

தொல்ஸ்தோயின் காதல்

Standard

நான் முதல் முதலில் ஆன்னா காரனீனாவை படிக்க ஆரம்பித்தது வருடங்களுக்கு முன் என் முதுகலைப் பட்ட ஆய்வுக் கட்டுரைக்காக. அப்போது எனக்கும் காதலில் விழும் வயது – கவனியுங்கள், காதலிக்கும் வயதில்லை, காதலில் விழும் வயது.

ஒரு காதல் கதையைப் படிக்கும் மனநிலையில்தான் அதை முதலில் வாசித்தேன். கதாமாந்தர்களுடைய மனப்போராட்டங்களையும் தேர்வுகளையும் காதல் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்த்து, அவர்கள் எதைச் சரியாகச் செய்தார்கள், எதைத் தவறாகச் செய்தார்கள் என்றெல்லாம் என்னுடைய தனிப்பட்ட நெறிமுறைகளின் வழியே மதிப்பிட்டு, அவர்களின் செயல்களை மெச்சி அல்லது கண்டித்து ஆராய்ந்தேன்.

பிறகு ஆன்னாவை எட்டு முறை படித்துவிட்டேன்.

Continue reading

பௌதிகம் என்கிற இயற்பியல் ரகசியங்கள் புத்தகத்திற்கான அணிந்துரை

Standard

கல்விச் சாலைகளுக்கான துறைசார் பாடப்புத்தகங்களை ஒருபுறம் இருத்திக்கொண்டால் வெகுஜன வாசகக் களத்தில் தற்கால தமிழ் அறிவியல் எழுத்தை இரண்டு வகையாகப் பார்க்கலாம். வாசகர்களை அவர்களின் அறிவு-வாசிப்பு நிலையிலேயே இருத்திவைத்து அறிவியலை அவர்களிடத்தே கொண்டுசெல்ல முயல்வது ஒரு வகை. அறிவியல் கருத்தாக்கங்களை அவற்றின் சிக்கல் சிடுக்குகளோடு விவரித்துச் சொல்ல முயல்வது இன்னொரு வகை. ஒன்றை சுஜாதா வகை என்றால் அடுத்ததை பெ. நா. அப்புசுவாமி வகை எனலாம். இரண்டிலும் சாதக பாதகங்கள் உள்ளன.

எளிமை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதப்படும் சுஜாதா வகை அறிவியல் கட்டுரைகள் (உள்ளடங்கிய புத்தகங்கள்) அனைத்து வகையினரையும் ஆர்வத்துடன் வாசிக்கவைத்துவிடும். அனைவராலும் வாசிக்க இயலும் என்பதால் தினசரிகளில் வாராந்திரிகளில் வர்த்தகவெளியில் இவ்வகை எழுத்தே பிரபலம். ஆனால் பல சமயங்களில் அறிவியலை அறிமுக நிலையிலும் இவ்வகை எழுத்து நீர்க்கடித்தே அளித்துவிட்டிருக்கும். அடிப்படை கருத்தாக்கங்களையோ செயல்பாடுகளையோ பிரதானமான அறிவியல் நிகழ்வுகளையோ விவரித்து விளக்காமல் அல்லது சுருக்கிச் சொல்லிவிட்டு சார்ந்த தகவல்களையும் சுவாரசியமான செய்திகளையுமே முன்னிறுத்தி நீட்டிமுழக்குவது இவ்வகை எழுத்தின் அறிகுறி அதிகுறை. நேனோ டெக்னாலஜி பற்றிய சுஜாதாவின் சிறு புத்தகம் இவ்வகை எழுத்திற்கான சமீபத்திய உதாரணம்.

Continue reading

பரிவாதினி விருது விழாவில் என் சிற்றுரையின் சாரம்

Standard

வருடந்தோரும் இசை வாத்தியக்கருவிகளைச் செய்யும் கலைஞர்களை கௌரவித்து பரிவாதினி நடத்திவரும் விழாவில் நாகஸ்வரம் செய்கலைஞன் ரங்கநாத ஆசாரியின் நூற்றாண்டையொட்டி அவரது மகனுக்கு விருது வழங்கித் தங்களை கௌரப்படுத்திக்கொண்டார்கள்.

நவம்பர் 30, 2019 நடந்த அவ்விழாவில் ‘வெளி’ப்பார்வையாளனாய் சிற்றுரை வழங்கினேன். அதன் கானொளி பரிவாதினியின் யூடியூப் தளத்தில் உள்ளது. கீழேயும் கொடுத்துள்ளேன். அக்கானொளியில் என் பேச்சு ராம் அறிமுகம் செய்து பொன்னாடை வழங்கியபின்னர் சில நிமிடங்கள் வருகிறது.

கானொளி சுட்டி: https://www.youtube.com/watch?v=LxgatEHrJvE

என் உரையின் சாரம் பின்வறுமாறு.

நான் பிறந்த ஊர் குடவாசல். சுற்றி திருச்சேரை நாச்சியார்கோயில் திருநாகேஸ்வரம் ஆண்டாங்கோயில் அய்யம்பேட்டை வலங்கைமான் பாபநாசம் கொரடாச்சேரி இஞ்சிக்குடி மன்னார்குடி… இன்னும் கும்பகோணத்தையே சொல்லவில்லை… எங்கு கேட்டாலும் நாகஸ்வரம் ஒலித்துக்கொண்டிருந்த காலம். அது அந்தக் காலம்… என்கிறேன். ஏதோ நூற்றாண்டுகள் தள்ளிய மூதாதையர் காலம் போல. நான் சொல்வது எழுபது எண்பதுகளில். யார் பெயரையோ இனிஷியல்கள் மட்டும் பெரிதாகத் தைக்கப்பட்டிருக்கும் குஞ்சம் வைத்த வர்ண அழுக்கு ஜமக்காளங்கள் விரித்த தாத்தா வீட்டுத் திண்ணையில் சிறுவனாய் சிதறியிருக்கும் மஞ்சள் அரிசி சந்தனம் வெற்றிலை இவற்றில் முட்டி பதிய நாகஸ்வரத்தின் எச்சில் ஓடையாய் ஒழுகும் ஒலிவாய்க்கு அருகில் என் வலக்காது (எதிர் பக்கம் அமர பயம். தவில் குச்சி அடித்துவிடும்). பார்வை திரும்புகையில் அந்த ஒலிவாயே பெரிய லௌட்ஸ்பீக்கர் போல பதிந்துவிட்ட மனக்காட்சி. அந்தக் கேள்வி ரசனை மட்டுமே இன்று இங்கு மேடையேறிப் பேச முனைகிறது. எனக்குப் பாட வராது. பிழைத்தது இசை.

போதும் பூர்வ பீடிகை. இதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது…

நல்ல பந்தோ மட்டையோ இல்லையேல் கிரிக்கெட் இல்லை. நல்ல அடுப்பு இல்லையேல் நளன் இல்லை. சுவர் இல்லையேல் சித்திரம் இல்லை. நம்பகமாக வேலை செய்யும் நல்ல கடிகாரங்கள் வந்த பிறகே மாலுமிகளால் உலகம் உருண்டை என்கிற நிருபணத்தை உலகோர் ஏற்க வழங்க முடிந்தது. அதற்கு முன்னால் கொலம்பஸ் இந்தியர்களைக் காண விரும்பி சரியான கடிகாரங்களோ காந்த புலம் காட்டிகளோ இல்லாமல் தான் கண்டடைந்தவர்களை இந்தியர்கள் என்றார். கொலம்பஸ் அன்று சொன்னது இன்று சரியாக வரலாம். இன்று நிறைய புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதால் அமெரிக்கா இந்தியா போலத்தான்.

Continue reading

அமெரிக்க தேசி — வாசகி விஷ்ணுப்ரியா வாசிப்பு அனுபவம்

Standard

novel-tஅன்புள்ள ஆசிரியருக்கு,

சமீபத்தில் உங்களுடைய அமெரிக்க தேசி நாவலை வாசித்த பாதிப்பில் என்னுரையை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவை உங்களுக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று வெகுநேரம் யோசித்து இப்போது அனுப்புகிறேன். புத்தகத்தை எழுதியதற்கு நன்றி. அருமையான அனுபவத்தைக் கொடுத்தது.

இப்படிக்கு,
விஷ்ணுப்ரியா
__

அமெரிக்க தேசி — நான் முழுவதுமாய் வாசித்த முதல் தமிழ் நாவல். அருமையான படைப்பு. எனது வாசிப்பனுபவத்தை பகிர நினைக்கிறேன்.

அதற்குமுன், தாய்மொழி தமிழ் என்றாலும் பள்ளியிலோ கல்லூரியிலோ தமிழே படிக்காமல் வளர்ந்தவள் நான். வீட்டில் அம்மா பயிற்றுவித்தது தான். அதுவும் வியாழந்தோறும் காலை ‘துக்லக்’ படிப்பதற்க்காகக் கற்றுக்கொண்டேன். நாவலை பற்றி பேசுவதற்கு முன் இந்த பேச்சுத் தேவைதானா என்றால் – இரண்டு காரணங்கள். முதலாவது, எச்சரிக்கை – சொல்பிழை, எழுத்துப்பிழை இருக்கலாம். இல்லை, நிச்சயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். மற்றோன்று பிறகு சொல்கிறேன்[**].

அமெரிக்க தேசி — இது ஸ்ரீரங்கத்து தேசிகனின் கதை. தேசிகன் என்கிற “தேசி” 25 வயது ஸ்ரீரங்கத்து இளைஞன். பிறந்தது முதல் முதுகலை படிப்பு முடித்து வேலை வரை அனைத்துமே ஸ்ரீரங்கத்தில் தான். அதி புத்திசாலி. (உலக)இலக்கியம், (உலக) இசை, இதிகாசம், புராணம், அறிவியல், பொருளாதாரம், தத்துவம், ஆழ்வார் பாசுரங்கள் என பன்முக அறிவு. தகவல் வெள்ளத்தை அறிவெனக்கருதாத தெளிவு வேறு. வசீகரன். பெண்களை கரெக்ட் செய்வதெல்லாம் தேவையே இல்லை. தானாகவே விழுந்துவிடுவார்கள்.

முதுகலை இயற்பியல் படிப்பு முடித்து அங்கேயே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. நல்ல காதலும் அமைந்திருந்தது. ஆனாலும் போதவில்லை. சாதிக்கவேண்டி பி.எச்.டி படிப்பிற்காக வீட்டையும் காதலையும் துறந்து சுயத்தைத் தேடி அமெரிக்கா செல்கிறான்.

இந்த நாவலில் பிடித்தவை என்றால் ஏராளம். அதில் ஒன்று கதாநாயகநின் அகப்போராட்டங்களை பற்றிய நுண்ணிய சித்திரம். புறத்தை மட்டும் கண்டால் — இவனுக்கெல்லாம் என்னடா கேடு என்பது போலத்தான் இருக்கும் தேசிகனின் வாழ்க்கை. உள்ளூரிலும் சரி. அமெரிக்காவிலும் சரி. அவனுக்கு வெற்றிக்குமேல் வெற்றி என்று தெரிந்தாலும் அவனது மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களை தடைகளை ஏமாற்றங்களை அவன் எப்படி ஹேண்டில் செய்து தன்னை தானே அறிந்து கொள்கிறான் என்பதை அட்டகாசமாய் விவரித்துள்ளார் ஆசிரியர். நகைச்சுவைக்கு குறைவேயில்லை. சிரித்து கொண்டே இருக்கலாம். கடைசீ சாப்டர்ஸில் தான் கொஞ்சம் வளவள கருத்துக்கள் என தோன்றுகிறது.

Continue reading

மொட்டை வியாபாரம்

Standard

நாவிதர் மொட்டை அடித்துவிடத் தயங்குகிறார். சொற்ப வயதாங்கில் எதுக்கு சாரே… கொஞ்சந்தானே சாரே இருக்கட்டுமாகிலே… ரஜினி ஸ்டைலா இருக்கங்கில் யோஜிக்கறன் யாண்… அப்பிடியே நிமிட்டா செதுக்கி விட்டு வைக்கிறனே… ரெம்ப எடுக்காங்கில் லேடிஸுக்குலாம் பிடிக்காது சாரே… நீங்கள் எதுக்கும் உங்கன வீட்டில் மேடத்த ஒருடைம் கன்ஸல்ட் பண்ணி… பின்ன இந்த உன்னி ஒங்களப் பின்னி… ஏதேதோ சாக்குபோக்கு சொல்கிறாரே ஒழிய மழிக்க மறுக்கிறார்.

முழுவதும் மழித்துவிட்டால் கேசம் வளர்ந்து சிகை மீண்டும் இன்றிருக்கும் அதே நிலைக்கு வருவதற்கு ஒரு வருடமாகலாம். அதுவரை அவரை நாடத் தேவையில்லை. அவர் வரும்படிக்குப் பங்கம். ஆங்காங்கே நுணிப்புல் நறுக்கி கிருதா மட்டும் திருத்தி (சவரம் தனி) பின்மண்டையில் அடியே கோடு போட்டு உத்திரணியால் டெட்டால் நீர் தெளித்துப் பின்னழகு புரிய பெருமாளாக்கிக் கண்ணாடி காட்டி அனுப்பிவைத்தால் ஆயிற்று. மாதமொருமுறை சிகையலங்கார உற்சவத்திற்கு நாம் பரம பாகவதோத்தமரான அவரையே நாட வேண்டியிருக்கும். வருடம் முழுவதும் அவரது வருமானம் நம் முடிபோல வளரும்.

நாவிதரின் வியாபார உத்தி… ஒரே மொட்டைக்கு ஆயிரம் ரூபாய் தரமாட்டோம் ஆனால் பத்து முடி திருத்தத்திற்குத் தலைக்கு ஒருமுறை நூறு ரூபாய் தரத் தயங்கமாட்டோம். வருடம் முழுவதற்கும் ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதால் நாவிதர் மொட்டை அடித்துவிடத் தயங்கும் வியாபாரத்தில் பெரும் அநியாயமில்லை என்றுமே கருதுவோம்.

மருத்துவமனைகளும் அவற்றைப் பராமரிப்பவர்களும் இன்று இதே உத்தியைக் கையாளத் தொடங்கிவிட்டனர்.
Continue reading

அமெரிக்க தேசி – வாசகர் வையவன் கருத்து

Standard

அன்புள்ள அருண் நரசிம்மன்,

வணக்கம். தங்கள் ‘அமெரிக்க தேசி‘ வாசித்துக்கொண்டிருக்கும் நான் அடையாறு வாசி. நான் சும்மா டுபாக்கூர் டப்ஸாக் கதைகளையே கடந்த அறுபது ஆண்டுகளாகக் குப்பை கொட்டிவருகிறவன்; மக்கள் ஏற்பதால் . நான் எண்பதை எட்டிக்கொண்டிருந்தால் என்ன? சூத்திரனாய் இருந்தால் என்ன? என் ஸ்ரீ வைஷ்ணவ நேசத்தை , ஸ்ரீ ராமானுஜ பாசத்தை, யார் தூர நிற்கவைக்க முடியும்?

ஓங்கி உலகளக்கிற உங்கள் உத்தேச சுத்தி சித்தியை எட்டுவதைக் காணும்வரை சிந்தை அடக்கிச் சும்மா இருக்க மாட்டாமல் பக்கம் 215 ல் மாட்டிக்கொள்கிறேன். அனுபவங்களின் பிரபஞ்சப்பெருவெளியில் இப்படி சிறுசிறு வாக்கியங்களில் ஒரு மடக்கு, இடக்கு, ஒரு சொடக்கு ஒரு மிடுக்கு, வடக்கு தெற்கு என்று கலைவகைகளோடு அன்று உஷா சுப்பிரமணியம் சூட்சுமம் காட்டிய கா.சூ கலையிலும் உள்ள விதக்த வித்வத் வினோமயத்தை சுளீர் சுளீர் என்று மின்னல் வீச்சாய் வீசிக்காட்டிக்கொண்டு போனால் தமிழ் எப்படி ஸ்வாமி தாங்கும்? ஒற்றை வார்த்தையில் ஒரு சுத்தியடி முஸ்தீபு இடையிடையே.
Continue reading

தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியில் திருமதி உஷா சுப்பிரமணியன் வழங்கிய ஆய்வுரைக்கு எனது பதில் கருத்துகள்

Standard

அமெரிக்க தேசி நாவலை ஆய்வறிக்கை வழங்கி அறிமுகம் செய்த தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்ச்சியை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். ஆய்வறிக்கை வாசித்த திருமதி உஷா சுப்பிரமணியன் நானூறு சிறுகதைகள் எழுதியுள்ளார். பல்கலைத் திறனாளியாகப் பல விருதுகள் பெற்றுள்ளார். ஆய்வு விமர்சனம் பாராட்டு என்று விரிவாக எழுதிக் கொண்டுவந்து வாசித்தார். நேரத்திற்குள் அனைத்தையும் இல்லையென்றாலும் அநேகத்தைச் சொல்லிவிட்டார் என்றே நினைக்கிறேன். புத்தகத்தை நிறைய பாராட்டினார். ஆசிரியருக்கு நிறைய தெரிந்திருப்பதால் அனைத்தையும் சொல்லிவிட நினைத்திருக்கிறார் அதுவே குறை என்றார். இது நாவலா… சம்பவங்களின் கோர்வையா டைரி குறிப்பு எனலாம் ஆனால் பிரமிக்க வைக்கும் எழுத்து… இப்படி சில கருத்துக்களையும் முன்வைத்தார். அவரது அனைத்து கருத்துகளுக்கும் கேள்விகளுக்கும் எனக்களிக்கப்பட்ட (பத்து நிமிட) நேரத்திற்குள் என்னால் விரிவாக பதிலளிக்க முடியவில்லை. ஓரிரண்டிற்கு இங்கே மேலதிக விளக்கமளித்து வைக்கிறேன். எதற்கு என்று தெரியவில்லை; Have blog, will write… ரீதியில் எனது திருப்திக்கு என்று வைத்துக்கொள்வோம்.

*

வழக்கமாக வரும் கேள்வி இந்த நாவல் உங்கள் சுய சரிதையா. திருமதி உஷாவும் முன்வைத்தார். நாம் இல்லை என்று மறுக்க மறுக்க அது ஆமாம் ஆமாம் அதுமட்டுமேதான் என்றே கேட்பவரின் காதுகளில் ஒலிக்கும். சைபிரியாவில் எத்தனை குளிர் என்றால் வாட்டர் என்று டைப் அடித்தால் ஐஸ் என்றுதான் திரையில் விழுமாம்.
Continue reading

தமிழ் புத்தக நண்பர்கள் நிகழ்வில் என் பேச்சின் பகுதிகள்

Standard

நான்கு வருடங்களாக மாதம் ஒருமுறை நடத்தப்படும் தமிழ் புத்தக நண்பர்கள் அமைப்பின் 51ஆவது நிகழ்ச்சி நேற்று (27/11/2018) மைலாப்பூர் திதிகே சாலையில் உள்ள டேக் (TAG) மைய அரங்கில் நடந்தது. எனது நாவல் அமெரிக்க தேசி பற்றி திருமதி உஷா சுப்பிரமணியன் விமர்சக ஆய்வை முன்வைத்துப் பேசினார். பிறகு என் ஏற்புரை, கேள்வி-பதில் நேரம். அதன் பகுதிகளை ஐந்து மதிபேசி கானொளிக் கோப்புகளாக இங்கே கொடுத்துள்ளேன் (அனுப்பிவைத்த வாசக அன்பருக்கு நன்றி). மொத்தம் சுமார் 15 நிமிடங்கள்.

பேச்சை மீண்டும் கவனிக்கையில், விசாலம் என்பதை விலாசம் என்றிருக்கிறேன். பேச்சிலேயே எழுத்துப்பிழைகள் எழுத்தாளர் ஆவதற்கான மற்றொரு தகுதியோ… :-)
Continue reading

42 என்கிற விடையின் ஆகச்சிறந்த வினா

Standard

“நாற்பத்தியிரண்டு,” என்றது ஆழ்ந்த சிந்தை; முடிவில்லா கம்பீரத்துடனும் பேரமைதியுடனும். (டக்லஸ் ஆடம்ஸ்-ஸின் “ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி, பக்கம் 120)

டூக் ‘உலகின் முதல் மனிதன்’ ஆடம்-மின் வாசகர்களை 1986 முதல் நச்சரிக்கும் கேள்விக்கான பதிலை, அதாவது அவரது பதிலுக்கான சரியான கேள்வியை, இக்கட்டுரையில் பெறப்போகிறோம். கொஞ்சம் அறிவியல். கொஞ்சம் புனைவு. நிறைய ஊகித்த கருத்தாக்கம். மொத்தத்தில், ஓரளவு எண்ணித் துணிந்த கருமமாக.

டக்ளஸ் ஆடம்சின் ‘ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு தி காலக்ஸி’ புத்தகத்தை இதுவரை வாசித்திராதவர்களுக்கு — அனுதாபங்களுடனும் — சிறு விளக்கத்துடனும் தொடங்குவோம்.

அப்புத்தகம் அளிக்கும் புனைவின் கிளைக்கதையாக ‘ஆழ்ந்த சிந்தை’ (Deep Thought) எனும் பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த கணினியை ஏலியன் சமுதாயம் உருவாக்கும். பிரபஞ்சத்தின் காரணம் என்ன என்பதை கண்டுபிடிப்பதற்காக. அக்கணினியும் வெகுநாள் செயல்பட்டு கண்டுபிடித்துவிடும். நிர்ணயித்த நாளன்று, அறிஞர்கள் கூடி ஆழ்ந்த சிந்தையிடம் என்னப்பா விடை என்றதும், அது, ’42’ என்று பதிலுரைக்கும். புரியாமல் விழிக்கும் அறிஞர்களிடம், இதுதான் பிரபஞ்சத்தின் காரணத்திற்கான விடை. இதற்கான சரியான வினாவை நீங்கள் கண்டடைந்தால், ‘பிரபஞ்சம் ஏன் இருக்கிறது, ஏன் இயங்குகிறது’ போன்ற அசாத்தியமான வினாக்களுக்கெல்லாம் விடைகள் தெளிந்துவிடும் என்று சொல்லி முடித்துவிடும்.
Continue reading

திருவேங்கடாச்சாரி

Standard

மைவண்ண நறுங்குஞ்சிக் குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தார், என்முன்னே நின்றார்

மண்டை மண்டையான ஸ்பீக்கர்கள் கொண்ட ‘ஸோனி ஸ்டீரியோ’வில் ஹால் முழுதும் நிரப்பிய கணீர் குரல் தேசிகனை வரவேற்றது.

கதவைத் திறந்த வரதன் ஒத்தை விரலை உதட்டில் மீது குறுக்கிட்டு, தலையை ஆட்டி தேசிகனை உள்ளே வரும்படி சைகை செய்தான்.

இரண்டாவது வருடக் கோடை வெய்யில் வீணாகாமல் கார் ஓட்டிக் களைத்து வியர்த்து, அமெரிக்காவில் மிதவேகத்திலிருந்து அதிகரிக்கும் வேகங்களுடன் இயங்கும் அடுத்தடுத்த லேன்கள் கொண்ட ‘ஹைவே’க்களில் போக்குவரத்து, பாய்ம இயற்பியலின் ‘தகடொத்த ஓட்டத்திற்கு’ பொருந்தி வருவதைப் பற்றி யோசித்துக்கொண்டு வந்தவனை வரதன் வீட்டுப் பாடல் உடனடியாக ஸ்ரீரங்கம் இட்டுச்சென்றது.

“ஹா, திருநெடுந்தாண்டகம். யாருடா சொல்றது, வேங்கடாச்சாரி மாமாவா? ஸ்ரீரங்கத்துலயா?”

“எம்பார். எம்பார் விஜயராகவாச்சாரியார்.”

“இவ்ளோ இளமையா இருக்கு வாய்ஸ். எங்கேந்துரா புடிச்ச?”

சோபாவில் அமர்ந்தார்கள். டேப்பை நிறுத்திவிட்டு வரதன் தொடர்ந்தான். “மிருதங்க வாத்யார்ட்டேந்து. கல்கத்தால எப்பவோ சொன்னதுன்னு நெனைக்கிறேன். தியாகோபனிஷத். நீ என்ன சொன்ன திருநெடுந்தாண்டகமா?”

“ஆமாண்டா. அந்தப் பாட்டு அதுதான். பெரியாழ்வார்து. ஃபேமஸ் பாட்டுதான். வேங்கடாச்சாரி மாமா இத வெச்சு ஒரு குட்டி உபன்யாசமே பண்ணிருக்கார்.”

வேங்கடாச்சாரி மாமா எனப்படும் வேங்கடாச்சாரியார், தேசிகன் வயதில் பதினைந்து வருடங்கள் கூட்டிக்கழித்த முப்பது வருட அவகாசத்தில் ஸ்ரீரங்கம் உத்திரை வீதிகளில் ஆணாய்ப் பிறந்தவனைத் தீயாய் ஆட்கொண்ட த்ரிவிக்ரம ஆளுமை. சம்ஸ்க்ருத பண்டிதர். அஷ்டாவதானி. உபன்யாசம், கவிதை, கிரிக்கெட், காரம் போர்டு, சடுகுடு, கொள்ளிடத்தில் நீச்சல், கோயில் கைங்கர்யம், மடப்பள்ளி செல்வரப்பம் செயல்முறை, டேப்ரிகார்டர் ரிப்பேர்… இப்படி அவர் மனம் வைத்ததெல்லாம் மணக்கும். கைவைத்ததெல்லாம் கலகலக்கும்.
Continue reading