2013 டிசெம்பர் சங்கீத விழா: சுமித்ரா வாசுதேவ் கச்சேரி

Standard

2013-dec-19-dinamalar-arunn-review-sumitra[19 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் இடவசதிற்கேற்ப சுருக்கிவரையப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம். அங்கு ‘எடிட்’ ஆனவை கீழுள்ளதில் சாய்வு எழுத்தில்.]

மியூசிக் அகடெமி கச்சேரியில் சுமித்ரா வாசுதேவ் ‘நின்னே கோரிநாதிரா’ எனும் மோஹன ராக வர்ணத்தில் துவங்கினார். கவனிக்கவும், வழக்கமான ‘நின்னு கோரி’ வர்ணம் இல்லை. இனிமையான சிட்டைஸ்வரங்களுடனான இதை இயற்றியவர் பல்லவி துரைசுவாமி ஐயர்.

முதல் ஆலாபனை முகாரியில். எடுத்ததும் ராகத்தை உணர்த்தும் சஞ்சாரங்களை வழங்கிய, நேரடியான, நேர்த்தியான ஆலாபனை. ‘எந்த நின்னே சபரி பாக்யமு’ எனும் தியாகையரின் கிருதி. சபரிக்கு மோட்சம் கிடைத்ததை வியந்தேற்றும் பொருளமைந்த கிருதியை முகாரி என்பதால் அழுகையொலிக்கும் வடிவில் சிலர் பாடுவார்கள். அவ்வாறில்லாமல் மோட்சம் கிட்டியவரின் சிலிர்ப்பான தருணத்தை சரியாக முகாரியில் வெளிக்கொணர்ந்து சுமித்ரா பாடியது அருமை.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன் & மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-18-dinamalar-arunn-review-tkr-bros[18 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் ஏகத்திற்கு விழுங்கப்பட்டு வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமியின் 87ஆவது ஆண்டு இசை மாநாட்டில், திங்கள் காலை நாகஸ்வரக் கச்சேரியில் திருமெய்ஞானம் டி.கே.ஆர். அய்யப்பன், மீனாக்ஷிசுந்தரம் சகோதரர்கள் வாசித்தனர். துவக்கத்தில் சுமநீஸரஞ்சனி ராகத்திலமைந்த ஆதி தாள வர்ணம் தருமபுரம் கோவிந்தராஜன் இயற்றியது. இதில் நடைகளை மாற்றி ஸ்வரங்கள் வாசித்தது வித்தியாசம்.

திருநாகேஸ்வரம் சுப்ரமணியம், திருக்கடையூர் பாபு, என இரட்டை தவில்கள் இருந்தாலும், அகடெமியின் நேர்த்தியான ஒலி அமைப்பில் கச்சேரி இசை காதுகளுக்கு இனிமை. கௌளை, துவிஜாவந்தி, சாரங்கா, சாமா என நாகஸ்வரத்திற்கேற்ற ராகங்கள் பலதும் கச்சேரியில் வாசிக்கப்பட்டது.

கௌளையில் திக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி’ கிருதியில் ஸ்வரகல்பனை. அடுத்து அகிலாண்டேஸ்வரி என சியாமா சாஸ்திரியின் துவிஜாவந்தி ராக கிருதி. ஒத்திசைவில் பெரும்பாலும் அருமையாக வாசிக்கப்பட்ட கிருதியில், சரணத்தில் மேல்ஸ்தாயி சஞ்சாரங்களை மத்யஸ்தாயியில் வாசித்தது ஏமாற்றம். கிருதியின் உச்ச வெளிப்பாட்டை துச்சமாக்கிவிட்டது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ராமகிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி

Standard

2013-dec-17-dinamalar-arunn-review-ramakrishnan[17 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

அரங்கம் நிரம்பியிருந்த ‘சாந்தி ஆர்ட்ஸ் ஃபௌண்டேஷன்’ சாஸ்திரி ஹால் கச்சேரியில் பாடிய ராமகிருஷ்ணன் மூர்த்தியின் குரல் காத்திரமானது. சில சஞ்சாரங்களால் ஆனந்த பைரவி ராகத்தை உணர்த்தி, ‘பாஹிஸ்ரீ’ எனத் தொடங்கும் சியாமா சாஸ்திரியின் கிருதியை பாடினார்.

அடுத்ததாய் பந்துவராளி ஆலாபனை. நல்ல தொடக்கத்துடன் தேர்ச்சியுடன் வளர்ந்தாலும், விறுவிறுப்பு குறைந்து, சுருக்கிவரைந்து முடித்தார். தியாகையரின் ‘சிவ சிவ சிவ எனராதா’ எனும் ஆதி தாள கிருதி. இதன் இறுதியில் ‘பாகவதுலலோ போஸின்சி’ எனும் சரண வரியில் நிரவல் நல்ல தேர்ச்சி. இங்கு தாளவாத்தியம் இடைவெளிகளில் வாசித்த கும்கிகளும் பரன்களும் நன்று. இங்கு பிடித்த வேகம் ஸ்வரகல்பனை மேற்காலத்தில் சில உற்சாகமான பரிமாற்றங்களுக்கு இட்டுச்சென்றது. நீண்ட குறைப்பை குரலும் வயலினும் செய்து இக்கிருதியை முடித்தனர்.

பந்துவராளியை விட அடுத்து வந்த யதுகுல காம்போதி ஆலாபனை என்னைக் கவர்ந்தது. சபாஷ். ஆலாபனையின் தன்மைக்கேற்ப எதிர்பார்த்தபடி மாரிமுத்தாப்பிள்ளையின் ‘காலை தூக்கி நின்றாடும் தெய்வமே’ தமிழ் கிருதியை ஆதி தாளம் இரண்டு களையில் நிதானமாய் பாடினார். ரீங்கரிக்கும் குரலில் கிருதியை போஷித்து பாடுகையில் அரங்கமே பொலிவுற்றது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: டி. எம். கிருஷ்ணா கச்சேரி

Standard

2013-dec-16-dinamalar-arunn-review-tmk[16 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் பைன் ஆர்ட்ஸ் சபா கச்சேரியின் தொடக்கத்தில் கிருஷ்ணாவின் கன்னடா (கானடா இல்லை) சஞ்சாரங்களின் தீஞ்சுவை ஆஹா, பேஷ். தொடர்ந்து மிஸ்ரசாபு தாளத்தில் தீக்ஷதரின் ‘ஸ்ரீ மாத்ருபூதம்’ கிருதியை நிதானமாகப் பாடினார். ஸ்ரீராம்குமார் வயலினில் வரிகளை நிழலாய் நகலெடுத்தார். மிருதங்கத்தில் அருண்பிரகாஷ் கஞ்சிராவில் புருஷோத்தமன் இருவரின் மெத்தான வாசிப்பும் சௌக்யம்.

‘வாசவாதி’ எனும் வரியில் நிரவல். மரபிசையின் கடினமான அங்கமான நிரவலை கன்னடா ராகத்தில் செய்வதற்கான வித்தை கிருஷ்ணாவிடம் உள்ளது. தொடர்ந்து விளம்பகாலத்திலேயே ஸ்வரங்களை படிப்படியாக அடுக்கியது அவரிடம் மட்டுமே இன்று கேட்கமுடிந்த தெவிட்டா திரளமுது. இசையும் சொல்லும் இழைந்துவரும் சரணத்தை முடித்ததும் எழுந்த கரவொலியை அதை இயற்றிய தீக்ஷதரின் படைப்பூக்கத் திறனுக்கானதாய் கொள்ளலாம்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: அம்ருதா வெங்கடேஷ் கச்சேரி

Standard

2013-dec-15-dinamalar-arunn-review-amrutha[15 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ளதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் நவராகமாலிகை வர்ணத்தில் துவக்கிய அம்ருதா வெங்கடேஷ் பெங்களூருரைச்சேர்ந்த வளர்ந்துவரும் இசைக்கலைஞர். சரியான உச்சரிப்புடன், தமிழில் நிறைய பாடியது இன்றைய கச்சேரியின் பட்டொளி.

கௌளை ராகத்தில் தீக்ஷதரின் “ஸ்ரீ மஹாகணபதி” கிருதியில் சங்கதிகளின் அலங்காரங்கள் சற்றே மிகையானவை. ‘ரவிஸஹஸ்ர’ எனும் வரியில் தேர்ச்சியுடன் ஒலித்த ஸ்வரக்கல்பனையில் தியாகையரின் பஞ்சரத்ன கிருதியின் ஸ்வரக்கோர்வைகள் ஆங்காங்கே பளிச்சிட்டன..
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: பந்துலரமா கச்சேரி

Standard

2013-dec-12-dinamalar-arunn-review-pantularama[டிசெம்பர் 12, 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திராவில் பிரபலமான சமகால கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவரான பந்துலரமா, கௌளை ராகத்தில் சஞ்சாரங்களுடன் பாரதிய வித்யா பவனத்தில் தன் கச்சேரியைத் துவக்கினார். முத்துஸ்வாமி தீக்ஷதரின் ‘ஸ்ரீ மஹா கணபதி ரவதுமாம்’ எனும் மிஸ்ரசாப்பு தாள கிருதியில், ஸுவரகல்பனையில் மந்திரஸ்தாயி சஞ்சாரங்கள் அவருடைய காத்திரமான குரலில் ரம்யமாய் ஒலித்தது.

அடுத்ததாய் சுத்தசாவேரி ராகத்தில் ஆலாபனை. பொதுவாக அநாயாசமாக குரலை உபயோகிப்பவர், இவ்வாலாபனையில் தயங்கியே செய்ததுபோலிருந்தது. சுருக்க முடித்துக்கொண்டார். ஷேவாக் போன்றோர் தடுத்தாடக்கூடாது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: உன்னிகிருஷ்ணன் கச்சேரி

Standard

2013-dec-11-dinamalar-arunn-review-unni[டிசெம்பர் 11, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]

பந்துவராளியை இக்கால கச்சேரிகளில் பூர்விகல்யாணி ஓரங்கட்டிவிட்டதோ என்று இரண்டு நாள்கள் முன்னர் இப்பகுதியில் குறைபட்டது கேட்டுவிட்டதோ. கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் நடைபெற்ற கச்சேரியை உன்னிகிருஷ்ணன் பந்துவராளி சஞ்சாரங்களில் தொடங்கினார். “கேட்டதைக் கொடுப்பவன் உடுப்பி கிருஷ்ணன், கேட்டவுடன் கொடுப்பவர் நம் உன்னிகிருஷ்ணன்” என்றார் அறிவிப்பாளர்.

உடன் வயலினில் எம்பார் கண்ணன், மிருதங்கத்தில் திருச்சி சங்கரன், கடத்தில் வி. சுரேஷ் வாசிக்க, சுவாதி திருநாளின் ’சரோருஹாஸன ஜாயே பவானி’ கிருதியை நிதானமாகப் பாடி, ‘புரந்தராதி சுரோத்தம…’ எனும் அனுபல்லவி வரியில் நிரவலும் செய்தார்.

அடுத்ததாய் பாபநாசம் சிவன் இயற்றிய ‘கற்பக மனோஹர’ கிருதியை மலையமாருதம் ராகத்தில் கண்டசாப்பு தாளத்தில் பாடினார். வித்தியாசமான தேர்வு எனலாம். வேறு எதுவும் சொல்வதிற்கில்லை. கச்சேரியின் முதல் விரிவான ஆலாபனை வாகதீஸ்வரி ராகத்தில். சில பத்தாண்டுகள் முன்னர் டி. கே. ரங்காச்சாரி செய்த ஆலாபனைகள் உரைகல். ஆலாபனையைவிட உன்னிகிருஷ்ணன் ‘பரமாத்முடு’ எனத் தொடங்கும் தியாகையரின் கிருதியை ஆதி தாளத்தில் நிதானமாய்ப் பாடியது நேர்த்தியாக இருந்தது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: சிக்கில் குருசரண் கச்சேரி

Standard

2013-dec-10-dinamalar-arunn-review-sikkil[டிசெம்பர் 10, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]

கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் நாரத கான சபாவில் பாடிய குருசரணுக்கு வசீகரிக்கும் சாரீரம், களையான முகவெட்டு. இரண்டாமவதை அரங்கில் செல்பேசியில் அடிக்கடி இவரை க்ளிக்கிக்கொளும் ரசிகைகள் எழுதவிண்ணப்பிக்கின்றனர்.

சாவேரி ராகத்தின் சில சஞ்சாரங்களைப் பாடி, கொத்தவாசல் வெங்கடராம ஐயரின் ‘சரஸுட’ எனும் ஆதி தாள வர்ணத்தில் கச்சேரியைத் துவக்கினார். அடுத்ததாய் ‘புவனேஸ்வரியாம்’ என்று மோஹனகல்யாணி ராகத்தில் முத்தையா பாகவதரின் ஆதிதாள கிருதியைப் பாடினார். மிருதங்கத்தில் கிருதி அறிந்தவர் உடன் வாசித்தால் எவ்வாறு இசை பரிமளிக்கும் என்பதற்கு பக்தவத்சலத்தின் வாசிப்பு சான்று.

கச்சேரியின் முதல் ஆலாபனை ஆச்சர்யமாய் கன்னடகௌளை ராகத்தில். இக்கால கச்சேரிகளில் அரிதாகிவிட்ட இந்த ராகத்தில் ஆலாபனையை முயன்றதற்காக குருசரணை பாராட்டலாம். அவ்வளவாக சோபிக்கவில்லை. வயலின் சில நிமிடங்கள் ராகத்தை வளர்த்தெடுத்தார். பல நிமிடங்கள் ஸ்வரங்களாய் அடுக்கினார்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி

Standard

2013-dec-09-dinamalar-arunn-review-sanjay[டிசெம்பர் 09, 2013 தினமலர் நாளிதழில் வெளியான கட்டுரையின் ஒரு வடிவம்]

கூட்டம் அம்மும் எனத்தெரிந்து விடிகாலையிலேயே அலார்ம் வைத்து எழுந்து, சுருக்க கிளம்பி, மீட்டர் போடும் ஆட்டோவாய் பார்த்து ஏறி, அரக்க பரக்க ‘கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்’-ஸின் கச்சேரிக்காக நாரத கான சபாவை அடைந்தால், ஹவுஸ்ஃபுல். சஞ்சய்-னா சும்மாவா. வெளியே ‘வுட்லேண்ட்ஸில்’ ஏமாற்றத்தைக் குறைக்க கசப்பாய் ஒரு காஃபி அருந்துகையில் எதிரே ரவா தோசை மாமா என் ஒரு புன்னகையில் தன் அதிகப்படியான ‘டோனார் பாஸை’ கூலாய் எடுத்துக் கொடுத்தார் (பஞ்ச் அடித்ததும் திருப்பி கொடுத்துடனும்).

நேரத்திற்கு கச்சேரியை ‘சரஸிஜ’ என்று காம்போதி ராக ஆதி தாள வர்ணத்தில் தொடங்கிவிட்டார் சஞ்சய். விளம்பகாலத்தில் கார்வைகள் தெளிவாய் நிதானமாய் விழுந்தது. அடுத்து வந்த கேதாரம் ராகத்தை ஒரு சில தொடக்க சஞ்சாரங்களிலேயே காட்டிக்கொடுத்தார். தீக்ஷதரின் வர்த்தகமுத்திரையான வடிவில் சரணங்கள் அமைந்த ‘ஆனந்த நடனப் பிரகாஸாம்’ கிருதியை நிதானமாய்ப் பாடினார். இறுதியில் தில்லானா வகையில் ஜதிஸ்வரங்களுடனான சிட்டைஸ்வரங்கள் சஞ்சய்யின் அழுத்தமான வெளிப்பாட்டில் சிறப்புற்றது.
Continue reading

பாரத் ரத்னா சி. என். ஆர். ராவ்

Standard

இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத் ரத்னா’ நாட்டின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான சின். என். ஆர். ராவ்-விற்கு இவ்வருடம் வழங்கப்பட்டுள்ளது. கூடவே சச்சின் டெண்டுல்கருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

*

ராவ் இந்திய அரசாங்கத்துடன் பல்வேறு அறிவியல் சார்ந்த குழுக்களிலும் திட்டங்களிலும் தொடர்ந்து பணியாற்றியவர். பட்டியல் வெகு நீளம். பிரதம மந்திரியின் பிரதான அறிவியல்-ஆலோசனை குழுவின் தலைமைப்பொறுப்பில் (நான்கு பிரதம மந்திரிகளின் பதவிக்காலங்களை அடக்கிய காலவரையறையில்) செயலாற்றியுள்ளார். ராவ் இந்திய அறிவியல் மற்றும் அறிவியலாளார்களின் மேல் மிகுந்த பிடிப்பும் அதிகார சக்தியும் வைத்திருப்பவர். இச்செயல்பாடுகளில், நிச்சயம் இவர் கீழிருக்கும் அல்லது சக-விஞ்ஞானிகள் சிலருக்கு மூச்சு முட்டியுள்ளது. நேரடியாகவும் உட்பூசல்களாகவும் குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்துள்ளன. இக்கட்டுரையில் இவற்றைத் தவிர்க்கிறேன். ஆய்வுகளும், சார்ந்த ஓரிரு சர்ச்சைகளுமே இக்கட்டுரையின் உள்ளடக்கம்.

*

சச்சின் நம் அனைவரின் ‘டார்லிங்’. நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து நேற்று (நவெம்பர் 16, 2013) ஓய்வுபெற்றார். ஒரு சாம்பியனின் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு தியாகங்கள் எவ்வெவரிடமிருந்தெல்லாம் தேவை என்பதை உணர்த்தும் வகையில் பெற்றோர் முதல் பெருந்திரள் ரசிகர்கள் வரை அரவணைத்த அருமையான நன்றியுரையுடன் விடைபெற்றார். வருங்காலத்திற்கு கிரிக்கெட்டில் எட்டக்கூடிய சாதனைகள் எவை என்பதை நிறுவியதோடு அவற்றைச் சென்றடையவேண்டிய வாழ்க்கைப்பாதையையும் இளைய சமுதாயத்திற்கு உணர்த்தியுள்ளார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பாரத் ரத்னா.

சின். என். ஆர். ராவ் (சிந்தாமணி நாகேஸ ராமச்சந்திர ராவ்) எண்பது வயதை நெருங்கும் அறிவியல் இளைஞர். இன்னமும் ரிடையர் ஆகவில்லை. வேதியியல் விற்பன்னர். மிக முக்கியமாக, இந்தியாவிலிருந்தபடியே, இங்கிருக்கும் வசதிகளை வைத்துக்கொண்டே, ஒரு துறையில் பெருஞ்சாதனை செய்துகாட்டியவர். விஞ்ஞானம்-தொழில்நுட்பம் துறைகளில் சி. வி. ராமன் (1954), விஸ்வேஸ்வரய்யா (1955), அப்துல் கலாம் (1997) வரிசையில், பாரத் ரத்னா பெறும் நான்காவது நபர்.

சச்சின், ராவ், இருவருக்கும் சில ஒற்றுமைகளைக் குறிப்பிடலாம். தங்கள் துறையில் நம்பிக்கையானவர்கள். இளவயதிலேயே நட்சத்திரங்களாய் அறியப்பட்டவர்கள். தொழிலை, துறையை மிகவும் விரும்பித் தேர்வுசெய்துகொண்டவர்கள். நெடுங்காலம், சராசரிக்கும் மிக அதிக தரத்தில் பணியாற்றியவர்கள். செயலாற்றும் விதத்தில் இன்றளவிலும்  வெளிப்படும் குழந்தை-போன்ற உற்சாகத்தில் பலரை துறைபால் ஈர்த்தவர்கள். ஒருவர் டெஸ்ட், ஒரு-நாள், டுவெண்டி-டுவெண்டி என்று கிட்டத்தட்ட எழுநூறு போட்டிகளுக்குமேல் பங்குபெற்றவர் என்றால் அடுத்தவர் திட-வேதியியல், நேனோ-அறிவியல் துறைகளில் ஆயிரத்தைநூறுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியவர். ஒருவர் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் என்றால், அடுத்தவரின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான முறை சக ஆராய்ச்சியாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. இருவரும் இல்லறத்தில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்கள். சச்சின் தன் நன்றியுரையில் மனைவியின் உறுதுணையை “என்னுடைய பெஸ்ட் பார்ட்னர்ஷிப்” என்று சிலேடையாகச் சொன்னார். ராவ் தன் மனைவியுடன் சமையல் செய்வது பொழுதுபோக்கு என்கிறார். மனைவியுடன் இன்றுவரை குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்கு உழைக்கிறார். ராவ் இவ்வகையில் அளித்த ஒரு உரையை சில வருடங்கள் முன் நேர்முகமாய் கேட்டிருக்கிறேன். உரையின் முடிவில் நிகழ்ந்த ஹலோ-கைகுலுக்கல்களில் என் குரலும் கையும் இருந்தது.

சச்சின் சாதனைகள் பற்றிய தகவல்கள் நமக்கு பரிச்சயமே. இணையம் முதல் குமரிவரை எங்கு பெறுவது என்றும் தெரியும். சின். என். ஆர். ராவ் பற்றிய சில தகவல்களை இங்கு உராய்ந்துகொள்வோம்.

*

ராவ் தற்போது ஜவஹர்லால் நேரு உயர் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 1950-களில் அமேரிக்காவின் பர்டூ பல்கலைகழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று, பிறகு சில வருடம் பெர்க்லி கலிஃபோர்னியாவிலுள்ள பிரசித்திபெற்ற பல்கலைகழகத்தில் பின்-முனைவர் தகுதியில், நவீன வேதியியலின் தந்தை என்று கருதப்படும் ஜி. என். லூயிஸ்-உடன் சில ஆய்வுகளை மேற்கொண்டார். 1959-இல் இந்திய அறிவியல் கழகத்தில் விரிவுரையாளராக ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். பிறகு அப்போது தொடங்கப்பட்ட ஐ.ஐ.டி. கான்பூரில் இணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1976இல் மீண்டும் இந்திய அறிவியல் கழகம். இப்படித் திக்கித்திக்கித் தொடங்கிய இந்திய ஆராய்ச்சி வாழ்க்கையில் ராவ் பல இலக்குகளை எட்டியுள்ளார்.

ராவ் நேனோ-அறிவியலை இந்தியாவிற்கு கொண்டுவந்த முன்னோடி. அன்றாட அறை-சூட்டில் நிகழும் (அதி-கடத்திகள் அல்லது) மீ-கடத்திகளைப் (ரூம் டெம்ரேச்சர் சூப்பர்-கண்டக்டிவிட்டி) பற்றிய இந்திய ஆராய்ச்சிகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்சென்றவர். ஐம்பதுகளில் தொடங்கி இன்றுவரை பலபத்தாண்டுகளில் வேதியியலில் உதிக்கும் புதிய ஆராய்ச்சிக் கருத்தாக்கங்களை ஒட்டிய ஆராய்ச்சிகளை இந்தியாவில் முதன்மையாக நிகழ்த்திக்காட்டியவர். பென்ஸீன் வேதியையலில் ஆய்வுகளைத் தொடங்கியவர், 1968 வாக்கில் அ-கரிம வேதியியலுக்கும், திடப்பொருள் வேதியியலுக்கும் மாறினார். கோர்-ஷெல் கட்டாலிஸிஸ், அ-கரிம கரிம இரசாயன மாற்றங்கள், அறை-வெப்ப மீ-கடத்திகள், நேனொ-துகள்கள், நேனோ-குழாய்கள், கார்பன் நேனோ குழாய்கள், கிராஃபீன் பொருளின் தன்மைகள், கிராஃபீன் ரிப்பன்கள், குவாண்டம் பொட்டுகள், லித்தியம் பாட்டரிகள், டெம்ப்ளேட் சிந்தஸிஸ்… ராவ் ஆராய்ந்த இவையனைத்துமே வேதியியலில் வெவ்வேறு காலகட்டங்களில் முக்கியமானவையாகக் கருதப்பட்ட கருத்தாக்கங்கள்.

ஒரு ஆய்வைப்பற்றி சற்றே விரிவாக. மீ-கடத்திகள் (சூப்பர் கண்டக்டர்கள்) செய்வது பற்றிய ஆராய்ச்சி, 1911இல் கேமர்லிங் ஓனஸ் முதலில் மீ-கடத்தும் விளைவைக் கண்டறிந்ததில் தொடங்கியது. கம்பிகளில் மின்சாரம் கடக்கையில், கம்பி செய்யப்பட்ட பொருளுக்கேற்றவகையில் இக்கடத்தலுக்கு ‘எதிர்ப்பு’ கிளம்பி, சிறிதளவேனும் மின்சாரம் வெப்பமாய் விரயமாகும். இது அன்றாட மின்சாரக்கம்பிகளில் இன்றளவும் நிகழ்கிறது. சில பொருள்களை குளிர வைக்கையில், இந்த ‘எதிர்ப்பும்’ குறையும் என்று ஓனஸ் கண்டுபிடித்தார். இதனால், இவ்வெதிர்ப்பே இல்லாத பொருள் இழப்பின்றி மின்சாரம் கடத்தும் ‘மீ-கடத்தி’ ஆகிறது. இவ்வகைப் பொருட்கள் பொதுவாக மிகுந்த குளிரடிக்கும் மைனஸ் வெப்பநிலைகளிலேயே விளைவைக் காட்டியது. இயற்பியலையும் வேதியியலையும் இணைக்கும் இத்துறையின் ஆராய்ச்சிகள் அன்றாடத்திற்கு (மின்சாரக்கம்பிகள் போல) பயன்படும்விதமாய் மீ-கடத்திகளை அறை-வெப்பநிலையில் தயாரிப்பதின் சவால்களை எதிர்கொள்கிறது. இன்னமும் முழு வெற்றியில்லை. வேடிக்கையாய், மிகக்குளிரிலிருந்து சற்றே சூடான ஆனால் (23 கெல்வின் போன்ற) ‘மைனஸ் வெப்பநிலைகளில்’ இவ்விளைவைக் காட்டும் பொருட்களை ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ என்றழைக்கிறோம்.

டிசெம்பர் 1986இல் இயற்பியல் துறையில் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ துறையில் புதிய கண்டுபிடிப்பு. அப்புதிய பொருள் 23 கெல்வினையும் கடந்து சூடான 35 கெல்வின் வெப்பநிலையிலும் மீ-கடத்தும் குணத்தை வெளிப்படுத்தியது. ராவ் இதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. பேராசிரியர் ஆண்டர்ஸன்-னை இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஒரு மாநாட்டில் ராவ் சந்திக்கிறார். ராவ்-வின் உரைக்குப் பிறகு ஆண்டர்ஸன் அவரிடம் இப்பொருள் பற்றி கேட்கிறார். ராவ் ‘எனக்கு இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது பற்றித் தெரியாதே’ என்கிறார். ஆண்டர்ஸன் “அப்பொருள் லாந்த்தானம், தாமிரம் ஆகிய மூலப்பொருள்களின் ஆக்ஸைடுகளினால் ஆனது என்கிறார். ராவ்-விற்கு பொறி தட்டுகிறது. அப்பொருள் லாந்த்தானம்-காப்பர்-ஆக்ஸைடு (LaCuO4) தானே? ஆமோதிக்கிறார் ஆண்டர்ஸன். தான் பல வருடங்கள் முன்னரே (1971இலேயே கங்குலியுடன் எழுதிய ஆய்வுக்கட்டுரையை குறிப்பிட்டு) இப்பொருளைப் பற்றிய ஆராய்ச்சிகளை வெளியிட்டிருப்பதை ஆண்டர்ஸனிடம் தெரிவிக்கிறர் ராவ். அடுத்த இரண்டு மணிநேரங்கள் இருவரும் சோதனைச்சாலையில் இக்கூற்றை மெய்பிக்கும் ராவ்-வின் ஆய்வுக்கட்டுரைகளைப் பரிசீலிக்கின்றனர். ஏற்கனவே ராவ் La2CuO4 எவ்வாறு ஃபெர்ரோ-மாக்னடிஸம் குணத்தை எதிர்க்கவல்லது என்பதை நிறுவியுள்ளது தெரிகிறது. இக்குணம் அனைத்து மீ-கடத்திகளிலும் தேவை.

எவ்வாறு தான் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்திகள்’ ஆய்வில் பங்களிக்கலாம் என்று ராவ் கவலையுறுகிறார். அவர் சுயசரிதையின்படி “பல தூக்கமில்லா இரவுகள்” சோதனைச்சாலையில் கழிகின்றன. இரண்டு மாதங்களில் உலகின் முதல் திரவ-நைட்ரஜன் கொண்டு இயங்கும் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ கண்டறியப்படுகிறது. அதுவரை மீ-கடத்திகளை செய்வதற்கு திரவநிலை ஹீலியம் தேவைப்பட்டது. ராவ் கண்டறிந்த புதிய வேதியியல் காம்பவுண்டு YBa2Cu3O7 யிட்ரியம், பேரியம், தாமிரம் ஆக்ஸைடுகளால் ஆனது. இதை ‘123 காம்பௌண்ட்’ என்றழைப்பார்கள். தொண்ணூறு கெல்வின் (90K) வெப்பநிலையில் இயங்கிய முதல் ‘உயர்-வெப்பநிலை மீ-கடத்தி’ (ஆனால், இதுவும் அறை-வெப்பநிலையில் செயல்படாது). தனிப்பட்ட ஆய்வில், ராவ்-வின் சோதனைச்சாலையில், பெங்களூரில் கண்டறியப்பட்டதென்றாலும், சமகாலத்தில் அமேரிக்காவின் பெல் லாபிலும், சீனாவின் பீஜிங்கிலும் இதே பொருள் கண்டறியப்பட்டதும் நிஜம்.

இப்பொருளை கண்டறிந்தற்கான முன்னுரிமையை ராவ்-வினால் பெற முடியவில்லை. இன்றும் விக்கிபீடியாவில் இவ்வாராய்ச்சியின் முன்னுரிமையில் இரு அமேரிக்கர்களையே முன்னிறுத்துகிறது. சுயசரிதையிலும் ராவ் இந்த “கண்டுபிடிப்பிற்கான முன்னுரிமை இழப்பை” பற்றி நேரடியாக விளக்கவில்லை. சரிதையில் அவர் குறிப்பிடும் ‘இழப்பின் வலி’, அன்றே (எண்பதுகளில்) சரியான தகவல் தொடர்பும், வேண்டிய நவீன உபகரணங்களும் தன் சோதனைச்சாலையில் இருந்திருந்தால் இந்தியாவிலேயே தன்னாலும் உலகத்தரமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கமுடியும் என்கிற ஆற்றாமையினால் எனக்கொள்ளலாம்.

கிராஃபீன் என்பது ஒரு அணுவின் பருமனான நானோ மீட்டர் உயரத்தில், கார்பன் அணுக்கள் பக்கவாட்டில் கைகோர்த்து அமைக்கும் ஓர் அணிவரிசை. இப்பொருளை கண்டுபிடித்ததற்காக 2010திற்கான இயற்பியல் நோபல் பரிசு இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆண்ட்ரீ கெய்ம் (Andre Geim) மற்றும் கொன்ஸ்டெண்ட்டின் நொவோஸெலெவ் (Konstantin Novoselov) இருவருக்கும் அளிக்கப்பட்டதை நாம் அறிந்திருக்கலாம். இந்த நூற்றாண்டில் அவரது ஆராய்ச்சியை கவனித்தால், பழகிய பாட்டையிலிருந்து விலகி, ‘பெட்டிக்கு-வெளியே’ ராவ் யோசித்த ‘ஐடியா’, நுன்னோக்கியில் நேனோ-சைஸ் ஸ்ட்ரா போலிருக்கும் ‘கார்பன் நேனோ குழாய்களை’ அதன் மாலிக்கியூல் பிணைப்புகள் உடையாமல், வலிக்காமல் உரித்து, கிராஃபீன் ரிப்பன்களாய் செய்யமுடியும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

*

சச்சினை ‘ரன்-மெஷின்’ என்றால் ராவ்-வை ஆய்வுக்கட்டுரைகள் எழுதிக்குவிக்கும் ‘பேப்பர்-மெஷின்’ எனலாம். சாதாரணர்களை அசரடிக்கும் இவரது ஆய்வுக்கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பற்றி, சமீபத்தில் வெளியான, சுயசரிதையான ‘முடிவிலா ஏணியில் ஏறிக்கொண்டே’ (கிளைம்பிங் தி லிமிட்லெஸ் லேடர்) புத்தகம் உட்பட, ராவ் பல இடங்களில் பேசியுள்ளார்.

பேராசிரியர் ஹெர்பெர்ட் பிரவுன் “ஆராய்ச்சி செய்வதற்கு உகந்ததென்றால், பிரசுரிப்பதற்கும் உகந்ததாயிருக்கவேண்டும்” என்றது ராவ்-விற்கு பால்யத்தில் உபதேசமாயிற்று. இதே கதியில் விஞ்ஞானி மைக்கேல் ஃபாரடே “பணியாற்று, முடி, பிரசுரி. இதுவே அறிவியலில் ஆதாரம்” என்றதும் ராவ்-விற்கு வழிகாட்டியாகியது.

இந்திய அறிவியல் நிறுவனத்தில் தன் 75ஆவது பிறந்தநாளையொட்டி ஆற்றிய உரையில் “எனக்குத் தெரிந்து தன் இறுதிநாள் வரை செயலாற்றிக்கொண்டிருந்த ஒரே இந்திய விஞ்ஞானி சி. வி. ராமன் அவர்களே. பல விஞ்ஞனிகள் ஓரிரு ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவிட்டு மறந்துவிடுவர். வருடத்திற்கு 20, 30 ஆய்வுக்கட்டுரைகளை எழுதவில்லையென்றால் நான் பரிதாபமாக உணர்வேன். அறிவியலில் உயிருடனிருப்பதற்கான ஒரே வழி ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுக்கொண்டிருப்பதே. எனக்கு வயாதாகிவருவதால் ஒரு சந்தேகம் வாட்டுகிறது. எனக்குப்பிறகு என்ன நடக்கும்? நான் செய்தவை அனைத்துமே மறைந்துவிடுமா? இதற்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில், ஆய்வுக்கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பதே இறப்பற்ற நிலைபெறும் வழி.” என்றார்.

கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டர்களின் சாதனைகளை ஒரு அளவுகோலைக்கொண்டு நிர்ணயிப்போம். நூறு விக்கெட்டுகள், ஆயிரம் ரன்கள் எடுத்தவர்கள். எத்தனை விரைவில் (டெஸ்டுகளில்) அதைச் செய்தார்கள். அடுத்த கட்டமாய் ‘இருநூறு-இரண்டாயிரம்’ எட்டியவர் யார்… இப்படி. உதாரணமாய், கபில் தேவ் ‘ஐநூறு-ஐயாயிரம்’ தொட்ட சாதனையாளர்.

ஆராய்ச்சித்துறைகளிலும் இவ்வகையில் அளவுகோல்களைக் காணலாம். தீவிரமாகச் செயலாற்றிவரும் விஞ்ஞானி ஒருவர் எத்தனை ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். அவை எத்தனை முறை சக-ஆய்வாளர்களால் தங்கள் கட்டுரைகளில் சுட்டப்பட்டுள்ளது என்கிற எண்ணிக்கைகள் உதவும். எழுதிய நூறு கட்டுரைகள், மொத்தமாக ஆயிரம் முறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்கையில் “நூறு-ஆயிரம்” பிராக்கெட்டில் இருக்கும் விஞ்ஞானி என்கிற தகுதியை பெறுகிறார். நிறைய உழைத்து, பல வருடம் ஆய்வுத்துறையில் செயல்படுகையில் இந்த அளவையின் மதிப்பு அதிகரிக்கும். இன்றளவில் “ஆயிரம் (ஆய்வுக்கட்டுரைகள்) – பத்தாயிரம்” (முறையேனும் சுட்டப்பட்டுள்ளது) என்கிற மதிப்புடன் இருக்கும் ஒரே இந்திய விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் மட்டுமே.

இன்னொரு வகையில் ராவ்-வின் ஆராய்ச்சித் தரத்தை வெளிக்கொணரலாம். சமீபகாலமாய் ‘ஹெச்-இண்டெக்ஸ்’ என்கிற மதிப்பு உருவாகியுள்ளது. ஒரு ஆராய்ச்சியாளரின் எவ்வளவு கட்டுரைகள் எண்ணிக்கையில் அவ்வளவேனும் மற்ற சக ஆராய்ச்சியாளர்களால் (தங்கள் கட்டுரைகளில்) சுட்டப்பட்டுள்ளது என்பதை நிர்ணயிக்கும் அளவை. ஒருவர் எழுதியுள்ள பத்து ஆராய்ச்சிக் கட்டுரைகளில், ஐந்து தலா இருபது முறைகள் மற்றவர்களால் சுட்டப்பட்டுள்ளது என்போம். இரண்டு கட்டுரைகள் எட்டு முறைகளும், மிச்சம் மூன்று கட்டுரைகள் இன்னமும் சுட்டப்படாமலும் உள்ளது. அப்படியெனில் அவரது ஏழு கட்டுரைகள் (ஐந்து + இரண்டு) குறைந்தபட்சம் ஏழுமுறையேனும் சுட்டப்பட்டுள்ளது என்பதால் அவரது எச்-அளவை ஏழு. கவனியுங்கள், இருபதோ, எட்டோ இல்லை. ஏழு-தான். பின்னாளில் அவர் ஆராய்ச்சிக்கட்டுரைகளே எழுதவில்லை என்றால், அதிகபட்சமாக அவரது எச்-அளவை பத்து என்ற இலக்கை அடையலாம் (அவைகள் பத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் மற்றவர்களால் சுட்டப்பட்டிருந்தாலும் எச்-அளவை பத்துதான்). அதாவது, என்றோ செய்த ஆராய்ச்சியை வைத்து இன்றும் ஜல்லியடிக்கமுடியாது. மிகக் குறைவான எச்-அளவை காட்டிக்கொடுத்துவிடும். சச்சின் முதல் பத்து டெஸ்டுகளில் ஆடியதை மட்டும் வைத்துக்கொண்டு, சமீபகாலம் வரை “டக்-அவுட்” ஆகியபடியே டீமில் காலந்தள்ளமுடியாதைப்போல.

எச்-அளவை ஆராய்ச்சித்துறைகளில் கண்ஸிஸ்டென்ஸி-யை, அளக்க ஓரளவு சரியான அளவுகோல். செயல்படும் விஞ்ஞானி என்பவர் தொடர்ந்து சீராக ஆராய்ச்சி செய்து புதிய கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். வருடந்தோறும் அதிகரித்துவரும் எச்-அளவை கொண்ட விஞ்ஞானிகள், தொடர்ந்து சக-விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்க்கும் ஆராய்ச்சிகளாகவே செய்துவருகிறார் என்பதும் புரிதல். வெவ்வேறு அறிவுத்துறைகளில், ஆராய்ச்சி மற்றும் ஆய்வாளர்களின் எண்ணிக்கை அடர்த்திக்கேற்ப, திறனுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கான இந்த எச்-அளவையின் மதிப்பு நிர்ணயமாகும்.

வேதியியலில், ராவ்-வின் எச்-அளவை இன்றளவில் நூற்றியெட்டு.

அதாவது, ராவ்-வின் நூற்றியெட்டு ஆய்வுக்கட்டுரைகள் நூற்றியெட்டு தடவையாவது மற்ற ஆய்வாளர்களால் சுட்டப்பட்டுள்ளது. ஒப்பீட்டிற்கு ஒரு விஷயம் சொல்கிறேன். சமீப பத்தாண்டுகளில் அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்குப் பொதுவாக எச்-அளவை தொன்னூறுக்கு மேல் இருப்பது புலனாகியுள்ளது. ராவ் இதுவரை மூன்று முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

சச்சினின் “நூறு-சதங்கள்” சாதனை வருங்கால ஆட்டக்காரர்களுக்கு நிரந்தர எட்டாக்கனியாகிவிடலாம் (ஜாக் காலிஸ் மட்டும்தான் டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் 51 சதங்களை எட்டிவிடும் நிலையில் இருக்கிறார். பார்ப்போம்.). அதைப்போல ராவ்-வின் இந்த “எச்-அளவை நூற்றியெட்டு” என்பது இனியொரு இந்திய விஞ்ஞானியால் எட்டவே முடியாத சாதனையாகிவிடும் என்றே கருதுகிறேன்.

*

அதிகமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் நோக்கின் சில உபாதைகளிலும் ராவ் சிக்கிக்கொண்டுள்ளார்.

சமீபத்தில் (2011இல்) ராவ் பெயர் தாங்கி சக-ஆய்வாளர்கள் இருவருடன் வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே (வேறு ஆய்வாளர்களால் எழுதப்பட்டு) வெளியாகிவிட்ட ஆராய்ச்சிக் கட்டுரையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட கருத்துகள் உள்ளன என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதன் உண்மை நிரூபணமானதும் ராவ் பகிங்கரமாக கட்டுரை வெளியான ஆராய்ச்சி சஞ்சிகையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது ஒரு ‘தற்செயல் நிகழ்வு’ என்றும் பிரச்சனையிலிருந்து ‘கழன்றுகொண்டார்’. ஆனால், தொடர்ந்து ஊடகங்களில் வெளியான சில கட்டுரைகளில் அவரது மேலும் சில ஆய்வுக்கட்டுரைகளில் சில பத்திகளாவது ஏற்கனவே வெளியானவைகளிலிருந்து வார்த்தை பிசகாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. ஏற்கனவே வெளியான ஆராய்ச்சி முடிவுகளையே இக்கட்டுரைகளில் மறுபதிப்பு செய்யவில்லை என்பதால் இவ்வகை குற்றாச்சாட்டுகள் அவரது பெருவாரியான ஆய்வுக்கட்டுரைகளின் மதிப்பைக் குறைக்கவில்லை. என்றாலும், துறையில் அவரது நற்பெயர் சற்று அடிவாங்கியது நிஜம். நேரடியாக தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல், ‘யாரோ என் நற்பெயரை குலைக்க அவதூறு செய்கிறார்கள்’ என்கிற ரீதியில் அவர் பேசியதும், தவறுக்கு அனுபவமில்லாத ஆராய்ச்சிமாணவனை ‘கை காட்டி விட்டு’ நழுவியதிலும் சக விஞ்ஞானிகளின் அதிருப்திக்கு உள்ளானார். “சரிபார்க்காமல் எதற்கு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவேண்டும்; எண்ணிக்கையை அதிகரிப்பதுதான் ஒரே இலக்கா; ஆய்வுக்கட்டுரை செம்மையாக இருக்கவேண்டும். என்பதில்லையா…” போன்ற விமர்சனங்கள் எழுந்தது. சந்தடி சாக்கில் பொறாமை நாக்குகள் சில பலவாறு சுழன்றதையும் அவரால் இன்றளவும் தவிர்க்க முடியவில்லை.

அதிகமாக ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுகையில் ஒவ்வொரு கட்டுரையிலும் அனைத்து அங்கங்களையும் ஒருவராலேயே சரிபார்க்கமுடியாமல் போவது ஆபத்தான பக்கவிளைவு. ராவ் போன்ற மூத்த விஞ்ஞானிகளை பிரதான ஆராய்ச்சி ஆலோசகராகவோ, கருத்தாக்கத்தின் காரணகர்த்தாவாகவோ மட்டும் கொண்டு, அவருக்குக் கீழே கட்டுரை எழுதுவதில் அனுபவமில்லாத மாணவர்களும், ஜூனியர் ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து கூட்டுத்தயாரிப்பாய் ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகளை கட்டுரைகளாய் எழுதி சமர்ப்பிக்கையில், இவ்வகை ’சுட்டெழுத்து’ பக்கவிளைவுகள் பதம் பார்த்துவிடும். சென்ற பத்தாண்டுகளில் கவனித்தால் (2000த்திற்குப் பிறகு) கிட்டத்தட்ட வாரத்திற்கு ஒன்று என்கிற ரீதியில் ராவ் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகிறார்!

ராவ்-வின் இவ்வகை செயல்பாடுகள், அவரது தலைமையின் கெடுபிடிகள் போன்றவை சக-விஞ்ஞானிகள் சிலரால் காட்டமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அவர் ‘பாரத் ரத்னா’ விருது வாங்கியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதும் பெங்களூரின் ஐ.ஐ.எஸ்.சி. விஞ்ஞானி/பேராசிரியர் ஒருவர் “நான் கருத்து கூறமாட்டேன். ஏன் கூறமாட்டேன் என்பதையும் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் ராவ்-வின் நண்பர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்” என்கிற ரீதியில் பதிலளித்துவிட்டார்.

ராவ் இதற்கெல்லாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. நான் என்வகை ஆராய்ச்சியையும் அறிவியலையும் தொடர்கிறேன். சிலருக்கு இதில் ஒப்புமை இருக்காதுதான், பரவாயில்லை, என்கிறார்.

சச்சின் ‘அவுட்-ஆஃப்-ஃபார்ம்’ ஆகி போட்டிகளில் சில நெருக்கடியான சமயங்களில் சொதப்பியுள்ளார் என்றாலும், பல வருடங்களாய் சராசரிக்கும் அதி உயரமான அளவில் விளையாடி பல சாதனைகளையும் வெற்றிகளையும் ஈட்டித்தந்துள்ளார் என்பதும் நிஜம்தானே. ராவ்-வின் தீவிர உழைப்பையும், அறிவியலின் மீதுள்ள விசுவாசத்தையும், ஆர்வத்தையும், பரந்துபட்ட பங்களிப்பையும் கணக்கில்கொள்கையில், ராவ்-விற்கு ‘பாரத் ரத்னா’ வழங்கப்பட்டதில் அவரது விமர்சகர்களுக்குமே பெரிதாக குறை இருக்க முடியாது.

சுயசரிதையில் நினைவுகூறுகையில் சி.என்.ஆர். ராவ் சொல்வது நாம் அனைவரும் ஆசைப்படும் ‘முழுமையை’ உணர்த்துகிறது: “என் வாழ்க்கை எவ்வளவு திருப்திகரமாக இருந்தது என்பதை நினைத்துப்பார்கிறேன். அருமையான உத்தியோகமும் அதேபோன்ற நல்ல இல்லறமும் அமையப்பெற்றேன். விஞ்ஞானியாக என் வாழ்க்கையை மகிழ்சியாக கழித்தேன். வாழ்வதற்கு வேறு சிறந்த வழி எனக்குத் தெரியாது. வயதாவதோடு மகிழ்ச்சியும் கூடுகிறது. வருத்தமேதுமில்லை. அமைந்தால், மீண்டும் இவ்வாழ்க்கைப்பாதையே தேர்வு செய்வேன்.”

***

[கட்டுரையிலுள்ள சில தகவல்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் அபினந்தனுக்கு நன்றி]

சான்றேடுகள்; மேலும் வாசிக்க (அனைத்தும் சி.என்.ஆர்.ராவ். பற்றிய தகவல் பக்கங்கள்)

குரு வந்தனம்

Standard

ஒன்றைப் பூஜ்ஜியத்தால் வகுத்தால் என்ன கிடைக்கும்?

பள்ளியில் எங்களை கணிதம் பயில்விக்கும் உபாத்தியார் கேட்டார்.

சாக்பீஸ் தீற்றல்களால் வெளிறிப்போயிருந்த கரும்பலகையை நோக்கி அங்குமிங்குமாய் விரவியிருந்த அரைபெஞ்சுகளில், வியர்க்கும் முழங்கால்களை முட்டிக்கொண்டு அரைநிஜாரில் நாங்கள்.

அனைவரும் விடை என நினைத்ததைக் குரலெடுத்தோம், பூஜ்ஜியம் என்று.

கணக்கு வாத்தியார் வாமன ரூபம். ஆர்.எஸ்.வீ. சார் என்று மரியாதையில் பெயரும் சுருக்கிவரையப்பட்டவர். முழுப்பெயர் எனக்குத் தெரியாது. அமெரிக்க மேற்படிப்பில் முதல்நாளில் குருவை ழோஸெ என்று ஒருமையில் விளிக்கக்கற்ற இன்றும்.
Continue reading

அஞ்சலி: கர்நாடக சங்கீதக் கலைஞர் அனந்தலக்ஷ்மி சடகோபன்

Standard

அனந்தலக்ஷ்மி சடகோபன்  தமிழகத்தின்  திறமை வாய்ந்த மூத்த கர்நாடக சங்கீதப் பாடகியாக அறியப்பட்டவர்.  ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் அரும்பணி செய்த அவர், 15 மே, 2013 அன்று இயற்கை எய்தினார். அவரின் இசைவாழ்க்கையை அறிமுகப்படுத்தும் கட்டுரை இது. நினைவாஞ்சலி என்றும் கொள்ளலாம்.

சுதந்திரத்திற்குச் சற்றே முற்பட்ட காலந்தொட்டு வீட்டுப் பெண் குழந்தைகள் ஓரிரு கலைகளைப் பழகிக்கொள்வது நன்று என தென்னிந்திய மத்ய வர்கக் குடும்பங்கள் கருதின எனலாம். அக்காலங்களில் திறனுள்ள இசைக்கலைஞர்கள் தினப்படி வீட்டிற்கு வந்து கற்பிப்பதற்குத் தயாரென்கையில் பெண்களும் தன்னிச்சையாய் பயில்வதற்கு இசைக்கலையைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், வீட்டில் பாடுவதற்குப் பழகிக்கொள்ளவே, மேடையேறுவதற்கு அல்ல. 1930-களின் இறுதியில் அவரது கிராமத்துச் சனத்தின் கடும் விமர்சனத்தைக் கடந்தே டி. கே. பட்டம்மாள் மேடையேற முனைந்தார். நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டில் வீட்டில் பாட்டு கற்றுக்கொள்வது தேயத்துவங்கியது. குடும்ப மருத்துவருக்கு இணையாக வீடுவரை வரும் குடும்ப இசைக்கலைஞரும் வழக்கொழியத் துவங்கியதால்.

சிறந்த கர்நாடக சங்கீதக் கலைஞரான விருதுநகரைச் சேர்ந்த சாத்தூர் சுப்ரமணியன், ஆரம்ப நாட்களில் பலரின் அழைப்பிற்கிணங்கி வீட்டிற்கு வந்து இசை பயில்வித்தார். அப்படி 1930-40 களில் உருவாகிய ’சாத்தூர் பள்ளி’யிலிருந்து பல சிறந்த மேடை மற்றும் வானொலி இசைக்கலைஞர்கள் வெளிப்பட்டனர். அவர்களில், மூன்று பெண்மணிகள் குறிப்பிடத்தக்கவர்கள்: சீதாமணி ஸ்ரீனிவாசன், சுலோசனா பட்டாபிராமன், மற்றும் அனந்தலக்ஷ்மி சடகோபன்.
Continue reading

இரண்டு துப்பறியும் நவீனங்கள்

Standard

பலோமினோ மொலெரோவைக் கொன்றது யார் (Who killed Palomino Molero) என்று மர்ரியோ வர்கஸ் (ல்)லியோஸ்ஸா (Mario Vargas Llosa) எழுதிய நாவலையும், ‘கதிரேசன் செட்டியாரின் காதல்’ என்று மா. கிருஷ்ணன் எழுதிய நாவலையும் சமீபத்தில் வாசித்தேன். ஓரிரு மாதங்களுக்குள் வாசித்த தற்செயல் இரண்டிலும் சில ஒற்றுமைகளைச் சுட்டியது. சில உள்விரிவுகள். பகிர்ந்துகொள்கிறேன்.

(ல்)லியோஸ்ஸா பெரு நாட்டு எழுத்தாளர். ஸ்பானிஷ் மொழி மூலம். என்னத்தான் சங்கத்தமிழைவிட ஸ்பானிஷ் அதிகம் பரிச்சயம் என்றாலும், ஆங்கில மொழியாக்கத்தில்தான் வாசித்தேன். மா. கிருஷ்ணனை அவர் எழுதிய தமிழிலேயே வாசித்துவிட்டேன்.
Continue reading

ஸ்ரீரங்கம் களை

Standard

ஸ்ரீரங்கம் பழைய ஊர். வண்டின முறலும் சோலை மயிலின மாடும் சோலை. மாற்றங்களை வரவேற்றபடி. இருபத்தியைந்து வருடங்கள் நான் வளர்ந்திருக்கிறேன், அதன் வீழ்ச்சியுடன். இன்றும் விட்டுவிடாமல் தொட்டுக்கொள்வதற்கு மட்டுமான உறவு. பழைய ஞாபகங்கள். புதிய ரணங்கள். நண்பிக்கு மேலே, காதலிக்கு கீழே. மனைவியாகிவிடமாட்டாள் என்பதில் ‘அப்பாடா, தப்பித்தோம்’ என்கிற நிம்மதியில்லை. மனைவியானாலும் அறுபதாம் கல்யாணத்தில்தான் என்பதில் இன்றளவு நிம்மதியே.

ஸ்ரீரங்கமும் கிட்டத்தட்ட இதையேதான் சொல்லும், என்னைப் பற்றி.

Continue reading

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

Standard

வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் |
அல்லற் படுத்தும் அடங்கா முனியும் |
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் |
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் |
பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் |
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட ||

எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் உணர்ந்திருக்கிறாள். கதவு திறந்திருக்கவே, வெளியே வந்து பார்த்தால், கீழ்ப் படிக்கட்டில் விரிந்த கூந்தலுடன் யாரோ உட்கார்ந்திருப்பது மாதிரியிருந்ததாம். யாரது என்றதும் திரும்பிய கரிய உருவத்தைப் பார்த்து இவள் அலறியதில் கீழ்க்கட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் விழித்தெழுந்து ஓடிவந்து சமாதானப்படுத்தியுள்ளனர். குழந்தையின் ‘திடீர்’ காய்ச்சலுக்குக் காரணம் இவள் பார்த்த ‘முனி’ குழந்தையைச் சாப்பிட இழுத்துக்கொண்டு போக முயன்றதுதான் என்கிறாள். கடவுள் புண்ணியத்தில் தப்பிவிட்டதாம். விடுப்பில் குழந்தையுடன் வேறு ஊருக்குச் சென்றுவர விரும்புகிறாள்.

மனித உயிரியல், மற்றும் பௌதீக இயங்கு விதிகளுக்குக் கட்டுப்படாத, அவ்வப்போது தட்டுப்பட்டு அலறவைக்கும் அருவங்கள், அதாவது பேய் பிசாசுகள் இருப்பதாய் நம்மில் பலர் நம்புகிறோம். அதேபோல, சாமான்யர்கள் கண்களில் தட்டுப்படாத அணுக்கள், அணுக்கருத் துகள்கள் எனவும் பொருள்கள் இருப்பதாய் அறிவியலாளார்கள் என்றழைக்கப்படுபவர்களில் பலர் நம்புகிறார்கள்.

முன்னதைக் கிட்டத்தட்ட மூடநம்பிக்கை என்கையில், பின்னதை அவ்வாறு நாம் கருதுவதில்லை. இது புரட்டில்லையா? பேய் பிசாசு இருப்பதாய் நம்புவதை அறிவியல் சிந்தை மறுக்கிறதா? அப்படியெனில் உலகில் சாமான்யர் இதுவரை பார்த்திராத ஏலியன்கள், வளி-அறிவு-ஜீவராசிகள் இருப்பதாய் ஏன் நம்பலாம்? எவ்வகைத் தேடலுக்கும் இதுவரை தென்படாத இவர்கள் இருப்பதாய் மட்டும் ஏன் நம்பவேண்டும்? அறிவியல் சிந்தைக்கே ஒவ்வாத செயலாய் படுகிறதே. ஏன் ஒப்புக்கொள்கிறோம்?

Continue reading

நினைவோடை: பேராசிரியர் ஜாக் ஹோல்மன்

Standard

பேராசிரியர் ஜாக் ஹோல்மன் வெப்பவியல் துறையில் ஒரு முன்னோடி. உங்களில் சிலர் அறிந்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய ஹீட் டிரான்ஸ்ஃபர், தெர்மோடைனமிக்ஸ் போன்ற வெப்பவியல் பாட புத்தகங்கள் கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக பொறியியல் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடையே மிகப்பிரபலம். மே 1, 2013 அன்று இயற்கை எய்தினார். நினைவாக, அவருடனான அனுபவங்கள் சிலவற்றை பதிவுசெய்கிறேன்.

முனைவர் பட்டப்படிப்பினூடே நான் பேராசிரியர் ஹோல்மனிடம் ஆசிரிய உதவியாளனாக நான்கு வருடம் (1998 – 2002) இருந்தேன். ஒரு முறை உராய்வு ஆற்றல் இழப்பு எவ்வகையில் (கார்களில் பொருத்தப்பட்டுள்ளவை போன்ற) என்ஜின்களில் செயல்படுகிறது என்பதை விளக்குவதாய் சொதப்பினேன். அத்தவறான விளக்கத்தினால் ஒரு சந்தேகம் வேறு அவரிடம் எழுப்பினேன். மௌனமாய் என்னை சில நொடிகள் கவனித்துவிட்டு, “நீ பதில் கண்டுபிடித்தால் சொல்” என்றார். அன்றிரவு யோசிக்கையில் என் தவறான விளக்கம் புரிந்தது. சந்தேகத்தின் விடையும் எனக்கே விளங்கிவிட்டது. மறுநாள் மன்னிப்பு கலந்த தயக்கத்துடன் அவர் அறையில் விவரித்தவுடன், “அட, நீயாகவே முயன்று ஒன்றை அறிந்துகொண்டுவிட்டாய் போலிருக்கிறதே” இறங்கியிருந்த கண்ணாடியின் மேலிருந்து ஊடுருவியது பார்வை. குறுநகையுடன்.
Continue reading

மகுடி இசையும் பாம்புச் செவியும்

Standard

[இத்தலைப்பில் 2009இல் ஒரு குறுங்கட்டுரை எழுதியிருந்தேன். சிலர் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதே தலைப்பைப் பார்த்தவுடன் ஏற்கனவே வாசித்ததுதானே என்று விலகிவிடலாம். 2012இல் பாம்புச்செவியைப் பற்றிய புதிய ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. இவற்றையும் கருத்தில்கொண்டு இங்கு கட்டுரையை முன்பிருந்து இரண்டுமடங்கு விரித்துள்ளேன்.]

மகுடி இசைக்குக் கட்டுண்டுதான் பாம்பு ‘படம்’  எடுத்து ஆடுகிறதா? இந்தக் கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் ‘ஆம்’ என்கிற பதிலில் அசைக்கமுடியாத நம்பிக்கை. எனக்குச் சிறுவயது முதல் இக்கேள்வியும் அதற்கான மேற்படி பதிலில் நம்பிக்கையின்மையும் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல்.

இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்துவிட்டது என்று சொல்லமாட்டேன். இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன்.

சரி, அப்ப விடை என்ன?
Continue reading

குழலினிது யாழினிது என்பார்…

Standard

மீண்டும் மார்கழி இசை விழா. நடந்த கச்சேரிகளோ நூற்றிற்கும் மேல். அவற்றில் என்னால், நிர்பந்தக் கச்சேரிகள், ரிவ்யூ கச்சேரிகள், ரசனைகள், சோதனைகள், எதையும் ஒருமுறை, வருடம் ஒருமுறை, அயல் நாடு, வெளி மாநிலம், வாத்தியங்கள், வாய்ப்பேச்சுகள், கண் அயர, கால் அயர, வாய் மெல்ல, மனம் மகிழ, பார்வையிட, பாதியில் அகல, ஏஸி இல்லாத ஹால், பார்க்கிங் கிடைத்ததால், என்று பாகுபடுத்திய காரணங்களுடன் பலசரக்காய் தினத்திற்கு மூன்று நான்கு கச்சேரிகள் தாவியும், இரண்டு வாரங்கள் எடுத்த விடுப்பில் கேட்கமுடிந்தது நாற்பது சொச்சம். இதற்கே, இண்டியானா ஜோன்ஸ் ‘கிரிஸ்டல் ஸ்கல்’ படத்தின் ‘அறிவு அனைத்திற்கும் ஆசைப்படும்’ வில்லியின் மண்டைபோல் ஆகிவிட்டது எனதும். வெடிப்பதுதான் பாக்கி. வீட்டிற்கு திரும்பி, சில நாள் மௌனம். கலைய ஜாஸ் இசை. பத்தியச் சாப்பாடு. பி.ஜி.வுட்ஹவுஸ், நாஞ்சில் நாடன். இன்றுதான் சவுண்ட் கார்டன், கிங் க்ரிம்ஸன் என்று அன்றாட அரையிரைச்சல்களுக்குத் துணிந்துள்ளேன்.
Continue reading

‘க கதை கழுதை’ அல்லது ‘முடிக்கல மாமு’

Standard

தமிழில் நல்ல மரபுக் கவிதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் கவிஞர்கள் தவிர, புதுக்கவிதை எழுதும் ஏனையோர் ஒப்புக்கொள்வார்கள். அதைப்போல தமிழில் நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்றால் தொழில்முறை எழுத்தாளர்கள் தவிர மற்ற எழுத்தாளர்கள் ஒப்புக்கொள்வார்கள். வாசிப்பவர்களுக்கு எழுத்து சார்ந்த கருத்துரைக்க என்றுமே உரிமையில்லை என்பதால் தமிழ் வாசிக்கத்தெரிந்த மிச்சம் சில கோடி ஜனத்தை இக்கருத்துருவாக்கத்தில் பொருட்டாகக் கொள்ளவேண்டியதில்லை.

நல்ல சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டன என்பதற்கான போதிய ஆதாரம் இதுவரை எழுதப்பட்ட சிறுகதைகளில் மட்டுமே கிடைக்குமா என்கிற சந்தேகம் உங்களுக்கு ஏற்படுமாயின் அதற்கு என்னிடம் பதில் நேரடியாக இல்லை. இணையத்தில் ஓரிரு பக்கங்களை வாசிக்கும் அவகாசத்தையும், ஆரோக்யத்தையும், கவனத்தையும், கரண்ட்டையும் நீங்கள் இக்கலியுகத்தில் கைவரப்பெற்றிருந்தால், கீழேயுள்ளதை வாசித்து, எழுதப்பட்டுவிட்ட அது, நல்ல கதையா என்று யோசியுங்கள். உங்கள் முடிவே, உங்கள் மேற்படி சந்தேகத்திற்கான, என் பதிலும்.

*
Continue reading

அம்ருதாவில் அறிவியல்

Standard

ஓவியம், இலக்கியம், உலகத்திரை, பிற கலைகள் பற்றிய கட்டுரைகள், ஓரிரண்டு சமூகச்சாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, அழகியசிங்கர் பக்கங்கள், விற்பனைக்கு தொட்டுக்கொள்ள சச்சின், சினிமா, அக்கபோர், நிரந்தரமாய் பட்டுப்புடவையில் அனுஷ்கா படம் என்று வெளிவரும் ‘அம்ருதா’ அச்சுஊடக மாதாந்திரியில் “வாழ்க்கை விஞ்ஞானம்” என்கிற பத்தித் தலைப்பின்கீழ் (என் தேர்வல்ல), ஒரு வருடம் எழுதிவிட்டேன். எனக்குத் தெரிந்தவரையில், வகையில், அறிவியல் கட்டுரைகளை.
Continue reading