ஐஐடி முத்தமிழ் மன்றம் உரை

Standard

எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

“என்ன சார் இப்படி செஞ்சுட்டீங்க? எங்ககிட்டலாம் ஒரு வார்த்த கேட்டுருந்தீங்கன்னா இப்படியெல்லாம் நடக்காம… போனாப்போறது, மொத வாட்டியாப்போச்சு… அதுனால…” என்கிற வகையில்.

பின், திடுதிப்பென்று நேற்று “ஐஐடி முத்தமிழ் மன்றம்” ஏற்பாடு செய்திருந்த விழாவில் எனக்கு சால்வை போட்டு அதற்கான ஏற்புரை வழங்கச்சொன்னால்?
Continue reading

தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள்

Standard

Image Courtesy: http://www.mi2g.com/cgi/mi2g/frameset.php?pageid=http%3A//www.mi2g.com/cgi/mi2g/press/110210.php

பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம்.
Continue reading

நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

Standard

இங்கு சற்று ராக்கெட் அறிவியல் பேசுவோம். தொடர்ச்சியாக, நேனோ அளவில் செய்யப்பட்ட அலுமினா துகள்களினால் ராக்கெட் எவ்வாறு வெடிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வோம்.

தீபாவளி ராக்கெட்டில் குச்சியின் முனையில் எரிபொருள் மருந்தும், அதை எரிக்க நெருப்பூட்ட இணைந்த திரியும் இருக்கும். பாட்டிலில் சொருகி பற்றவைத்தால் வானத்திலோ வீட்டுக் கூரையிலோ தவ்வும். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவை செயற்கைக்கோள்களை வானத்தில் ஏற்றுவதற்காகத் தயாரிக்கும் பிரம்மாண்டமான ராக்கெட்டுகள் சிக்கலானவை. பற்றவைத்தால் இவ்வகை பிரம்மாண்ட ராக்கெட்டுகளும் ‘மங்கள்யான்’ போல செவ்வாய் கிரகத்திற்கும் தவ்வும். சில அல்பாயுசில் கடல் ஆராய்ச்சி செய்து அணையும்.
Continue reading

அம்ருதாவில் அறிவியல் 3.0

Standard

arunn-amrutha-april-2014-hw-s

அம்ருதா இதழில் தொடர்ந்து மூன்றாவது வருடமாக என்னால் அறிவியலை எழுதமுடிவது கலியுகம் செய்த நல்லூழ்.

தமிழ் புத்தாண்டு இதழில் ‘அறிவியல்’ இதன் அட்டைப்படத்தை அலங்கரிப்பது எனக்குமே ஆச்சர்யம்.
Continue reading

விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

Standard

விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா?

தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள்.

vandal-1

மதுநின்ற தண்டுழாய் மார்வன் என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட, ரீயின்ஃபோர்ஸ்டு காண்க்ரீட்டினால் நச்சக் என்று பிளக்கப்பட்ட, விஷ்ணுவை.

vandal-1-b

ஸ்ரீரங்கம் அரங்கன் திருக்கோயில் தாயார் சந்நிதி பிரகாரத்தில், பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் உள்ள தூணில் சில வருடங்கள் முன்னால் இது நடந்தேறியுள்ளது. உபயதாரர் பெயர்களை கல்வெட்டில் பொறிப்பதற்கு.

vandal-1-c

இடைப்பட்ட வருடங்களில் ஒவ்வொரு முறை கோயில் செல்கையிலும் இது கண்ணில் படுகையில், நானும் யாராவது சரி செய்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். இம்முறை ஏதோ வழக்கத்தை மிஞ்சிய ஒரு நமைச்சல். கேசமே போயிற்று என்று எடுப்பதற்கு வாங்கிய திட்டுக்களையும் கடந்து, படம் பிடித்து அளிக்க முடிவுசெய்தேன்.

சிமெண்ட்டைக் குழைத்த சித்தாள், உபயதாரர் பெயருள்ள கல் பலகையை நிறுத்திய முத்தாள், பூசிக் கரணை போட்ட கொத்தனார், கால்தடுக்காமல் வேட்டிமுனையை விரலோரத்தில் தூக்கி புட்டத்தில் பிடித்தபடி பார்வையிட்ட மேஸ்திரி, அனைவரும் வயிற்றுப்பிழைப்பிற்காக வேலை செய்பவர்கள். கோயிலையே இடித்துக்கட்டச்சொன்னாலும் செய்வார்கள். இத்திருப்பணியில் சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கும் இச்செயலில் வருத்தம் கிஞ்சித்தும் இருக்காது. இப்போதுமே, இவ்விஷயம் அவர்கள் எவருக்காவது தெரியும் என்பதே சந்தேகம். அவர்கள் வரும்படி மூலவர் சந்நிதியில். என் ஆச்சர்யம், தாயார் சந்நிதியில் தினமும் மஞ்சள் காப்பு வாங்கி இட்டுக்கொள்வதற்குத் திரளும் பஞ்சகச்ச பக்தர்கள், தர்மதரிசன பொதுமக்கள் என்று எவருமே இச்செயலை ஆட்சேபிக்கவில்லையா?

வேளுக்குடி கிருஷ்ணன் இப்போதெல்லாம் அதிக நேரம் ஸ்ரீரங்கத்தில்தான் செலவிடுகிறாராம். தாயாரை தினமும் பிரதக்ஷணம் செய்வார்தானே.

*

கும்பகோணம் பல சிறந்த கோயில்கள் நிறைந்த ஊர். அங்கு உள்ள ராமர் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? நிச்சயம் அடுத்தமுறை செய்யுங்கள். அபாரமான சிற்பங்கள் உள்ள கோவில்.

kumb-ramar-koil-4

ஒரு சாம்பிள் அபாரத்தைக் கொடுக்கிறேன்.

பிரகாரத்தின் மூலைத் தூணில் ஒரு பக்கமாய் பார்த்தால் இவ்வாறு தெரியும் சிற்பம்.

kumb-ramar-koil-1

தொன்னூறு டிகிரி பிரகாரத்தில் திரும்பினால், அதே தூணில், அதே சிற்பம், கீழ்வருமாறு.

kumb-ramar-koil-2

விளக்கத்திற்கு, ஒரு டாப் ஆங்கிள் ஷாட்.

kumb-ramar-koil-3

யார் சொன்னது, பண்டைத்தமிழருக்கு பக்தி மட்டுமே, நகைச்சுவை உணர்வு இல்லையென்று?

இக்கோயிலில் அடுத்த காட்சி.

போட்டோ எடுக்கக்கூடாது என்று கூச்சலிட்டதும் (இதற்கென்று தனியாக ஓஜோஸி ஆள்படை உள்ளது), தர்மகர்த்தா ஆபிஸில் நூறு ரூபாய் பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, பிறகு எடுத்தது.

என்னிடம் பணம் வாங்குவதற்கு ரசிது கொடுக்குமளவிற்கு தொழில்சுத்தம் உள்ளவர்கள், தங்கள் வருவாயின் ஊற்றான சிற்பங்களைப் பேணுவதிலும் அம்முனைப்பை அவ்வப்போது காட்டலாம்தான்.

*

கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகில் தாராசுரம் கோவில் பிரசித்தி (பக்கத்தில், பட்டீஸ்வரம் காளியும் பிரசித்தி). கங்கைகொண்டசோழபுரத்தை நினைவூட்டும் அமைப்புகொண்ட இக்கோவிலின் சிற்பங்களும் சுவரோவியங்களும் சோழர்கால அபாரங்கள். கீழே ஓரிரு சாம்பிள்கள்.

இங்கு சுவரோவியங்களின் மேல் கூறான கருங்கல்லினால் கீறப்பட்ட “ஜீவா லவ்ஸ் அனிதா” போன்ற தற்கால தெருவாசகங்களும் பிரசித்தம்.

இந்தக் காட்சியை அருகில் படம்பிடிக்க உச்சி வெய்யிலில், கை கால் கொப்பளிக்க, கற்கோயிலின் முதல் சில நிலைகளை ஏறி, ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டு, மற்றொரு கையால் காமிராவை ஆட்டாமல் இயக்கிப் படம்பிடித்தேன்.

யோசித்துப்பாருங்கள். முன்னர் இதே அல்லது இதைவிட அதிக சிரமங்கள் எடுத்து(த்தான்) நம்மில் ஒருவர் இங்கு ‘ஜீவா…’ வகை கிறுக்கலை (மட்டும்) நிகழ்த்தியிருக்கிறார்.

என்னசொல்வது?

அதற்கும் முன்னால் சாரங்களில் கழுவேறும் நிலையில் அமர்ந்துதான் நம்மில் ஒருவர் இவ்வகை சுவரோவியங்களையும் அருளியிருக்கிறார்.

நல்லவேளை, சமீபத்தில் இக்கோயிலை ஏ.எஸ்.ஐ. தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளது (படத்தில் பிரகாரத்தில் தெரியும் கார்பெட் வெய்யில் சூட்டிற்காக அவர்கள் போட்டது). நிச்சயம் இவ்வகைச் சிதிலங்கள் குறைந்துவிடும்.

ரெஸ்டொரேஷன் வகை அபாயங்கள் உருவாகலாம்.

*

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா. தஞ்சை பெரிய கோயிலை விட வளாக அளவில் பெரிதானதாம். கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாம் (ஸ்தல புராண சுவர் அறிவிப்பு சொல்கிறது). அங்கு மறக்காமல் தர்மசம்வர்தினி அம்பாள் சந்நிதி முன் பிரகாரத்தைப் பார்வையிடுங்கள்.

இங்கும் உள்ளே ஒரு சுவர் முழுவதும் சுவரோவியங்கள் இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. பரிகாரமாய்ச் செய்வதைப்பார்த்தால்தான் பகீரென்கிறது.

கீழே சில படங்களில் இன்றைய நிலையை வழங்கியுள்ளேன்.

thiruvaiyaru-1

vandal-4-bvandal-4

நூற்றாண்டுகள் பழமையான ஒரிஜினல் சுவரோவியங்களைக் காப்பாற்றுவதாக, அதற்கு மேல் ரெஸ்டொரேஷன் என்று இக்காலச் சாயங்களில் இவர்கள் வரைந்துகொண்டிருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பெட்டகத்தினுள் இருந்த மூக்குக்கண்ணாடியைப் பார்த்துக் கேட்டானாம்: இது நிஜமாவே பெஞ்சமின் ஃபிராங்க்ளினோடா மூக்குக்கண்ணாடியா?

உடன் வந்த கைடு: அதிலென்ன சந்தேகம், அவருடையதேதான். என்ன, இரண்டு முறை கண்ணாடியையும், ஒரு முறை பிரேமையும் மாற்றியிருக்கிறோம்.

திருவையாற்றில் இருந்து காவிரிக்கரையோரமாக அரங்கம் திரும்புகையில் கோயிலடி என்று அழைக்கப்படும் தென்திருப்பேர் திவ்ய தேசம் கண்டேன். அப்பக்குடத்தான் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் அலுத்துக்கொண்டு பட்டாச்சார்யார் வருவதற்குள் பிடித்த படம்.

vandal-5

வீட்டில் அம்மா “அப்பக்குடத்தான்ல தினத்துக்கு மண்டகப்படி உண்டே. கேட்டாதான் சொல்வா. கைங்கர்யம் செய்றவா வீட்ல வெச்சுண்டு அப்பம் விப்பாளே வாங்கினியா” என்றாள். அது சரி.

*

இதிலுள்ள ஒரே ஒரு முரணை மட்டும் முன்வைக்கிறேன். கோயில்களின் தற்காலச் சிதிலங்களுக்கு நாத்திகர்கள் அநேகமாகக் காரணமாய் இருப்பதில்லை. அவர்கள்தான் கோயிலுக்கே வரமாட்டார்களே. சிதிலங்கள் ஆத்திகர்கள் அல்லது அவர்களில் அக்கறையற்றவர்களாலேயே நடந்தேறுகிறது. உதாரணமாக, முதலில் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயில் ‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர்ப் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு. கும்பகோணம் ராமர் கோயில் தர்மகர்த்தா ஆலுவலர்கள் சிற்பங்களை யாராவது கவனிக்கிறார்களா (ஃபோட்டோ எடுக்க) என்று ஆள்வைத்துக் கவனித்துக்கொள்ளும் அளவிற்கு அக்கறையான ஆத்திகர்களே (என்று நினைக்கிறேன்). ஆனால், கோயிலுக்கு மின்சாரம் வழங்குவது போன்ற அவர்கள் அன்றாட வேலைகளில் அச்சிற்பங்கள் குறிக்கிட்டால் அவை மேலேயே மின்சார ஸ்விட்ச்போர்ட்டை பொருத்தத் தயங்காத அக்கறையற்றவர்கள். திருவையாறு கோயிலில் ரெஸ்ட்டோரேஷன் என்று சுவரோவியங்களுக்கு மேல் இக்கால நகல் எடுக்கப்படுவதும் ‘கோயிலில் ஏதாவது நல்லது செய்யவேண்டும்’ என்று நினைக்கும் ஆத்திகர்களின் உழைப்பினால்தானே.

நிறைய எழுதலாம். ஏற்கெனவே, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவிய பொக்கிஷங்கள் என்று விரிவாகப் பொருமியிருக்கிறேன். படித்துவிட்டு பிரேமா நந்தகுமார் பாராட்டினார். நீங்களும் வேண்டுமானால் செய்யுங்கள்.

இதற்குமேல் இவ்விஷயங்களில் ‘ரியாக்டிவ்வாக’ புலம்பிக்கொண்டிருந்தால் என் உடம்பிற்கு ஆகாது. என் மிடில்கிளாஸ் மத்யமர் மனதிற்கேற்ற கரிசனம் பொங்கியதில் ஏற்கெனவே இரண்டு நாள்களாக ஜுரம். வீக்கெண்டில் சரியாப் போய்விடும்.

நமது படைப்பூக்க உந்துவிசைகளை எங்கிருந்தும் பெறலாம். நம் ஆக்க பலங்களை வெளிப்படுத்துவனவற்றில் இருந்து பெற்றால் அனைவருக்கும் ஆனந்தம். அடுத்து ‘ப்ரோ-ஆக்டிவ்வாக’ ஏதாவது எழுத ஸ்ரீரங்க நாச்சியார் அருளட்டும்.

மிருதங்க பூபதி, மரபிசை, எளிமை, அறிமுகம்

Standard

பாலக்காடு மணி ஐயர், பழநி சுப்ரமணியப் பிள்ளை இருவருடன் இணைந்து இராமநாதபுரம் முருகபூபதி கர்நாடக இசையின் மிருதங்க மும்மூர்திகளில் ஒருவர். இவரது நூறாவது பிறந்த வருட விழாவையொட்டி 16, பிப்ரவரி, 2014 அன்று ‘பரிவாதினி’ அமைப்பு சென்னை லஸ் ‘ராக சுதா’ அரங்கில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மதுரை சேஷகோபாலன் உரை கேட்கப்பெற்றேன்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சிஷ்யர் இராமநாதபுரம் சங்கரசிவ பாகவதர் அவரது சிஷ்யர் சேஷகோபாலன். சங்கரசிவத்தின் தம்பி முருகபூபதி (சகோதரர்கள் நால்வர்). இதுவரை இவரைப் பற்றி எதுவுமே அறிந்திராத வாசகர்கள், முருகபூபதியின் வாழ்க்கை, வாசிப்பை அறிமுகம் செய்து ராம் எழுதியுள்ள கட்டுரையை வாசித்துக்கொள்ளுங்கள் [ http://solvanam.com/?p=16433 ].

நிகழ்ச்சியில் சேஷகோபாலனுக்கு முன்னர் மிருதங்க வித்வான் கே. எஸ். காளிதாஸ், குழல் வித்வான் ரமணி பேசினார்கள். இறுதியில் சேஷகோபாலன் கச்சேரியும் இருந்தது. அனைத்தும் பரிவாதினியின் யுடியூப் சேனலில் ஐந்துமணிநேரக் கானொளியாய் உள்ளது. சுட்டி இங்கே [ http://www.youtube.com/watch?v=T5F2fOPQbB0 ]. நான் பதிவு செய்த சேஷகோபாலனின் நாற்பத்தியைந்து நிமிட உரையின் ஒலித்தொகுப்பை மட்டும் கீழே அளித்துள்ளேன்.
Continue reading

மருந்தீஸ்வரர் கோயிலில் போரோமியன் வளையங்கள்

Standard

சில வருடங்கள் முன்னர் இத்தலைப்பில் எழுதியுள்ளேன். சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த ‘மீள்பதிவில்’ உள்ளடக்கத்தை சிறிது வளர்த்தியுள்ளேன். ஓரிரு கோவில்களையும் சேர்த்துக்கொண்டுள்ளேன். கட்டுரையாக ஒரு வடிவம்  ‘அம்ருதா’ ஜனவரி 2014 இதழிலும் வெளியாகியுள்ளது; ‘டூக்கன் பறவைகளுக்கு…’ புத்தகத்திலும் இருபத்தியைந்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. புதிய இணைய வாசகர்களுக்கு விஷயத்தை அறிமுகப்படுத்தவே மீள்பிரசுரம். காரணம், அடிக்குறிப்பில். இனி, கட்டுரை…
Continue reading

எழுத்தாளன் ஆகிவிட்டபடியால்

Standard

பூர்வ பீடிகை: முதல் அறிவிப்பு ஒரேடியாக ‘அறிவிப்பாய்’ மட்டுமே முடிந்துவிட்டதே என்று சில நண்பர்களுக்கு (ஆக்சுவலா, எதிரிகள்; with such friends who needs enemies) ஏமாற்றம். அதனால், here goes…

நகைச்சுவை என்பதால் நான் இக்கட்டுரையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டுள்ள நபர்கள் மட்டும் ‘மனம் புண்பட்டால்’ போதும். மற்றவர்கள் விழுந்து விழுந்து சிரித்தே புண்கள் பட்டுக்கொள்ளுங்கள்.
Continue reading

புத்தக முன்னுரை: ஏலியன்கள் இருக்கிறார்களா?

Standard

ஏலியன்கள் என்றால் நீ என்ன நினைக்கிறாய் என்று என் ஆறு வயது மகளிடம் கேட்டேன். “ஓ தெரியுமே;” (பிறகு எல்லாம் ஆங்கிலத்தில்…) “பிளானெட்டில் வசிப்பவர்கள்.” “அப்ப நாம்?” என்றவுடன், யோசித்து திருத்தி, “இல்லை, மார்ஸிற்கோ ப்ளூட்டோவிற்கோ வந்துபோவார்கள். ஸ்பேஸில் வசிப்பார்கள் அப்பா. ஸ்பேஸ்ஷிப் வைத்திருப்பார்கள்; பீச் (peach), வெளுப்பு, கறுப்பு என்று நம்மைப்போல் கலரில் இருக்கமாட்டார்கள், நீலம், பச்சை கலர்ல, ஓவல் மூஞ்சியுடன், குச்சிக்கால்களுடன், காற்றே இல்லாமல் உயிர் வாழ்வார்கள்”.

எனக்குப் பரிச்சயமான உலகைவிட்டு, அதேசமயம் முழுவதுமாய் மாறுபடாமல் (விவரணையை மீண்டும் படித்துப்பாருங்கள்) சொல்லிக்கொண்டே போகிறாள்.

“நிறுத்து நிறுத்து. இரும்மா; புத்தனாம்பட்டியே பார்கலை நீ, எங்கு புளூட்டோ வரை சென்று ஏலியன்களை பார்த்தாய்?” என்றேன்.
Continue reading

புத்தக முன்னுரை: நேனோ ஓர் அறிமுகம்

Standard

nano-front-s“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள்,  தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: சஞ்சய் தமிழ் இசைக் கச்சேரி

Standard

2013-dec-jan-03-dinamalar-arunn-review-sanjay[03 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம். இந்த கட்டுரையுடன் இசை விமர்சனம் தொடர்பான ‘மார்கழி உற்சவம்’ நிறைவு பெறுகிறது.]

தமிழ் இசைச் சங்கம் சார்பில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் வழக்கிய கச்சேரியை சஞ்சய் ”உந்தன் பாத பங்கஜம்” என்று சங்கராபரண ராக வர்ணத்தில் துவங்கினார்.

ஆனந்தபைரவி ராகத்தில் “பூ மேல் வளரும் அன்னையே (ஒளிபொருந்தும்)” என்று கலைவாணியின் மேல் மழவை சிதம்பர பாரதி இயற்றிய கிருதி. எதுகை மோனையிடும் வரிகளை சஞ்சய் அருமையாய்ப் பாடினார். ஸ்வரங்களில் அணுஸ்வர ஒலிகளையும் ஏற்றி ஸ க பா ஸ என்று தாவியதை ரசித்தோம். இவ்வுருப்படியே இன்றைய கச்சேரியின் பட்டொளி.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ஸ்ரீவல்ஸன் மேனன் கச்சேரி

Standard

2013-dec-jan-02-dinamalar-arunn-review-srivalson[02 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஸ்ரீவல்ஸன் மேனன் கேரளத்தில் இருந்து மார்கழி இசைவிழாவில் சில வருடங்களாய் பாடிவருபவர். மியூசிக் அகடெமி கச்சேரியில் பூஷாவளி ராகத்தில் “கோபநந்தன” என்னும் கிருதியை பாடினார். தொடர்ந்த ஸ்வரங்களில் நல்ல விறுவிறுப்பு.

அடுத்து ரீதிகௌளை ராகத்தில் சுருக்கமான ஆலாபனை. வயலினில் எடப்பள்ளி அஜித்குமாரின் ஆலாபனை நறுக்கு தெறித்தது. தொடர்ந்து ஆதி தாளத்தில் “சேரராவதேமிரா” என்னும் தியாகையரின் கிருதியை சங்கதிகளால் இழைத்து பாடினார். ஆலத்தூர் சகோதரர்களின் ஸ்வரங்கள் இக்கிருதியில் பிரசித்தம். மந்திரஸ்தாயி ஸ்வர சஞ்சாரங்கள் ஸ்ரீவல்ஸனின் குரல்வளத்தை சுட்டின. கிருதியை எடுத்துக் கையாண்டதற்கு ஸ்ரீவல்ஸனை பாரட்டலாம்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: மாண்டலின் ஸ்ரீநிவாஸ்

Standard

2013-dec-jan-01-dinamalar-arunn-review-srinivas[01 ஜனவரி 2014 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகடெமி கச்சேரியில் யு.ஸ்ரீநிவாஸ் மாண்டலினில் கானடா ராகத்தில் “சரஸுட” என்னும் வர்ணத்தை வழக்கமான அதிவேக காலப்பிரமாணத்தில் துவங்கினார். மிருதங்கத்தில் திருச்சி பி. ஹரிகுமார், கடத்தில் இ.எம்.சுப்ரமணியம், கஞ்சிராவில் வி.செல்வகணேஷ். விறுவிறுப்பில் துவக்கத்திலேயே அரங்கம் கிளர்ச்சியில் திளைத்தது.

அடுத்ததாய் பஹூதாரி ராகத்தில் சில சஞ்சாரங்களை வழங்கி, துளசிவனம் இயற்றிய “பஜமானஸம்” என்னும் கிருதியை ஆதி தாளத்தில் வாசித்தார். ஏழெட்டு ஆவர்தனங்களுக்கு அதிநீளமான ஒரு கோர்வையை வைத்து, தாளவாத்தியங்கள் ஒருங்கிணைந்து ஜோர் பெருக்க, அவர்களையும் விஞ்சிய அதிவேக ஸ்வரங்களாய் அடுக்குவது மாண்டலினில் ஸ்ரீநிவாஸால் மட்டுமே முடிந்தது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வசுந்தரா கச்சேரி

Standard

2013-dec-31-dinamalar-arunn-review-vasundhra[31 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

வசுந்த்ரா ராஜகோபால் தன் மியூசிக் அகடெமி கச்சேரியை மூலைவீட்டு ரங்கஸ்வாமி நட்டுவனார் இயற்றிய ‘சலமேலரா’ என்னும் நாட்டகுறிஞ்சி ராக வர்ணத்தில் விறுவிறுப்பாய் துவங்கினார். வயலினில் பாலு ரகுராம், மிருதங்கத்தில் தஞ்சாவூர் சுப்ரமணியம், கடத்தில் டி.வி.வெங்கட சுப்ரமணியம் உடன் வாசித்தனர்.

தொடர்ந்து தர்பார் ராகத்தில் மிஸ்ரசாபு தாளத்தில் ராமாபிராம என்னும் தியாகையர் கிருதியை பாடினார். தாளத்துடன் ‘தியாக’ என உடையும் சரண வரியை, ‘ராகேந்து முக தியாகராஜ ரக்ஷக’ என்று உடைக்காமல் நேர்த்தியாக பாடியது சிறப்பு.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வியாசர்பாடி கோதண்டராமன் கச்சேரி

Standard

2013-dec-30-dinamalar-arunn-review-kothandam[30 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

பரிவாதினி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரிக்கு காலை பத்துமணியளவில், நான் ஒருவன் அமர்வதற்கே இருபத்தியைந்து இருக்கைகளா, என்றவாறு ஆழ்வார்பேட்டையின் அடுக்கக சமூக அறையொன்றில் நுழைந்தேன். கோதண்டராமன் மாயாமாளவகௌளையில் தியாகையரின் கிருதியில் “துளசிதளமுலசே சந்தோஷமுகா” என்று வினவிக்கொண்டிருந்தார்.

மேடையில் ஆறு பேர். கீழே ரசிகர்களாய் ஐந்து பேர். அதில் மூன்று பேர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள். என்னைத் தவிர ஒருவர் நான் அழைத்துவந்தவர். தனிமைகொண்டு நூறாண்டுகளுக்கு முன்வாழ்ந்த கலாரசிக ஜமீன்போல் உணர்ந்தேன்.

குந்தலவராளி சஞ்சாரங்களுக்குப் பின்னர் “போகீந்த்ர சாயினம்” என்று பழகிய கிருதியைத்தான் துவங்கினார். எனக்கோ “ஒருமுறை வந்து பார்த்தாயா” என்று மணிச்சித்ரதாழ் திரைப்படத்தின் குந்தலவராளி வரிகளே ஒலித்தது. நாகஸ்வரம் ரசிகர்களிடம் கேட்பதாய்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: அஸ்வத் நாராயணன் கச்சேரி

Standard

2013-dec-26-dinamalar-arunn-review-aswath[26 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ராக சுதா அரங்கில் “நாத இன்பம்” சார்பில் நடந்த கச்சேரியை அஸ்வத் நாராயனன் “வனஜாக்ஷி” என்னும் கல்யாணி ராக அட தாள வர்ணத்தில் துவங்கினார். மேற்காலத்தில் எழுபதுகளில் கே.வி.என். கச்சேரிகளில் கேட்ட அதே விறுவிறுப்பு.

பளிச்சென்று பேகடா வெளிப்படும் சஞ்சாரத்துடன் துவங்கி அடுத்ததாய், “வல்லப நாயகஸ்ய” என்னும் தீக்ஷதரின் ரூபகதாள கிருதியை பாடினார். சிறு ஆவர்த்தனங்களில் ஸ்வரங்களை வழங்கினார்.

அடுத்ததாய் வராளி ராகம் ஆலாபனை. அகாரங்களுடன் நீள்வாக்கியமாய் ஸ்வரங்களை கோக்கும் வகையிலான ஆலாபனை அஸ்வத்தின் குரலின் தேர்ச்சியையும், இசையின் முதுமையையும் வெளிப்படுத்தியது.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: திருச்சூர் சகோதரர்கள் கச்சேரி

Standard

2013-dec-25-dinamalar-arunn-review-trichur-bros[25 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மைலாபூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் திருச்சூர் சகோதரர்கள் (ஸ்ரீகிருஷ்ண மோஹன், ராம்குமார் மோஹன்) ‘மஹா கணபதிம்’ என்னும் தீக்ஷதரின் நாட்டை ராக கிருதியில் துவங்கினர். ஸ்வரகல்பனையில் இருவரும் சேர்ந்து ஒத்திசைவாய் கோர்வையை பாடி கரவொலி பெற்றனர்.

அடுத்ததாய் ஹமீர் கல்யாணி ராகத்தில் சஞ்சாரங்களுடன் துவங்கி ‘தூமணி மாடத்து சுற்றும் விளக்கேற்றி’ என்னும் திருப்பாவை பாசுரத்தை பாடினர்.

மிஸ்ரசாபு தாளத்தில் அடுத்தாய் தீக்ஷதரின் ‘நரசிம்மா ஆகச்ச’ என்னும் மோஹன ராக கிருதி. ’முரஹர…’ எனத் துவங்கும் சரண வரியை பரிசோதனையாய் இரண்டு ஸ்தாயிகளில் நிரவல் செய்ய முயன்றனர். வரிகளின் இடைவெளிகளை மோஹன ராக செவ்வியல் சஞ்சாரங்களை இட்டு நிரப்பியது அருமை.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: ரவிகிரண் கச்சேரி

Standard

2013-dec-24-dinamalar-arunn-review-ravikiran[24 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகாடமியில் ரவிகிரண் தன் கோட்டுவாத்திய கச்சேரியை கண்ட அட தாளத்தில் சாவேரி ராகத்தில் தானே இயற்றிய வர்ணத்தில் துவக்கினார். வரிகளை அவர் குறிப்பிட்டிருக்கலாம். “நாத தனும் அனிஷம்” என்னும் சித்தரஞ்சனி ராகத்திலமைந்த தியாகையரின் கிருதியை அடுத்ததாய் வாசித்தார். விறுவிறுப்பாய் ஸ்வரங்கள் வாசித்து கோர்வையில் முடித்ததை ரசிக்கமுடிந்தது.

அடுத்ததாய் பூர்வி கல்யாணி ராகம் ஆலாபனை. ராகத்தின் அடையாளத்தை காட்டும் பிடியுடன் துவங்கி, மதுரமாய் மனோதர்மத்துடன் வார்த்தெடுக்கப்பட்டது. மைசூர் மஞ்சுநாத் வயலின் பாணிக்கு ஒத்துவராத ராகமோ எனத்தோன்றியது.

நீலகண்ட சிவன் ரூபக தாளத்தில் இயற்றிய “ஆனந்த நடமாடுவார் தில்லை” எனத்துவங்கும் தமிழ் கிருதி. இதன் ’வஞ்சகம் இல்லாத அடியார் குவிக்க’ என்னும் சரண வரியில் நிரவல் செய்தார். இப்பகுதியில் இடைவெளிகளை மிருதங்கம் அருமையான கும்கிகள் வழங்கியது. தொடர்ந்து விறுவிறுப்பான ஸ்வரங்களை வாசித்து ரவிகிரண் பரவசப்படுத்தினார்.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீத விழா: வேதவல்லி கச்சேரி

Standard

2013-dec-23-dinamalar-arunn-review-vedavalli[23 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

மியூசிக் அகாடமியில் வேதவல்லி கானடா ராகத்தில் சில சஞ்சாரங்களுடன் கச்சேரியை துவக்கினார். ‘சுகி எவரோ சுமுகி எவரோ’ என்னும் தியாகையரின் ஆதி தாள கிருதி.

தொடர்ந்து கச்சேரியின் முதல் உருப்படியிலேயே, எவருமே எதிர்பாராத “எவரு சுகி எவரு ராமா நாம” என்னும் பல்லவி வரியிலேயே நிரவல். நிரவல் அங்கம் கிருதியின் ஒரு வரியை ராகத்தின் குணங்களை வெளிக்கொணரும் விதமாய் இசையில் விரித்து நிரப்புவது. நம் மரபிசையின் கடினமான அங்கம். படைப்பூக்கத்திற்கு வயதேது.

அடுத்து “தன்யு தெவ்வடோ தாசரதே” என்னும் பட்ணம் சுப்ரமணிய ஐயரின் மலயமாருத ராக கிருதியை பாடினார். தொடர்ந்து அடானாவில் சுருக்கமான ஆலாபனை. உடனே அடையாளம் காணப்பட்டு, கவரப்பட்டோம். தியாகையரின் ‘நாரத கான லோல’ என்னும் ஆதி தாள கிருதி. தொடர்ந்து அடாணாவுக்கேற்ற மிடுக்கான ஸ்வரங்கள் வெளிப்பட்டன.
Continue reading

2013 டிசெம்பர் சங்கீதா விழா: மண்டா சுதாராணி கச்சேரி

Standard

2013-dec-22-dinamalar-arunn-review-manda[22 டிசெம்பர் தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]

ஆந்திரப் பாடகரான மண்டா சுதாராணி தன் மியூசிக் அகாடமி கச்சேரியை ‘வந்தே வாசுதேவம்’ என்று ஸ்ரீராகத்தில் துவங்கினார். ரம்யமான சிட்டைஸ்வரங்கள் பஞ்சரத்ன ஸ்ரீராக கிருதியில் இருக்கும் கோர்வைகளிலிருந்து மாறுபட்டதாயிருந்தது சிறப்பு.

அடுத்ததாய் சலநாட்டை விவாதி மேளராகத்தில் ஆலாபனை. அருமையான அகார பிடிகள் வெளிப்பட்டன. தொடர்ந்து கோடீஸ்வர ஐயரின் ‘ஏதயா கதி’ கிருதியை ஆதி தாளத்தில் பாடி, ஸ்வரகல்பனை செய்து முடித்தார்.

அடுத்ததாய் ஆலாபனை ஜெயந்தசேனா ராகத்தில். பல பத்தாண்டுகளாய் கச்சேரிகளில் அரிதாக ஆலாபனை செய்யப்படும் ராகங்களில் ஒன்று. நல்ல முயற்சி. ராகத்தின் பிடிகளை சுற்றி வாசிக்கையில் பிடிப்புடன் வெளிவந்த ராகவேந்திர ராவின் வயலின் ஆலாபனை, வேறுசமயங்களில் ஸ்வரப்பயிற்சியாய் ஒலித்தது. ஆதி தாளத்தில் ‘வினதாசுதவாகனஸ்ரீரமணா’ எனும் தியாகையரின் கிருதி. ஸ்வரங்களில் முடிக்கையில் சரியாக பொருளமையும் விதமாய் ‘வினதாசுத வாகனன்’ என்றோ ‘வினதாசுதவாகனஸ்ரீ’ என்றோ பாடியது பொருளுணர்ந்தவரின் மேடைச்சிறப்பு.
Continue reading