விஷ்ணுவின் மார்பைப் பிளந்து

Standard

விஷ்ணு நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் குடலைக்கிழித்து மாலையாகப் போட்டுக்கொண்டார். லக்ஷ்மி பிராட்டியை தன் மார்பில் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரம்மனை நாபிக்கமலத்திலிருந்து தாமரை மேல் ஜனித்தார். இதெல்லாம் பழங்கதை. விஷ்ணுவின் மார்பைப் பிளந்தவர் யார் என்று சொல்ல முடியுமா?

தெரியவில்லையா. கீழே படத்தில் பாருங்கள்.

vandal-1

மதுநின்ற தண்டுழாய் மார்வன் என்று பேயாழ்வாரால் பாடப்பட்ட, ரீயின்ஃபோர்ஸ்டு காண்க்ரீட்டினால் நச்சக் என்று பிளக்கப்பட்ட, விஷ்ணுவை.

vandal-1-b

ஸ்ரீரங்கம் அரங்கன் திருக்கோயில் தாயார் சந்நிதி பிரகாரத்தில், பங்குனி உத்திர வெள்ளி மண்டபத்தில் உள்ள தூணில் சில வருடங்கள் முன்னால் இது நடந்தேறியுள்ளது. உபயதாரர் பெயர்களை கல்வெட்டில் பொறிப்பதற்கு.

vandal-1-c

இடைப்பட்ட வருடங்களில் ஒவ்வொரு முறை கோயில் செல்கையிலும் இது கண்ணில் படுகையில், நானும் யாராவது சரி செய்துவிடுவார்கள் என்று நினைத்துக்கொள்வேன். இம்முறை ஏதோ வழக்கத்தை மிஞ்சிய ஒரு நமைச்சல். கேசமே போயிற்று என்று எடுப்பதற்கு வாங்கிய திட்டுக்களையும் கடந்து, படம் பிடித்து அளிக்க முடிவுசெய்தேன்.

சிமெண்ட்டைக் குழைத்த சித்தாள், உபயதாரர் பெயருள்ள கல் பலகையை நிறுத்திய முத்தாள், பூசிக் கரணை போட்ட கொத்தனார், கால்தடுக்காமல் வேட்டிமுனையை விரலோரத்தில் தூக்கி புட்டத்தில் பிடித்தபடி பார்வையிட்ட மேஸ்திரி, அனைவரும் வயிற்றுப்பிழைப்பிற்காக வேலை செய்பவர்கள். கோயிலையே இடித்துக்கட்டச்சொன்னாலும் செய்வார்கள். இத்திருப்பணியில் சம்பந்தப்பட்ட கோயில் அதிகாரிகளுக்கும் இச்செயலில் வருத்தம் கிஞ்சித்தும் இருக்காது. இப்போதுமே, இவ்விஷயம் அவர்கள் எவருக்காவது தெரியும் என்பதே சந்தேகம். அவர்கள் வரும்படி மூலவர் சந்நிதியில். என் ஆச்சர்யம், தாயார் சந்நிதியில் தினமும் மஞ்சள் காப்பு வாங்கி இட்டுக்கொள்வதற்குத் திரளும் பஞ்சகச்ச பக்தர்கள், தர்மதரிசன பொதுமக்கள் என்று எவருமே இச்செயலை ஆட்சேபிக்கவில்லையா?

வேளுக்குடி கிருஷ்ணன் இப்போதெல்லாம் அதிக நேரம் ஸ்ரீரங்கத்தில்தான் செலவிடுகிறாராம். தாயாரை தினமும் பிரதக்ஷணம் செய்வார்தானே.

*

கும்பகோணம் பல சிறந்த கோயில்கள் நிறைந்த ஊர். அங்கு உள்ள ராமர் கோவிலுக்குப் போயிருக்கிறீர்களா? நிச்சயம் அடுத்தமுறை செய்யுங்கள். அபாரமான சிற்பங்கள் உள்ள கோவில்.

kumb-ramar-koil-4

ஒரு சாம்பிள் அபாரத்தைக் கொடுக்கிறேன்.

பிரகாரத்தின் மூலைத் தூணில் ஒரு பக்கமாய் பார்த்தால் இவ்வாறு தெரியும் சிற்பம்.

kumb-ramar-koil-1

தொன்னூறு டிகிரி பிரகாரத்தில் திரும்பினால், அதே தூணில், அதே சிற்பம், கீழ்வருமாறு.

kumb-ramar-koil-2

விளக்கத்திற்கு, ஒரு டாப் ஆங்கிள் ஷாட்.

kumb-ramar-koil-3

யார் சொன்னது, பண்டைத்தமிழருக்கு பக்தி மட்டுமே, நகைச்சுவை உணர்வு இல்லையென்று?

இக்கோயிலில் அடுத்த காட்சி.

போட்டோ எடுக்கக்கூடாது என்று கூச்சலிட்டதும் (இதற்கென்று தனியாக ஓஜோஸி ஆள்படை உள்ளது), தர்மகர்த்தா ஆபிஸில் நூறு ரூபாய் பணம் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, பிறகு எடுத்தது.

என்னிடம் பணம் வாங்குவதற்கு ரசிது கொடுக்குமளவிற்கு தொழில்சுத்தம் உள்ளவர்கள், தங்கள் வருவாயின் ஊற்றான சிற்பங்களைப் பேணுவதிலும் அம்முனைப்பை அவ்வப்போது காட்டலாம்தான்.

*

கும்பகோணம், சுவாமிமலைக்கு அருகில் தாராசுரம் கோவில் பிரசித்தி (பக்கத்தில், பட்டீஸ்வரம் காளியும் பிரசித்தி). கங்கைகொண்டசோழபுரத்தை நினைவூட்டும் அமைப்புகொண்ட இக்கோவிலின் சிற்பங்களும் சுவரோவியங்களும் சோழர்கால அபாரங்கள். கீழே ஓரிரு சாம்பிள்கள்.

இங்கு சுவரோவியங்களின் மேல் கூறான கருங்கல்லினால் கீறப்பட்ட “ஜீவா லவ்ஸ் அனிதா” போன்ற தற்கால தெருவாசகங்களும் பிரசித்தம்.

இந்தக் காட்சியை அருகில் படம்பிடிக்க உச்சி வெய்யிலில், கை கால் கொப்பளிக்க, கற்கோயிலின் முதல் சில நிலைகளை ஏறி, ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டு, மற்றொரு கையால் காமிராவை ஆட்டாமல் இயக்கிப் படம்பிடித்தேன்.

யோசித்துப்பாருங்கள். முன்னர் இதே அல்லது இதைவிட அதிக சிரமங்கள் எடுத்து(த்தான்) நம்மில் ஒருவர் இங்கு ‘ஜீவா…’ வகை கிறுக்கலை (மட்டும்) நிகழ்த்தியிருக்கிறார்.

என்னசொல்வது?

அதற்கும் முன்னால் சாரங்களில் கழுவேறும் நிலையில் அமர்ந்துதான் நம்மில் ஒருவர் இவ்வகை சுவரோவியங்களையும் அருளியிருக்கிறார்.

நல்லவேளை, சமீபத்தில் இக்கோயிலை ஏ.எஸ்.ஐ. தன் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளது (படத்தில் பிரகாரத்தில் தெரியும் கார்பெட் வெய்யில் சூட்டிற்காக அவர்கள் போட்டது). நிச்சயம் இவ்வகைச் சிதிலங்கள் குறைந்துவிடும்.

ரெஸ்டொரேஷன் வகை அபாயங்கள் உருவாகலாம்.

*

திருவையாறு பஞ்சநதீஸ்வரர் கோயிலுக்குப் போயிருக்கிறீர்களா. தஞ்சை பெரிய கோயிலை விட வளாக அளவில் பெரிதானதாம். கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாம் (ஸ்தல புராண சுவர் அறிவிப்பு சொல்கிறது). அங்கு மறக்காமல் தர்மசம்வர்தினி அம்பாள் சந்நிதி முன் பிரகாரத்தைப் பார்வையிடுங்கள்.

இங்கும் உள்ளே ஒரு சுவர் முழுவதும் சுவரோவியங்கள் இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் கிட்டத்தட்ட அழிந்து விட்டது. பரிகாரமாய்ச் செய்வதைப்பார்த்தால்தான் பகீரென்கிறது.

கீழே சில படங்களில் இன்றைய நிலையை வழங்கியுள்ளேன்.

thiruvaiyaru-1

vandal-4-bvandal-4

நூற்றாண்டுகள் பழமையான ஒரிஜினல் சுவரோவியங்களைக் காப்பாற்றுவதாக, அதற்கு மேல் ரெஸ்டொரேஷன் என்று இக்காலச் சாயங்களில் இவர்கள் வரைந்துகொண்டிருக்கிறார்கள்.

அருங்காட்சியகப் பெட்டகத்தினுள் இருந்த மூக்குக்கண்ணாடியைப் பார்த்துக் கேட்டானாம்: இது நிஜமாவே பெஞ்சமின் ஃபிராங்க்ளினோடா மூக்குக்கண்ணாடியா?

உடன் வந்த கைடு: அதிலென்ன சந்தேகம், அவருடையதேதான். என்ன, இரண்டு முறை கண்ணாடியையும், ஒரு முறை பிரேமையும் மாற்றியிருக்கிறோம்.

திருவையாற்றில் இருந்து காவிரிக்கரையோரமாக அரங்கம் திரும்புகையில் கோயிலடி என்று அழைக்கப்படும் தென்திருப்பேர் திவ்ய தேசம் கண்டேன். அப்பக்குடத்தான் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் அலுத்துக்கொண்டு பட்டாச்சார்யார் வருவதற்குள் பிடித்த படம்.

vandal-5

வீட்டில் அம்மா “அப்பக்குடத்தான்ல தினத்துக்கு மண்டகப்படி உண்டே. கேட்டாதான் சொல்வா. கைங்கர்யம் செய்றவா வீட்ல வெச்சுண்டு அப்பம் விப்பாளே வாங்கினியா” என்றாள். அது சரி.

*

இதிலுள்ள ஒரே ஒரு முரணை மட்டும் முன்வைக்கிறேன். கோயில்களின் தற்காலச் சிதிலங்களுக்கு நாத்திகர்கள் அநேகமாகக் காரணமாய் இருப்பதில்லை. அவர்கள்தான் கோயிலுக்கே வரமாட்டார்களே. சிதிலங்கள் ஆத்திகர்கள் அல்லது அவர்களில் அக்கறையற்றவர்களாலேயே நடந்தேறுகிறது. உதாரணமாக, முதலில் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயில் ‘விஷ்ணுவின் மேல் சிமெண்ட்’ செயல் அந்த வெள்ளி மண்டபம் செப்பனிட உதவிய உபயதாரர் (ஆத்திகர்) பெயர்ப் பலகை வைப்பதற்கான பக்கவிளைவு. கும்பகோணம் ராமர் கோயில் தர்மகர்த்தா ஆலுவலர்கள் சிற்பங்களை யாராவது கவனிக்கிறார்களா (ஃபோட்டோ எடுக்க) என்று ஆள்வைத்துக் கவனித்துக்கொள்ளும் அளவிற்கு அக்கறையான ஆத்திகர்களே (என்று நினைக்கிறேன்). ஆனால், கோயிலுக்கு மின்சாரம் வழங்குவது போன்ற அவர்கள் அன்றாட வேலைகளில் அச்சிற்பங்கள் குறிக்கிட்டால் அவை மேலேயே மின்சார ஸ்விட்ச்போர்ட்டை பொருத்தத் தயங்காத அக்கறையற்றவர்கள். திருவையாறு கோயிலில் ரெஸ்ட்டோரேஷன் என்று சுவரோவியங்களுக்கு மேல் இக்கால நகல் எடுக்கப்படுவதும் ‘கோயிலில் ஏதாவது நல்லது செய்யவேண்டும்’ என்று நினைக்கும் ஆத்திகர்களின் உழைப்பினால்தானே.

நிறைய எழுதலாம். ஏற்கெனவே, காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவிய பொக்கிஷங்கள் என்று விரிவாகப் பொருமியிருக்கிறேன். படித்துவிட்டு பிரேமா நந்தகுமார் பாராட்டினார். நீங்களும் வேண்டுமானால் செய்யுங்கள்.

இதற்குமேல் இவ்விஷயங்களில் ‘ரியாக்டிவ்வாக’ புலம்பிக்கொண்டிருந்தால் என் உடம்பிற்கு ஆகாது. என் மிடில்கிளாஸ் மத்யமர் மனதிற்கேற்ற கரிசனம் பொங்கியதில் ஏற்கெனவே இரண்டு நாள்களாக ஜுரம். வீக்கெண்டில் சரியாப் போய்விடும்.

நமது படைப்பூக்க உந்துவிசைகளை எங்கிருந்தும் பெறலாம். நம் ஆக்க பலங்களை வெளிப்படுத்துவனவற்றில் இருந்து பெற்றால் அனைவருக்கும் ஆனந்தம். அடுத்து ‘ப்ரோ-ஆக்டிவ்வாக’ ஏதாவது எழுத ஸ்ரீரங்க நாச்சியார் அருளட்டும்.