[26 டிசெம்பர் 2013 தினமலர் நாளிதழில் வெளியானதின் ஒரு வடிவம்]
ராக சுதா அரங்கில் “நாத இன்பம்” சார்பில் நடந்த கச்சேரியை அஸ்வத் நாராயனன் “வனஜாக்ஷி” என்னும் கல்யாணி ராக அட தாள வர்ணத்தில் துவங்கினார். மேற்காலத்தில் எழுபதுகளில் கே.வி.என். கச்சேரிகளில் கேட்ட அதே விறுவிறுப்பு.
பளிச்சென்று பேகடா வெளிப்படும் சஞ்சாரத்துடன் துவங்கி அடுத்ததாய், “வல்லப நாயகஸ்ய” என்னும் தீக்ஷதரின் ரூபகதாள கிருதியை பாடினார். சிறு ஆவர்த்தனங்களில் ஸ்வரங்களை வழங்கினார்.
அடுத்ததாய் வராளி ராகம் ஆலாபனை. அகாரங்களுடன் நீள்வாக்கியமாய் ஸ்வரங்களை கோக்கும் வகையிலான ஆலாபனை அஸ்வத்தின் குரலின் தேர்ச்சியையும், இசையின் முதுமையையும் வெளிப்படுத்தியது.
தொடர்ந்து “ஆழி மழை கண்ணா” என்று அரியக்குடியார் வராளியில் இசைவடிவம் கொடுத்த திருப்பாவையை பாடினார். தாளபக்கவாத்தியங்கள் உற்சாகமான சர்வலகு வாசிப்பில் எழுச்சியூட்டினர். “நாங்களும் வாழ உலகினில் பெய்திடாய்” என்னும் வரியில் நிரவல் செய்தார். மேற்காலத்தில் நிரப்புகையில் மேடையின் உற்சாகம் ரசிகர்களையும் தொட்டது. ஸ்வரங்கள் பாடி நீண்ட கோர்வையை வைத்து இவ்வுருப்பிடியை முடித்தார்.
வயலினில் சிதம்பரம் பத்ரிநாத் கற்பூர அறிவாய் கோர்வையை அப்படியே வாங்கி வாசித்தது சிறப்பு. கச்சேரியில் கும்பகோனம் ராமகிருஷ்ணன் மிருதங்கம் மற்றும் உடுப்பி ஸ்ரீகாந்த் கஞ்சிராவின் நாதமும் வாசிப்பும் அருமை.
ஹிந்தோளம் ராகத்தில் சுருக்கமாய் ஆலாபனை செய்து, முடிவில் தமிழில் “ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே” என்னும் அருணாசலகவியின் ராமநாடக கிருதியை பாடினார். ராமனுக்கு முடிசூட்டுவதில் தனக்கிருந்த மகிழ்ச்சியை கைகேயி கூனியிடம் தெரிவிப்பதாய் வரும் சுவையான கட்டம்.
அடாணாவில் காருண்ய ரசத்துடனான சிறு ஆலாபனைக்கு பிறகு “அனுபமகுணாம்புதி” என்று தியாகையரின் கிருதியில் சங்கதிகளுடன் புறப்பட்ட வேகத்தில் அரியக்குடியாரின் நிழலாடியது. மிருதங்கமும் சளைக்காமல் பாலக்காடு மணி ஐயர் இக்கிருதிக்கு வாசித்ததின் மேன்மையை தொப்பியிலேயே நினைவுறுத்தினார். மேற்கால ஸ்வரங்கள் சிறப்பாய் அமைந்தது.
அடுத்ததாய் சாவேரி ஆலாபனை. நிதானமாக வளர்த்தெடுக்கையில் படைப்பூக்கத்தை பாங்காய் வெளிப்படுத்தினார். வயலின் மதுரமான வில்வித்தையில் தேர்ச்சியுடன் பாடகரின் தன்மையை ஒத்து ஆலாபனையை வழங்கியது நன்று.
பிரதான தமிழ்கிருதியாய் “முருகா முருகா என்றால் உருகாதோ” என்னும் பெரியசாமி தூரன் இயற்றி, டி. கே. கோவிந்தராவ் இசைவடிவம் கொடுத்ததை வழங்கினார். தொடர்ச்சியாய் “செந்தில் மாநகர் வாழும் தேவாதிதேவனே” என்னும் வரியில் நிரவல் செய்தார். ஸ்வரங்கள் முடித்து தனி ஆவர்த்தனம் விட்டார்.
துக்கடாவில் “ஜெயஜெய வந்தே மாதரம்” என்று யமுனா கல்யாணியில் துவங்கி பிருந்தாவனி, புன்னாகவராளி, சிந்துபைரவி ஆகியவைகளில் ராகமாலிகையாய் பாடினார். செஞ்சுருட்டியில் “கலியுகதல்லி” என்னும் புரந்தரதாஸர் கிருதியை பாடி முடித்துக்கொண்டார்.
அஸ்வத் நாராயணனுக்கு இளவயதில் மரபிசையின் வலுவான பாடாந்திரம் அமைந்துள்ளது. கணீரென்ற குரலை வருத்தாமல், ஜிகினாக்களின்றிய இசையை நிறைந்த அரங்கில் வழங்கும் மனோதிடம் உள்ளது. அனைத்து உருப்படிகளிலும் ராக ஆலாபனை சிறிதேனும் செய்வதற்கு அவகாசம் உள்ளது. அவருக்குரிய இடத்தை வர்த்தகச்சபைகளிலும் விரைவில் அடைய வாழ்த்துவோம்.
***
பாக்ஸ் மேட்டர்
மரபிசையில் இன்றும் பாலபாடமாய் கற்கும் “வனஜாக்ஷி” என்னும் பிரபலமான கல்யாணி ராக வர்ணம் பூச்சி ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இயற்றியது என்பது தவறான கற்பிதம். இவ்வர்ணத்தை இயற்றியவர் நாகஸ்வரக் கலைஞர் நாகப்பட்ணம் வேணுகோபால பிள்ளை (1861 – 1917).
25/12/2013 அன்று ‘பரிவாதினி’ குழு, மிருதங்கம் செய்யும் கலைஞர் செல்வம் அவர்களை (பாலக்காடு மணி ஐயருக்கு மிருதங்கம் செய்துவந்த ’பர்லந்து’ என்றறியப்பட்ட ஃபெர்னாண்டஸ்ஸின் மகன்) கௌரவித்து பாராட்டுவிழா நடத்தினார்கள். இதன் முடிவில், தன் “லெக்-டெம்” உரையில், இசை ஆய்வாளர் முனைவர் பி. எம். சுந்தரம் மேற்படி தகவலை பகிர்ந்துகொண்டார்.