நூல் அறிமுகம்: துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை

Standard

“ஸொகஸுகா ம்ருதங்க தாளமு” என்று தொடங்குகிறார் தன் ஸ்ரீரஞ்சனி ராக கீர்த்தனையை, சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யர். இதே கருத்தை அவருக்குமுன்னர் புரந்தரதாஸரும் “தாள பேக்கு தக்க மேள பேக்கு” என்று முன்மொழிந்தார். நம் மரபிசை கச்சேரிகளில் சங்கீதத்திற்கு உறுதுணையாய் இருக்கவேண்டிய தாளபக்கவாத்தியங்களில் முதன்மையானது மிருதங்கம்.

சென்ற நூற்றாண்டில் அரியக்குடியார் வகுத்த கச்சேரி அமைப்பு பிரபலமாகிவருகையில், முப்பதுகளிலிருந்து அடுத்த சுமார் முப்பது வருடங்களுக்கு மிருதங்கத்தில் முழங்கியவர்கள் இருவர். ஒருவர் பாலக்காடு மணி அவர்கள். மற்றொருவர் பழனி சுப்ரமண்யன் அவர்கள். இவரை பற்றிய வரலாற்று அறிமுகமாகவும், தொகுப்பாகவும், மிருதங்க வாத்தியத்தின், வாசிப்பின், நுட்பங்களை அறிமுகம் செய்யுமாறும் அமைகிறது “லலிதா” ராம் எழுதி சொல்வனம் பிரசுரித்துள்ள துருவ நட்சத்திரம் நூல்.
Continue reading

இசை கட்டுரைகள் – சில கடிதங்கள்

Standard

இது சுய உலா.

கர்நாடக இசையை பற்றி நீள்கட்டுரைகளாக “இணையத்தில் நீ எழுதுவதை யாராவது வாசிக்கிறர்களா என்ன?” என்று அவ்வப்போது நலம்விரும்பிகள் விசனப்படுவர். எழுத்துசார் தொழில் இயல்பின் கை நமைச்சலில் சில அறிவுத்துறை விஷயங்களை தமிழிலும் எழுதவேண்டும் என ஆசை. நண்பர்களின் உந்துதல் மற்றும் அழைப்பினால் மட்டுமே கர்நாடக இசை பற்றி எழுதுகிறேன். எழுதியே சங்கீதத்தை புரியவைத்து கேட்கவைத்துவிடவேண்டும் என்பதற்காக இல்லை. தமிழுலகமே வாசிக்கவேண்டும் என்றும் ஆசையில்லை. அதனால், கட்டுரையின் நீள அகலம், கண அளவு, வாசகர்கள் எத்தனை என்றெல்லாம் கணக்கெடுப்பதில்லை. அறியவும் ஆவலில்லை. ஆனால் எழுதியதை ஆர்வமுள்ள சிலர் வாசிக்கின்றனர் என்பதை எதிர்பாராத வகைகளில் அறிகிறேன் (இப்போதெல்லாம் கச்சேரிகளில் முக்காட்டோடு பின்சீட்டில் வழிந்து அமர்ந்துகொள்கிறேன்).

எழுதிய இசைகட்டுரைகள் பற்றி அவ்வப்போது வரும் மின்னஞ்சல்களில் பாராட்டுமுகமான சிலவற்றை மட்டும் — சுய விளம்பரத்திற்காக — இப்பதிவில் தொகுத்துள்ளேன்.

(எதிர்வினைகளுக்கு பொதுவாக சம்பந்தப்பட்ட கட்டுரையின் அடுத்த கட்டுரையில் பதிலளித்துவிடுவதால் அவைகளையும், நெருக்கமானவர்களுடனான கடித விவாதங்களையும், இங்கு வழங்கவில்லை.)
Continue reading

பூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்

Standard

பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ‘விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம். முக்கியமாக மிருகங்களின், மனிதனின் மேக்னெட்டோரிஸப்ஷன், காந்தவிசையேற்புத்திறன் பற்றி அறிமுகம் செய்துகொள்வோம். கடைசிபக்கத்தை முதலில் வாசித்தபின்னரே மர்மக்கதை மிச்சத்தை வாசிப்பவர்களுக்கு: மேலிரண்டு நம்பிக்கைகளை மேக்னெட்டோரிஸப்ஷன் கொண்டு நிரூபிக்கமுடியவில்லை என்பதே இக்கட்டுரையின் கடைசிபக்கம்.

Continue reading

ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…

Standard

அன்னை பூமியின் எண்ணை வளம் தீரப்போகிறது. இதை பீக்-ஆயில் க்ரைசிஸ், “எண்ணை உச்சவரம்பின் ஆபத்து” என்கிறார்கள். தொழிற்புரட்சியின் தாலாட்டில் மயங்கி அரைஞாணை அகற்றி டிஜிட்டல் வாட்ச் கட்டிக்கொண்ட மனித சமுதாயம் உபயோகிக்கும் அநேக பொருட்களும் அடிபடப்போகிறது. பெட்ரோல், டீசல், இவற்றை எரிபொருளாய் உபயோகிக்கும் கார், பஸ், விமானம், கப்பல் போன்ற வாகனங்களிலிருந்து, அங்காடித்தெருவில் மின்வெட்டிலும் கடைகள் ஒளிர வெளியே, சூழலில் கரும்புகை கக்கும் டீசல் ஜென்-ஸெட், எண்ணை மற்றும் இயற்கை வாயுவை எரிபொருளாக்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்கள், கச்சா எண்ணையின் உதிரி ரசாயன உபயோகங்களான பிளாஸ்டிக் பொருட்களில் தொடங்கி, வீடு கட்டும், ரோடு போடும் ஆஸ்ஃபால்ட், தார், மெழுகு என்ற பட்டியல் இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிட ஏதும் நெயில் பாலிஷ் மற்றும் வாய்மை வரை நீள்கிறது. வாய்மை என்றால் லிப்ஸ்டிக் என்பதும் ஒரு அறிதல்.

எப்படி அறிகிறோம் என்பது கட்டுரையின் முதல் பகுதியில். நுண்கணிதம் (கால்குலஸ்) தவிர்த்து ஆனால் அறிவியலின் தீவிரத்தை குறைக்காத (ஆறாவதில் கற்ற) அல்ஜீப்ரா கணித மாதிரியைக் கொண்டு விளக்கிக் கொள்வோம். அடுத்து இதனால் உலகெங்கும் ஏற்பட்டுள்ள, ஏற்படப் போகும் இடர்களை ஓரளவு அலசுவோம். முற்பகுதி அறிவியல், பிற்பகுதி அவ்வறிவியலை மறைக்கும் அரசியல் செயல்பாடுகள்.

அப்ப வருங்காலம்? சுருக்கமாக, நோ பெட்ரோல். ஆனால் மாட்டுவண்டி திரும்பாது. அனிமல் ரைட்ஸ் பேச அநேகர் இருக்கின்றனர். கைவண்டியோ, குதிரைவண்டியோ மிஞ்சலாம். மேற்படி அனிமல் ரைட்ஸ் பேசும் முதல் உலக மாந்தர்கள் இவ்விரண்டையும் தொடர்ந்து ஆதரிப்பதால். நம்மவருக்கு கட்டுரையின் கடைசி வரியில் வழி சொல்லியிருக்கிறேன்.
Continue reading

விஷ்ணுபுரம் அறிமுகம்

Standard

இவ்வாறாக சுஜாதா எனும் புணைவன், வணிகசபையை வணங்கி, விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை தொன்னூறுகளின் இறுதியில் கூறிமுடித்ததும், சபையோர் பலர் காசைத் திருப்பிக்கேட்டார்கள்.

ஆதியில் ஒரு சொல் இருந்தது. அதற்கு விஷ்ணுபுரம் என்று பெயர்.

இப்டி உம்பர்ட்டோ ஈக்கோ கூட ஒரு புத்தகத்த என்பதுகளில் தொடங்கியுள்ளார் மகளே. தி நேம் ஆஃப் தி ரோஸ். ஒரிஜினல் இத்தாலி மொழில. நான் படிச்சது ஆங்கில வெர்ஷன்தான். உலக இலக்கியம்னாலே அப்டிதான். எந்த மொழில வேணா எழுதலாம். ஆனா இங்கிலிஷ்லதான் படிக்கமுடியும். “இன் தி பிகினிங் வாஸ் தி வேர்ட். அண்ட் தி வேர்ட் வாஸ் வித் காட்; அண்ட் தி வேர்ட் இஸ் காட்” அப்டீன்னு தொடங்குவார் ஈக்கோ. அந்த வாக்கியம் எங்கேருந்து வருதுன்னு தெரியுமா உனக்கு? தெரிஞ்சா விஷ்ணுபுரம் மெள்ள புரியும். பைபிள் தெரியுமா? அதுல ஜெனிஸிஸ் சாப்ட்டர்ல…

விஷ்ணுபுரத்தின் அறிமுகத்தை அருண் எனும் தமிழிலக்கியமீதி சொல்ல ஆரம்பித்தான்.
Continue reading

டூகேன் பறவைகளுக்கு ஏன் அலகு பெரிதாக உள்ளது?

Standard

மூக்கை வைத்து ஒருவர் என்ன செய்யலாம்? வாழ்கையில் சுவாசிக்கலாம். மெகாசீரியல் மாந்தராக இருந்தால், ஆண் பெண் வித்தியாசமின்றி, அழுது சிந்தலாம். எகிப்தின் கிளியோபாட்ராவாக இருந்தால், ரோமை ஆளலாம். அதே எகிப்தின் ஸ்பிங்ஸ்சாக இருந்தால், மூக்குடைந்த தன் சிங்க உடல் மனித முக உருவத்தை உலகின் அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்து உவகிக்கலாம். புலௌ புலௌ பொம்பா தீவில் வசிக்கும் பிரோபோசிஸ் குரங்காக இருந்தால், தன் மூக்கின் வடிவம் டின்டின் (tintin) காமிக்ஸ் வில்லன் ராஸ்டபாப்புலசுடன் ஒப்பிடப்படும் அவலத்தை அடைய நேரிடலாம். வானியல் அறிஞர் டைகோ பிராஹேவாக இருந்தால், பேச்சுவார்த்தை முற்றுகையில் மூக்கை கழட்டி பாலிஷ்செய்து எதிரியின் கவனத்தை கலைக்கலாம். அவருக்கு இளவயதில் கத்திச்சண்டையில் மூக்கு அறுபட்டு, பிறகு பொய் மூக்கு பொருத்தப்பட்டதாம். நம்ம தேவனின் துப்பறியும் சாம்புவாக இருந்தால், மூக்கை நீவிவிட்டுக்கொள்ளலாம். ஏதாவது துப்பு உதிக்கும். அநேகமாக தவறாக இருக்கும்.

மூக்கு வாய் இரண்டும் ஒருங்கே தன் பெரிய அலகில் கொண்டுள்ள டூகேன் பறவையாக இருந்தால்?

கட்டுரையே அதைப்பற்றித்தானே. டூகேன் பறவை பெரிய அலகை உபயோகித்தே தன் உடல் சூட்டை தணித்துக்கொள்கிறது. விவரிப்போம்.
Continue reading

அம்ருதா, அறிவுக்கண்

Standard

அம்ருதா (நவீன கலை இலக்கிய சமூக) மாதாந்திர இதழில் 2012 ஜனவரி முதல் எழுதத்துவங்கியுள்ளேன்.

தொடர்ந்து கட்டுரைகள் பிரசுரமானதும் மீள்பதிவுகளாய் இங்கு அவைகளின் முழுநீள முன்வடிவங்களை வெளியிடுகிறேன்.

இதேபோல் Federation of Science Clubs of TamilNadu என்பதின் லாபநோக்கற்ற பிரசுரமாய், பள்ளி கல்லூரிகளை சென்றடையும் அறிவுக்கண் என்கிற ஏட்டிதழ் வெளியாகிறது. வலைதளம் இருப்பதாய் நானறியேன். மாத இதழின் விலை 10 ரூபாய். இவர்களும் கேட்டுக்கொண்டதில், பல சிறு பாகங்களாய் தளத்திலுள்ள கட்டுரைகள் சிலதை அளித்துள்ளேன்.

கடையில் கால்குலஸ் வாங்குவோமா என்று இங்கு தொடங்கியுள்ள (இன்னும் எழுதவேண்டும்) கணித விளக்க கட்டுரையின் பகுதியுடன் சென்ற வருடம் தொடங்கி, இப்போது டர்புலன்ஸ் ஒரு அறிமுகம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் (அச்சு இதழோ, மின் வடிவமோ எனக்கு தொடர்ந்து வருவதில்லை).

ஏட்டிலும் அறிவியலை வாசித்து, இணைய வசதி அண்டாத சக ஆர்வலர்களிடமும் இத்தகவலை கொண்டுசேர்க்குமாறு இணைய வாசகர்களை கோருகிறேன்.

கர்நாடக சங்கீத வருங்கால நட்சத்திர நம்பி(க்கை)கள்

Standard

“இஃப் மை மியூஸிக் இஸ் லௌட், யூ ஆர் ஓல்ட்” என்று மார்பிலுறையும் வாசகங்களுடன், கையில் மான்முத்திரை அபிநயித்தபடி, விளையாட்டுகளில் கழியவேண்டிய அன்றைய களிவெறியை “ப்ரோ-ஷோ” கோஷ்டிகாண பேரிரைச்சலில் கரைத்து, ஒரே இரவில் இன்றைய இளைஞர்கள் பலர் தன்னிறைவடைகின்றனர். கொலவெறி எனும் சொல்லாடலை ஆறுமாதத்திற்கு தமிழ்நாட்டில் எவரும் உபயோகிக்கக்கூடாது என்று பப்ளிக் இண்ட்ரஸ்ட் லிட்டிகேஷன் போடுமளவிற்கு திரையிசையில் தங்கள் இயலாமையை வெளிப்படுத்தியே இளைஞர்கள் ஒரே மெட்டில் பிரபலமாகிவிடுகின்றனர்.

இக்கட்டுரை, இவர்களில் அநேகரால் தீண்டப்படாமல், இன்று பொருளீட்டவல்ல தொழிற்கல்வி பயின்றும், யூஎஸ் மேற்படிப்பு, குடியுரிமை என பலவற்றை துறந்தும், காசிக்கு போகாமலே காசை விடுத்தும், கர்நாடக சங்கீதமே லயிப்பு என தமிழ்நாட்டு தூசி பறக்கும் ஜமக்காளத்தில், தொடையில் தாளம் தட்டும் இளம்கலைஞர்களை பற்றியது.

தமிழிலக்கிய வணிகசூழலின் முரண்நகை வேண்டின், இவ்விசைத்துறையிலும் உள்ளூர் சபா அல்லக்கைகளின் “கர்நாடக இசை வானில் சிறகடித்து பறக்காமல் எந்த ஆபிஸில் குமாஸ்த்தாவாய் குப்பைகொட்டுகிறாய் நீ? மொத்தமாய் வந்துவிடு, நாளையே உன் கொடி பறக்குமாக்கும்” போன்ற சொற்பேச்சில் மதியிழந்து, இருக்கும் சம்பாத்யவேலையை துறந்து திக்குதெரியாமல் தவிக்கும் சிலரும் இவ்விளைஞர்களில் உண்டு.

இக்கட்டுரை நான் கேட்டு மகிழ்ந்த சில வளரும் கர்நாடக இசை கலைஞர்களை வாசக-ரசிகர்களுக்கு அறிமுகிக்கும் முயற்சி. ஒருவகையில், என் கையாலாகாத கோபத்தின் விளைவு. விளக்குகிறேன்.
Continue reading

இன்றைய மௌனம்

Standard

சென்ற வாரம் பெங்களூரில் ஒரு விருந்தினர் மாளிகையில் காலைக்குளிரில் தும்மல்களுடன் துயிலெழுந்து எரியும் கண்களுடன் பூர்வா சந்தியா ப்ரவர்ததே என்று மடினியை உயிர்ப்பித்து…  கடலூர் சீனு அவருள்ளிருந்து வார்த்தைகளாக்கியுள்ள என் சக மானிடன் செயலாக்கிய அவலத்தை, அடிமை மானுடத்தை (http://www.jeyamohan.in/?p=23200 — மென்மனதுடையோருக்கு எச்சரிக்கை) மனத்தளவில் அனுபவித்தேன்.

ஒருமுறை ஆஸ்பத்ரியில் ரத்தவாடை கலந்த பெண்டத்தால் வாசனையில் தலைசுற்றியதை தவிர்த்து, அதிர்ச்சியில் சட்டென மயக்கிவிழும் தருணத்தை திரையில் ப்ராணநாதா என்றிருப்போரிடமே அநேகமாக கண்டிருந்தேன். விழுப்புரம், கடலூர் என்று நான் சென்று பழகிவந்துள்ள சொந்த ஊரிலேயே சீனு விவரித்துள்ள குரூரத்தை வாசிக்கையில், மடினியிலிருந்து விடுபட்டு மீண்டும் படுக்கைக்கு வந்துவிட எழும்புகையில் தலைசுற்றி சேரிலேயே உட்கார்ந்துவிட்டேன். மயக்கமோ என கண்ணைமூடியதும் கன்னத்தில் வழிந்தோடும் உஷ்ணம் என் அன்றைய காமத்தை தீய்த்தது. கையறுநிலையை பறைந்தது.
Continue reading

2011-12 சென்னை மார்கழி இசைவிழா பல்லவிகள்

Standard

ராகம் தானம் பல்லவி என்றொரு கட்டுரைத்தொடரை கடந்த இரு வருடங்களில் அவகாசமிருக்கையில் சொல்வனத்தில் எழுதிவந்தேன். அதை முடித்துவிடவேண்டாம் என்ற பணிவான மிரட்டலுக்கிணங்க “தொடரலாம்” அடிக்குறிப்பிட்டு பூடகமாய் கிடப்பிலிட்டிருந்தேன். தொடருவதற்கு 2011-12 சங்கீதகாலம் “இதி சமயமுரா…” இணைய குல பாலகா என்றழைக்கிறது.

இணையத்தின் “சுட்டி” வசதியில் முன்கதைச்சுருக்கமென மெகாசீரியல் ஓட்டுவது எடுபடாதெனினும் வாசகர் சிலர் பிரிண்ட்டிட்டு படிப்பதால் இக்கட்டுரையின் உள்ளடக்கம் கருதி, ஒரு ரா.தா.ப. முன்னிசைச் சுருக்கம்.
Continue reading

இயல் இசை ஆடை

Standard

தோடியில் ஒலிக்கும் தொண்டை செருமல்களுடன் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டிருக்கும் 2011 சென்னை இசைவிழாவிலும், அடுத்து எழுத்தாளர்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மெகா சைஸ் கட்டவுட்டுகள் வைத்து தடுத்தாட்கொள்ளும் 2012 சென்னை புத்தகக் காட்சிவிழாவிலும் என்னைக் கவர்ந்தது, கர்நாடக இசை, தமிழ் சார்ந்த வாசகங்களுடன் வெளிவந்துள்ள டி-ஷர்ட்கள்.

புத்தகக் காட்சியில் அரங்கின் நுழைவாயிலிற்கு எதிர் கோடியில் தமிழ் வாசக டி-ஷர்ட்டுகள் நல்ல விற்பனை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், ஆதலினால் காதல் செய்வீர், நாம் யார்க்கும் குடிமை அல்லோம், நமனை அஞ்சோம் போன்ற வாசகங்கள் கவர்ந்தன. ஆண்களுக்கு கிட்டத்தட்ட அனைத்தும் கறுப்பு நிறத்தில் இருப்பது குறை. அதுவும் “தமிழ்”, “அ” என்று மட்டும் எழுதிவைப்பது… வாசகங்களுக்கு இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாமோ. வேறெதுவும் தோன்றவில்லையெனில், அ-விற்கு பதில் ஆ என்று இட்டால் சுஜாதா ரசிகர்கள் வாங்கலாம். இல்லை அவசரத்திற்கு நாஞ்சில் நாடனின் புத்தகத் தலைப்புகளை சுட்டாலே போதும்.
Continue reading

வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்

Standard

உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?

பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன சம்பந்தம். விவரிப்போம்.
Continue reading

ஹிண்டுவில் சங்கீதம் சார்ந்த கட்டுரை

Standard

சென்னை மார்கழி இசை விழாவை ஒட்டி, ஊடகங்களில் விமர்சன கச்சேரிகள் நடந்தேறியபடி. மாற்றாக ஆங்கில நாளிதழ் தி ஹிண்டு வின் வாசகர்களின் மென்புலன்கள் நோவா வண்ணம் அடியேனுடைய விமர்சனம் தவிர்த்த கட்டுரை இன்று வெளியாகியுள்ளது.

கட்டுரைக்கு திரு.கேஷவ் வழக்கமான அவரது பாணி கோட்டு சித்திரம் தந்துதவியுள்ளது, என் பாக்கியம்.

ஒரே நேர்/இணைய சந்திப்பில் என் சங்கீத விமர்சனம் மற்றும் மென்நகைச்சுவை எழுத்து பிடித்துபோய், அவ்விரண்டில் முடிந்ததை இவ்வூடகத்தில் அரங்கேற்றிய இரு நண்பர்களுக்கும் நன்றி.

இசை விழா விமர்சன கட்டுரைகள் இங்கு தொடரும்.

2011 சென்னை மார்கழி இசைவிழா

Standard

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும்.

டிசெம்பர் இருபதன்று (2011) நடுப்பகலில் அகதெமியில் “பாட்ரன்” வாயில் வழியே இருட்டோரமாய் நுழைந்து இருக்கையிலமிழ்கையில், அமர்களமான மேடையில் திருச்சூர் பிரதர்ஸ் (கிருஷ்ன மோஹன், ராம்குமார் மோஹன்) ஆஹிரியில் மாயம்மா என்றபடி நல்ல குரல் வளம். நல்ல கூட்டம்.
Continue reading

ஏன் பல்லி கொன்றீரய்யா

Standard

மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட கல்லாய், சடாரென்று ஜன்னல் கதவு, திரைச்சீலை பின்புறம், என அடுத்த மறைவிடத்திற்கு பயணிக்கும். தூரத்தில் நிகழும் (பல்லிக்கு நம்மைவிட உலகம் பெரிசுதானே?) நம் கண்சுழற்றல், கை விசிறல் போன்ற சிறு அங்க அசைவுகளையே கவனித்து உணருமளவிற்கா பல்லியின் கண்களும் மூளையும் செயல்படுகிறது? எனக்கு இது நீங்கா ஆச்சர்யம்.

அதேபோல் டொக் டொக் டொக் என பல்லி ஏன் சப்தமிடுகிறது? பரிணாம பாட்டன் முப்பாட்டன் வரையறுத்த பாட்டா, செம்மொழி கடந்த நுன்மொழியா, இல்லை ஹால் சுவற்றில் பூச்சிவகையறா டின்னரில் இருக்கும் சக பல்லிக்கு பெட்ரூமிலிருந்து ”சீக்ரமா சாப்டுட்டு வந்து படு” என்று ஜஸ்ட் “மோர்ஸ் கோட்” தகவல் தொடர்பா? அப்படியென்றால் ”டொக்” என்று பவ்யமான எரிச்சலுடன் ஒரேமுறை ஹாலில் உம் கொட்டுகிற பல்லிதான் அங்கேயும் ஆணா? இல்லை எனக்குத்தெரிந்த நம்பிகள் பலர் நம்புவதைப்போல, பல்லி சப்தமிடுவதே அச்செயலுக்கு சற்றுமுன் நம் மனதில் நினைத்ததை பலிதமாக்குவதற்குதானா? இந்த வீக்கெண்டாவது வீட்ல இருக்கர பல்லியெல்லாத்தயும் ஒழிச்சுகட்டனும் என்று நினைத்துக்கொண்டாலுமா?

பள்ளி விடுமுறையின் குழந்தைகளாய் இப்படி பல்லி பற்றியே நமக்கு பல கேள்விகள் இருக்கிறது. ஆதாரமான விந்தை ஒன்றிற்கு மட்டும் விடை இக்கட்டுரையில் காண விழைவோம். சுவற்றில் பல்லி எப்படி ஒட்டுகிறது? Continue reading

தொட்டால் தொடுதிரை பூ மலரும்

Standard

முன்னொரு காலத்தில் டயனோரா என்றொரு டிவி பிராண்ட் இருந்தது. விற்பதற்கு அங்கம் அவிழ ஆடையணிந்த அணங்கைகள் அக்கம்பக்கம் அதிர ”கீ……….ப் இன்ன்ன்ன்ன் டச்” என்று ஸ்டிரியோவில் விளம்பர ஸ்லோகம் விண்ணப்பிப்பார்கள். என்னுடன் தொடர்புகொண்டிரு என்று டிவி அன்று அரைகூவியது, மின்தொடர்புசாதனங்களின் செயல்பாட்டிற்கே இன்று இன்றியமையாத ஸ்லோகமாகிவிட்டது. கணினி சி.ஆர்.டி. திரையில் தொடங்கி, கியோஸ்க்களின் பில் போடும் மெஷின், சூதாட்ட ஸ்லாட் மெஷின்கள், வங்கி ஏ.டி.எம்.கள், பாம் பைலட், ஸ்மார்ட் ஃபோன் என அநேகமாக அனைத்து மின்திரைகளுமே இன்று தொடுதிரைகளாகிவிட்டது. ஐபாட், ஐஃபோன், ஐ.நா., ஐயா, என்று அனைவருமே சற்று அழுத்தினால்தான் கவனிக்கிறார்கள்.

நான்கு வெவ்வேறு தொழில்நுட்பங்களைகொண்ட தொடுதிரைகள் – டச் ஸ்க்ரீன் – மார்கெட்டில் உலவுகிறது. ரெஸிஸ்டிவ் டச், கப்பாஸிட்டிவ் டச், அக்கௌஸ்டிக் டச் மற்றும் இன்ஃப்ரா ரெட் டச்.
Continue reading

தாமரை இலையும் மகா நீரொட்டா பரப்புகளும்

Standard

பணியில் பாஸ் கூறும் ஐடியாக்களை பரிசீலிக்கையில், மனையில் மனைவி செய்த புதிய பதார்த்தத்தை உண்டு உவேவக்கையில், பஸ்ஸில் வெகுஜன வாராந்திரிகளில் பளீரிடும் காரிகைகளை புரட்டுகையில், சட்டென கிரகிக்கக்கூடிய செய்திக்கோர்வையான சிறுகட்டுரையாக இன்றி, ஏன், எதற்கு, எப்படி, என்று ஒரே விஷ(ய)த்தை நீட்டிமுழக்கி முதுகுவலிக்கவைக்கும் தீவிர கட்டுரைகளை இணையத்தில் மேய்ந்து புக்மார்க்கையில், இப்படி நம் பல மேலோட்ட செயல்பாடுகளை-விளைவுகளை மேற்கோளிட, ”தாமரை இலைத் தண்ணீர் போல” என்பது நாமறிந்த வழக்கு.

காவிரி நாடன் திகிரிபோன்ற ஞாயிறின் ஒளிமழையில், பாண்டிய நெடுஞ்செழியனின் பட்டமகிஷியின் கால் சிலம்பினிற் சிதறிய முத்துக்களென, பொற்றாமரைகுளத்து தாமரை இலைகளில் திவலைகளாக நீர் திரண்டிருக்கும். வூட்டாண்ட இருக்கர கொலத்லயும் தாமர எலல இப்டிதான், தண்ணியே தேங்காது. தாமரை இலையை நீர் ஈரப்படுத்தாது. ஏனெனில், தாமரை இலை ஒரு மகா நீரொட்டா பரப்பு. சூப்பர் ஹைட்ரோஃபோபிக் ஸர்ஃபேஸ். கசியும் பேனாவின் பாக்கெட் மசி, கக்கத்து வியர்வையின் சட்டை ஈரம் போல, தாமரை இலைகளில் நீர் ஊறி சொதசொதப்புவதில்லை. ஆலிலை இப்படியில்லை. கிருஷ்ணரே உட்காரலாம் (சரி சரி, தாமரை இலையிலும் கிருஷ்ணர் உட்காரலாம்தான்; சண்டைக்கு வராதீங்க).

கிருஷ்ணரை குறிப்பிடுவதற்கு காரணம், கீதை எவன் கர்மயோகமாய் பலனில் பிரேமைகொள்ளாமல் செயல்களை ப்ரம்மத்திற்காக செய்கிறானோ அவனை, தாமரை இலையை எப்படி நீர் தீண்டுவதில்லையோ அப்படி பாவங்கள் தீண்டுவதில்லை என்கிறது (அத்யாயம் ஐந்து, சுலோகம் பத்து). தாமரை இலையின் மகா நீரொட்டா தன்மை இயற்கையின் புராதானமான ஒரு நானோடெக்னாலஜி வெளிப்பாடு.

சரி, தாமரை இலையில் எப்படி நேனொடெக்னாலஜி?
Continue reading

இயற்கையின் நேனொடெக்னாலஜி

Standard

வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம்.

இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள், இயற்கையின் நேனொடெக்னாலஜி என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் வரும் சில கட்டுரைகளில் விளக்கமுற்படுகிறேன்.

இதன் முதல் பாகம் தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும் தலைப்பில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. படித்துப்பாருங்கள். இதே இதழில் ராமன் ராஜ குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி எழுதியுள்ள தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!  கட்டுரையையும் படிக்காமல் விட்டுவிடாதீர்கள்.

என் கட்டுரையை மீள்பதிவாய் இங்கு பின்னர் வெளியிடுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே. ஆங்கில nano தமிழில் நேனோவோ நானோவோ, நேனொ என்றே உச்சரிக்கப்போகிறேன். மைக்ரோ என்றால் ஏற்கனவே நுண் என்று பழக்கத்தில் உள்ளது (மைக்ராஸ்கோப் – நுண்னோக்கி). நேனோவை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறேன். மைக்ரோ, நேனோ, பிகோ, ஃபெம்ட்டோ, அட்டோ போன்ற வார்த்தைகளை, சைக்கிள், பெடல் பிரேக், (குடிக்கும்)காபி என்பதுபோல அப்படியே புழக்கத்திற்கு கொண்டுவந்து உபயோகித்தாலும், விளக்கங்கள் கொடுத்தால் போதுமானது என்ற கருத்தில். இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு, நீனு ”நேனொ”ன்னா நேனு ”நோநோ” என்று படிக்காமல்போய்விடாதீர்கள்.

வாட்டர் பாட்டில் சூரிய விளக்குகள்

Standard

அன்றே சாலமன் சொன்னார், எண்ணையில்லாமல் திரியில்லாமல் விளக்குகள் தலைகீழாக தொங்குமென்று. இது சுமார் முப்பது வருடம் முன்னர் பட்டினத்தில் பூதம் திரைப்படத்தில், விட்டத்தில் தொங்கும் மின்சார சாண்டிலியர் விளக்குகளை வியந்து பூதமாய் அசோகன் வசனித்தது.

எண்ணையின்றி, மின்சாரமின்றி வீட்டு விளக்குகள் எரியுமா?

எளிய தொழில்நுட்பத்தில் தண்ணீர் பாட்டில் சூரிய விளக்குகள் செய்திருக்கிறார்கள். சில வருடங்கள் முன், நல்ல வெய்யில், ஒரு மின்வெட்டு நாளில் பிரேஸில் பொறியியலாளருக்கு, எதேர்சையான வியர்வையில் தோன்றிய கண்டுபிடிப்பு. அருகில் படம்.

சகாய விலையில், சூழல் சிநேகமான, எளிதில் புதுப்பிக்ககூடிய, பகலில் வீட்டினுள் 55 வாட்ஸ் வரை வெளிச்சம் தரக்கூடிய, ஃப்யூஸ் போகாத, விளக்கு.

செயல்முறை எளிமையானது. பார்ப்போமா.
Continue reading

2011 வேதியியல் நோபல் பரிசு

Standard

2011திற்கான வேதியியல் நோபல் பரிசு இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் டேனியல் ஷெக்ட்மேன் (Daniel Shechtman) குவாஸி-க்ரிஸ்டல்ஸ் அல்லது குவாஸி-பீரியாடிக் க்ரிஸ்டல்ஸ், பகுதி வெளிச்சீர் படிகம், என்ற விந்தை பொருளை கண்டுபிடித்ததற்காக கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பொருளையும் அதன் கண்டுபிடிப்பின் தாக்கத்தையும் புரிந்துகொள்ள சாதா படிகங்களை அறிமுகப்படுத்திக்கொள்வோம்.
Continue reading