மார்கழி இசை விழா 2025-2026 – வாரம் 2

Standard

[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]

நிஷா ராஜகோபால் முதல் நாள் மாலை நான்கு மணிக்கு பார்த்தசாரதி ஸ்வாமி சபா கச்சேரியிலும் மறுநாள் காலை ஆறு மணிக்கு வியெஸ்யெஸ் பௌண்டேஷனுடைய மைலாபூர் கச்சேரியிலும் உருப்படிகளோ ராகங்களோ ஒன்றுகூட மறு ஒலிபரப்பாகாமல் பிரமாதமாகப் பாடினார்.

மாலைக் கச்சேரியில் தீக்ஷதர், கோபாலகிருஷ்ண பாரதி, மைசூர் வாசுதேவாச்சார், பொன்னையா பிள்ளை (நீலாம்பரி ராகத்தில் தெலுங்குக் கிருதி), பாபநாசம் சிவன், தியாகையர் என்று பல்வகை இசைக் கர்த்தாக்களின் (பல்வேறு ராகக்) கிருதிகளைக் கையாண்டு, அபங் வகையில் பிம்ப்ளாஸ் ராகத்தில் பானுதாஸரின் மராத்திப் பாடலுக்குப் பின்னர் துளசிதாசரின் ஹனுமான் சாலிஸாவில் முடித்துக்கொண்டார்.

ஆலாபனைக்கு எடுத்துக்கொண்ட சிம்மேந்திர மத்தியமம் (நின்னே நம்மித்தி கிருதி) கேதாரகௌளை (துளசி வில்வ கிருதி) ராகங்களில் லகுவான ஸ்வர ஏற்ற இறக்கங்களுடனும் சஞ்சாரங்களில் குரல் பிசிறல்களோ கற்பனைக் குறைவோ இன்றி அருமையான இசையை வழங்கினார். கேதாரகௌளையில் குறிப்பாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் தனிப்பட்ட தரஸ்தாயி தொடக்கத்தை (கிருதி சரணத்தில் பரமாநந்தமுதோ எனும் இடத்தில் இசைத்தொலிக்கும் சஞ்சாரங்கள்) சுவீகரித்து விரித்தது ரசிக்கத்தக்க அனுபவம்.

மறுநாள் காலை ஆபேரி ஷண்முகப்பிரியா ராகங்களில் செய்த ஆலாபனைகளில் நல்ல தேர்ச்சி. நிரவல் ஸ்வரங்களில் சீரான வளமான கற்பனை. நிஷாவிடம் ஓங்கி ஒலிக்கையிலும் குரலில் மதுரமான செவ்வியல் சௌக்கியமான இசையே வெளிப்படுவது நிறைவு.
*

Sumitra Vasudev, Padma Shankar (violin) and Arun Prakash (mridangam)

சுமித்ரா வாசுதேவ் ராக சுதா அரங்கில் வழங்கிய மாலைக் கச்சேரி செவ்வியல் இசையடர்வு மிக்க இதமான அனுபவம். பைரவி ராக ‘விரிபோணி’ வர்ணத்தில் தொடங்கினார். வழக்கமான இரண்டைக் கடந்த மூன்றாவது சிட்டை ஸ்வரக் கட்டாகட்டும் அரிதாகவே மேடையில் வழங்கப்படும் சரணங்கள் ஆகட்டும் தனது பாண்டித்தியமான பாடாந்தரத்தைத் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தினார். பாபநாசம் சிவனின் ‘கந்தா வந்தருள்’ கிருதியிலும் அதற்கான ஆலாபனையிலும் ஆபேரி ராகத்தை ‘சுத்த தைவதம்’ கொண்ட தொன்மையான வடிவில் வழங்கியதிலும் இப்பாண்டித்தியம் வெளிப்பட்டது.

கீர்வாணி ராகத்தில் (கீரவாணி இல்லை, இது கவாம்போதி எனும் மேளகர்த்தா ராகம்) தீக்ஷதரின் கிருதிக்குப் பிறகு சங்கராபரணம் ராகம் விரிவான ஆலாபனை. சங்கராச்சார்யம் எனத் தொடங்கும் கிருதியை ஆதி தாளம் இரண்டு களை சவுக்கத்தில் விரித்து நிரவல் ஸ்வரகல்பனைகள் செய்து முடித்தார். அருண் பிரகாஷ் தனி ஆவர்த்தனத்தைக் கணக்குகளுடனேயே கண்ட நடையில் தொடங்கி அசத்தினார். வழக்கம்போல மருதாணி அப்பிய விரல்களின் மென்மையான வாசிப்பைக் கச்சேரி முழுவதும் வெளிப்படுத்தினார்.

சுமித்ராவின் குரல் சுவாசக் கட்டுப்பாடுகள் அபாரம். ஆலாபனை நிரவல் ஸ்வரகல்பனை என்று அனைத்து அங்கங்களும் கூச்சலோ கீச்சுக்குரலோ இன்றி மதுரமாகவே வெளிப்படுகின்றன. அகாரங்களில் அளவுக்கதிகமான திளைத்தல்களோ ராக ஸ்வரங்களில் ஏறி இறங்கும் கற்பனை வறட்சிப் பாசாங்குகளோ கிடையாது.

சுமித்திராவிடம் முழுமைபெற்ற இசைவடிவம் பிராகசிப்பதை உணரமுடிகிறது. அவர் கலை பாரம்பர்யச் செவ்வியல் இசைவடிவம் என்றால், குலையாமல் அதைப் படைப்பூக்கத்துடன் வெளிப்படுத்தும் அவர் திறன் வேதவல்லியின் பாடாந்திரத்தில் பத்திரமாகப் பொதிந்துள்ளது. ரசிகர்கள் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நல்லிசை விருந்தை இவரிடம் எதிர்பார்க்கலாம்.
*

முத்துஸ்வாமி தீக்ஷதரின் 250ஆவது நினைவாண்டு என்பதால் இசைவிழாவில் இவரது கிருதிகளுக்குச் சிறப்பிடம் கொடுத்துப் பாடுகிறார்கள்.

அகடெமி காலைக் கச்சேரியில் ரித்விக் ராஜா திக்ஷதரின் சதுர்தஸ ராகமாலிகாவில் (பதிநான்கு ராகங்களில்) அமைந்த ‘ஶ்ரீ விஸ்வநாதம் பஜரே’ கிருதியை நிதானமாகவும் நிறைவாகவும் பாடினார். கிருதிக்கு முன்னர் பதினான்கு ராகங்களிலும் கச்சிதமாக ஆலாபனை வழங்கியது அசத்தல். முனைப்போடு உழைத்தால் செவ்வியல் வடிவம் குலையாமல் நம் இசையினுள் எத்தனை புதுமைகளைச் செய்யலாம் என்பதற்கு ரித்விக்கின் இம்முயற்சி சான்று. பலே.

பந்துவராளி ராகம் தானத்திற்கு அடுத்து ‘காணக் கிடைக்குமோ சபேசன் தரிசனம் கண்டால் கலி தீருமே’ என்று பல்லவியை விரித்து முடிக்கும் முன்னர் நேரம் தீர்ந்துவிட்டது.
*

நல்ல குரல் கற்பனை வளம் கொண்ட ராமகிருஷ்ணன் மூர்த்தியும் வித்திய பாரதியில் தனது அரங்கம் நிரம்பிய கச்சேரியை ‘ஶ்ரீகணநாதம் பஜரே’ என்று இஸமனோஹரி ராகத்தில் தீக்ஷதரின் கிருதியில் தொடங்கிக்கொண்டார்.

நாட்டை பைரவி ராகங்களில் கிருதிகளுக்கு அடுத்து பூர்ணசந்திரிகா ராகத்தில் கச்சிதமான சிறிய ஆலாபனை. அவரே ‘சின்ன ராகத்திற்கு சின்ன ஆலாபனை தானம் பல்லவி’ என்று முன்மொழிந்து பல்லவியாக ‘தெலிசிராம சிந்தனதோ நாமமோ சேயவே ஓ மனஸா’ என்பதையே திஸ்ர திரிபுடை தாளத்தில் பாடி ‘ராகம் தானம் பல்லவி’ அங்கத்தைக் கச்சேரியின் முற்பகுதியில் முடித்தார். தொடர்ந்த சிறிய தனி ஆவர்த்தனத்திற்குப் பிறகு தியாகையரின் அதே ‘தெலிசி ராம’ கிருதியை ஆதி தாளத்தில் தனி உருப்படியாக முழுவதுமாகப் பாடினார். அவருக்கு அன்று தோன்றிய புதுமை.

ராமகிருஷ்ணன் மூர்த்திக்குச் சபையோரின் நாடித் துடிப்பு புரிந்திருக்கிறது. அப்ளாஸுகளுக்கேற்ப தன் கச்சேரியை வடிவமைத்துக்கொள்வதில் தவறேதுமில்லை. மெயின் உருப்படி (ஓ ரங்கசாயி) நிரவலில் துரித காலம் உச்சங்கள் ஏதுமின்றி ஸ்வரகல்பனைக்குள் புகுவது, பல்லவியில் நிரவலோ திரிகாலங்களோ ஸ்வரங்களோ ராகமாலிகையோ இன்றி அவசரமாய் முடித்துக்கொள்வது, ஒரே ராகத்தில் (காம்போதி) மட்டும் பெரிய ஆலாபனை, மருந்திற்கு அடுத்ததில் (பூர்ணசந்திரிகா) சில நிமிடங்கள், அதற்கும் குறைவான நிமிடத் தானம், இப்படிப் படைப்பூக்க அங்கங்கள் பலவற்றையும் சுருக்கி வழங்குவது குரல் போனவர்களும் கற்பனை வளமற்றவர்களும் செய்வது. இவர் எதற்கு இவ்வயதிலேயே சுவீகரிக்க வேண்டும்?
*

அஸ்வத் நாராயணனின் குரல் கிட்டத்தட்ட இளவயது ‘கேவிஎன்’ குரலென ஒலிக்கிறது. பிரமாதமான செவ்வியல் வழுவாத சங்கீதம்.

காலைக் கச்சேரியில் வஸந்தா ராகத்தில் நிரவல் அரை ஆவர்த்த ஸ்வரங்கள் அசத்தல் என்றால் சிந்தாமணி கேதாரம் ஶ்ரீரஞ்சனி போன்ற ராகங்களின் தேர்வு நல்ல ரசனை. இதில் காம்போதி ராகத்தில் ‘காணக் கண்கோடி வேண்டும்’ என்கிற சிவனின் கிருதி மெயின் உருப்படி.

அடுத்த மாலை வித்திய பாரதி கச்சேரியில் மெயின் உருப்படி சங்கராபரணம். சரோஜதளநேத்ரி கிருதியில் ‘சாமகானவிநோதினி’ என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரங்கள். வயலின் கமலகிரண் வாங்கி வாசிப்பதில் தேர்ச்சியைக் காட்டினார். அனுபவஸ்தரான கே.வி.கோபாலகிருஷ்ணன் கஞ்சீராவில் கச்சிதமான துணை வழங்கினார்.

இந்தக் கச்சேரியின் உயரொளி என்றால் அது தேவகாந்தாரி ராக ஆலாபனை. ஆரபியும் தேவகாந்தாரியும் ஆண்-பெண் இரட்டையர் போன்ற ராகங்கள். அஸ்வத்தின் கற்பனைக் கட்டமைப்பில் தேவகாந்தாரி ராக ஆலாபனை ஒரு இடத்திலும் ஆரபி எனத் தோன்றாத வகையில் அமைந்தது சிறப்பு.

அஸ்வத் நாராயணனின் கச்சேரியில் விரிவுரையோ எனும் வகையான பேச்சுக்களோ, பாட்டின் பாதி வரிக்கிடையே அநாவசிய நீள் விளக்கங்களோ கிடையாது. இசையே மேலோங்கிப் பேசுகிறது. கிளரொளியிளமை கெடுவதன்முன்னம் கேட்டு ரசிப்போம் இத்தகைய செவ்வியலிசையை.
*

ராக சுதா அரங்கில் மூத்த கலைஞர் சுகுணா வரதாசாரி வி. பரத் குமாருடன் இணைந்து பாடிய கச்சேரியில் பாபநாசம் சிவனின் சம்ஸ்க்ருத மொழிக் கிருதிகள் பலவற்றை வழங்கினார். நாட்டை ராகத்தில் ‘தயாநிதே ஜானகிபதே’ எனத் தொடங்கிய கிருதிக்கு அடுத்து தோடி ராகத்தில் ‘தபசரணம் மம சரணம்’ என்கிற கிருதியை அதே வரியில் நிரவல் செய்து வழங்கினார்.

ஆலாபனைகளுக்கு சாமா கல்யாணி கரஹரபிரியா ராகங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. முசிறி சுப்பிரமணியம் ரங்கநாயகி பார்த்தசாரதி ஆகியோரிடம் பயின்றிருக்கும் சுகுணா வரதாசாரி தனது தில்லைஸ்தானப் பாடாந்திரப் பக்குவத்தை நிலைநாட்டினார். உடன் பாடிய பரத் குமார் அனைத்து வாய்ப்புகளிலும் அபாரமான குரல் கட்டுப்பாட்டையும் கற்பனை வளத்தையும் வெளிப்படுத்தினார். நிரவல்களை இவ்வளவு நிதானமாகவும் சலிப்பூட்டாமலும் செய்யமுடியுமா என வியக்கையில் சௌக்கிய இசை உற்சாகமான மேல்காலங்களையும் சில ஆவர்த்தங்கள் தொட்டுக்காட்டியது.

உடன் வயலின் வாசித்தவர் இவ்வாண்டு சங்கீதக் கலாநிதி ஆர். கே. ஶ்ரீராம்குமார். பாட்டு மேம்பாட்டு என்றால் வயலின் தாலாட்டு. அருண் பிரகாஷ் மிருதங்கத்தில் கச்சேரி முழுவதும் அனுமானித்து அணைத்து வாசித்தார். தனி ஆவர்த்தனத்தில் ஒருவரும் எழுந்து செல்லவில்லை. தாளம் பலமாய் போடப்பட்டது.

புன்னாகவராளியில் ‘சிவகங்கா நகர நிவாசிநி’, கிருஷ்ணர் மேல் பெஹாக் ராக தில்லானா பாடி, ஶ்ரீ ராகத்தில் ‘ராமம் பஜதே’ எனக் கச்சேரியை முடித்துக்கொண்டார்.
*

சம்ஸ்கிருத கல்லூரியில் மல்லாடி சூரிபாபு கச்சேரி மூத்த தலைமுறையினரின் மற்றொரு முத்தாய்ப்பு. அசாவேரி வர்ணத்தில் தொடங்கியவர் ‘ஏ பாபமு சேத்தி ரா ராமா’ என தியாகையரின் கிருதியை அடானாவில் இறைஞ்சும் உணர்வு வெளிப்படப் பாடினார். உடன் வாசித்த இளவயது நிஷாந்த் சந்திரன் மிருதங்கம் ஜோர். வயலின் இன்னமும் உழைக்க வேண்டும்.

சூரிபாபு ‘சுஜன ஜீவனா ராமா’ கிருதிக்கு முன்னால் செய்த கமாஸ் ஆலாபனை சீசனில் அரிதாகவே கிடைக்கும் என்றால் ‘ஹிமகிரி குமாரி’ கிருதிக்கு முன்னால் செய்த ரகுபிரியா ராக ஆலாபனை வாழ்நாளுக்கே அரிதானது எனலாம். ராக ஸ்வரங்களில் தவறின்றி ஏறியிறங்கிவிட்டேன் என ஆலாபனை செய்பவர்கள், ராகத்திற்கான தனிப்பட்ட உருவம் வருமாறு சம்பூர்ண மேள ராகங்களை எவ்வாறு ஆலாபனை செய்ய வேண்டும் என்று இவரிடம் பாலபாடம் பயிலவேண்டும்.

இரண்டு ஆயிற்றே என்கையில் அடுத்த ஆலாபனை முகாரி ராகத்தில். இதற்கான ஏமனிதே நீ மேகி கிருதியே முக்கியமான உருப்படி. இவ்வயதிலும் சூரிபாபு குரலில் வெளிப்படும் பிருக்கா கார்வை முத்தாய்ப்புகளை உடன் பாடியவருடன் உடனடியாக ஒப்பிட்டுக் கேட்கையில் வியந்து ரசிக்க முடிந்தது. இசைஞானத்திற்கு வயதுண்டோ.
*

[இதன் சுருக்கமான வடிவம் தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ளது.]