ரிக்கார்டோ ஷாயியும் அருண் நரசிம்மனும்

Standard

Riccardo Chailly என்பதை எவ்வாறு உச்சரிப்பது? முதல் பெயரில் நம்பும் உச்சரிப்புத் தர்க்கம் இறுதிப் பெயரில் கவிழ்த்துவிடுகிறது. Riccardo என்பதை அப்படியே வாசித்து ரிக்கார்டோ என்றால், உச்சரிப்பு சரியே. Chailly என்பதை அதே தருக்கப்படி சைலி என்றால் போச்சு. சாய்லீ-யும் இல்லை, ச்சைலி-யும் இல்லை. சில்லி-யும் இல்லை. வானொலி அறிவிப்பில் பிரெஞ்சுப் பெண்மணி Chailly என்பதை ஷாயி… என்கிறார், அதிகாலை மூன்றரை மணி கிரக்கமாய். நமக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது. கிரக்கமான பிரெஞ்சுப் பெண்குரல் இனி அமையாது என்றாலும் மதிப்பான அமைதியான எழுச்சியான சமகால மேற்கத்திய செவ்வியலிசை நடத்துனரின் பெயரைச் சரியாக உச்சரித்துக் குறிப்பிடவேண்டும் என்பதே அவா. ஆனாலும்… அப்டினா Shaayee-ன்னே ஆங்கிலத்தில் எழுதி வெக்கலாம்ல, அப்டியே எழுத்துக்கூட்டி படிச்சு சரியாச் சொல்லுவோம்ல… என்றே அந்தப் பிரெஞ்சுப் பெண்மணியிடம் அந்த அதிகாலைக் குளிரிலும் கேட்கத் தோன்றுகிறது.

பெர்னாட்-ஷா என்றோ கேட்டிருக்கிறார். பெயர்களிலிருந்தும் சொற்கள்வரைப் பொதுப்படுத்தி fish=ghoti என்கிற சமனில் ஆங்கிலத்தையே வாரியிருக்கிறார் (எவ்வாறு என்று இணையத்திலேயே தேடிக்கொள்ளலாம்).

தமிழில் எழுதிவைப்பதை அப்படியே வாசித்தால் சரியான உச்சரிப்பு அநேகமாய் வந்துவிடும். ஆங்கிலத்தையும் இதுபோலவே என்று நம்பி ஏமாந்த ஆங்கிலேயர்களைப் போலவே நானும் ஏமாந்திருக்கிறேன். ஆனாலும் rendezvous என்பதை அப்படியே வாசித்து ரெண்டெஸ்வுஸ் என்று பள்ளியில் சொல்லிக்கொண்டிருந்தவன், ராந்தேவு என்று சரிசெய்துகொள்ளும் அவசியம் இளமையில் இருந்தது — ராந்தேவு வித் ராமா என்கிற ஆர்தர் கிளெர்க் புத்தகத்தலைப்பிலேயே அச்சொல்லை முதலில் ஓரளவு சரியாக உச்சரித்தேன். (ஆனால் Rama என்பது ராமா-வா ரமா-வா என்று இன்றுவரை குழப்பம் உள்ளது. அப்பெயருக்கான ஆளை நேரில் கண்டதுமே சில சமயம் தெளிவு கிடைக்கிறது. இந்தியர் சிலரை பெயரளவிலேனும் என்றுமே ஆங்கிலப்படுத்தக்கூடாது என்பேன்).

அன்று ஆங்கிலத்தை — ஒரு மொழியைச் — சரியாகப் பயிலவேணும் என்று கருதியதால், ஆங்கிலப் பெயர்களையும் முடிந்தவரை சரியாகவே உச்சரிக்கச் சிரத்தை எடுத்துக்கொண்டிருந்தேன். வயதேறிய இன்று அவ்வாறு இல்லை.
Continue reading

எனது மின் புத்தகங்கள்

Standard

தமிழினி இதுவரை வெளியிட்டுள்ள எனது இரண்டு நாவல்கள் மூன்று அறிவியல் சார்ந்த புத்தகங்கள் தற்போது அமெசான் கிண்டில் வலைதளங்களில் மின் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளன.

இவற்றை வாங்குவதற்கான பக்கங்களைக் கண்டடைய ‘அருண் நரசிம்மன்’ என்று தமிழிலோ ஆங்கிலத்திலோ (அமெரிக்கா + இந்தியா) அமெசான் வலைதளங்களில் தேடினால் தென்படும்.

தனிச்சுட்டிகள் இவை

  1. ஏலியன்கள் இருக்கிறார்களா?
  2. நேனோ ஓர் அறிமுகம்
  3. உலகே உன் உருவம் என்ன?

நாவல்கள்

  1. அமெரிக்க தேசி
  2. அச்சுவை பெறினும்…

வாசகர்கள் தத்தமது மின்புத்தக வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

அலன் ஹொவ்ஹெனஸ் பூபாள இசை

Standard

ஜன்னல் வெளியே காண்பது நிஜப் பகலா அனல்வெளியின் கானல் காட்சியா என உறுதிப்படுத்த முடியாத சென்னை வனப் பெருமதியம். எதிரிலிருக்கும் மின்திரையில் ஓடிக்கொண்டிருந்த எழுத்தினோடு ஏதோ சிந்தனை வயப்பட்டிருக்கையில் காதில் மாட்டியிருந்த சென்ஹெய்ஸரில்… அட இது என்ன பூபாளம் மாதிரி இருக்கே… ஏதோ மேற்கத்திய செவ்வியல் இசை அல்லவா ஓடவிட்டிருந்தோம்… அதில் போய் பூபாள ஸ்வரக் கோர்வைகளா…

பொதுவாக மேஜர் (மற்றும் மூன்று) மைனர் ஸ்கேல்களில் இயற்றப்பட்டிருக்கும் மேற்கத்திய செவ்வியல் இசை வடிவங்களில் நம்ம ஊர் (கர்நாடக/இந்துஸ்தான இசை வடிவ) ரிஷபங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்காது. யார் இது இத்தனை துல்லியமாக கர்நாடக ராகத்தை மேற்கத்திய செவ்வியல் இசையில் கொண்டுபோய் விட்டது? இளையராஜா எப்போதோ ஏதோ சிம்பொனி என்றாரே, வெளியிட்டுவிட்டாரா? வேறு பெயரில் உலவுகிறதா?

மேலும் கவனித்ததில், இருபதாம் நூற்றாண்டு இசை வகை உறுதிப்பட்டது. சிம்பொனி எண் 66. ஹிம் டு கிளேசியர் பார்க். இசை அலன் ஹொவ்ஹனஸ். அமெரிக்கர். 1992இல் இந்த சிம்பொனி எண் 66ஐ வடிவமைத்துள்ளார்.
Continue reading

அச்சுவை பெறினும்… வாசகர் (வெங்கட்) கடிதம்

Standard

arunn-novel-2-tதலைப்பு: அச்சுவை பெறினும் வேண்டேன் அ(ரங்கமாநக)ரு(ளா)ணே

அன்பின் அருண்,

இதை எழுதத் துவங்கும் இன்று – ஜனவரி 24ந்தேதி – எனக்கு 35 வயது பூர்த்தியாகிறது. இந்த சுயபுராணத்தை முதல் வரியிலேயே பிரகடனப்படுத்தக் காரணம் உங்கள் அச்சுவை பெறினும் புதினத்தை 25 வயதில் கூட இவ்வளவு சுவாரசியமாகப் படித்திருப்பேனா என்று தெரியவில்லை. நாவலைப்பற்றிய எனது கவனிப்புகள்/குறிப்புகள் எதுவாயினும் சிலவற்றைக் குறிப்பிட்டிருக்கிறேன்.

* ஆரம்ப வசனத்தைச் சொல்லிவிட்டு (‘ஒவ்வொரு குடும்பத்தின் துக்கமும் தனித்துவமானவை’) இதுவுமே இங்கேயே முன்னரே இருக்கே (‘வீட்டுக்கு வீடு வாசப்படி’) என்று யோசிக்கத் துவங்கும்போதே என்னால் ரங்காவை அருணாகத்தான் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு உரையாடல் நடக்கும்போதும் அருண் என்னவிதமான முகபாவங்களை கைகொண்டிருப்பாரு – உதாரணமாக ரங்கா மீதுள்ள கடுப்பில் ரேஷ்மா உடன்பணிபுரிபவனிடம் முத்தம் பெற்றதைச் சொல்லும்போது ரங்கா அட்டகாசமாகச் சிரிக்கும் இடம் – அதுவும் காரணம் தெரிந்து அவள் அழும்போது அவனிடம் வெளிப்படும் உணர்வு – ஆணவம்னு கூடச் சொல்லலாம் – ‘நான் எவ்வளவு நேர்மையானவன் தெரியுமா?’என்று உணர்த்துமிடம் – இந்த தருணத்திலெல்லாம் (ரங்கா) அருண் எப்படி முகத்தை, வாயை வெச்சுண்டிருப்பா(ன்)ர்னு கற்பனை பண்ணாமே படிக்கவே முடியலை.
Continue reading

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 9 – இயற்கையில் நேனோ: சிலந்திப் பட்டின் மகிமை

Standard

சிலந்தி வலையை கவனித்திருக்கிறீர்களா? வீட்டில் ஒட்டடையைச் சொல்லவில்லை. காட்டில், மரங்களிடையே, அல்லது கிளைகளிடையே மரச்சிலந்தி நெய்திருக்கும் வலையை.

பொதுவில் இவ்வலையில் சிலந்தி தலைகீழாய், கிட்டத்தட்ட வலையின் நடுப்பகுதியில் இருக்கும். ஓவியர்களுக்கு ‘போஸ்’ கொடுப்பதற்காக இல்லை. மேலிருந்து கீழ்பக்கமாய் வலையில் வழுக்கிவந்து பூச்சியைக் கவ்வுவது சிலந்திக்கு எளிதாம், வாகாய்த் தன்னை தலைகீழாய்ப் பொருத்திகொண்டுள்ளது. வலையை கவனித்தால் நடுவிலிருந்து கீழ்பாதி வட்டப்பரப்பில் வலைப் பின்னல்கள் ஏராளமாய் நெருக்கமாய் இருக்கும். மேல்பாதி சற்று நெகிழ்ந்தே பின்னப்பட்டிருக்கும். பெரும்பாலும் வலையின் கீழ்பகுதியிலேயே பூச்சிகள் ‘மாட்டிக்கொள்வதற்கு’ இவ்வலை வடிவ ஏற்பாடு. தன் பரிணாம மூளையில் சிலந்தி யுகாந்திரமாய் தன்னிச்சையாகச் செயல்படுத்தும் வலைவடிவம். அதை உருவாக்கும் சிலந்திக் கலைஞனின் வாழ்வாதாரக் கலைவடிவம். இயற்கையில் தோன்றும் பலவகை நேனோ அளவிலான உயிரி-பொருள் (bio-material).

140 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த சிலந்தியையும் அதன் வலையையும் தொல்-எச்சமாய், புதைவடிவமாய் (fossil) இங்கிலாந்தில் சஸக்ஸ் மாகாணத்தில் கடற்கரையில் கண்டெடுத்துள்ளனர். இவ்வலையிலுள்ள பட்டும் கோந்தும் இன்று நெய்யப்படும் நவயுக சிலந்திப் பட்டு, கோந்துடன் ஒன்றுபடுகிறது.

சிலந்தி உமிழ்ந்து நெய்யும் வலைப் பட்டு அதன் ஜீவாதாரம். அதைச் உருவாக்கும் பொறியியளாலர் சிலந்தியை காக்கும் உயிரி-பொருள்.
Continue reading

ஜல்லிக்கட்டு – என் மத்யமர் பார்வையில்

Standard

பின்வரும் எண்ணங்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் ஏன் உருவானது எவ்வாறு இத்தனை விசுவரூபம் எடுத்தது போன்றவற்றை விளக்காது. அதெல்லாம் கெடக்கட்டுமய்யா மொதல்ல நீர் என்ன சொல்லும் அப்பால மேல படிக்கலாமா வாணாமானு முடிவெடுத்துகறேன் என்றால் நான் ஜல்லிக்கட்டு ஆதரவாளன்.

ஆனால் ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளன் என்றானாலும் என் மதிபேசி தழுவிய மங்காத மத்யமர் வாழ்க்கையின் எத்தருணத்திலுமே எச்செயல்பாட்டிலுமே எவ்வித இழப்புமில்லை என்பதை அறிந்தவன்.
*

நான் சிறுவனாய் ஜல்லிக்கட்டை ஓரிரு முறை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். தஞ்சை ஜில்லாவில் நான் பிறந்து வளர்ந்த மூன்று அக்ரகார கிராமத்திற்கு அருகில். மாட்டின் கொம்புகளுக்கு எட்டாத ஆசாரமான உயரத்தில் நண்பன் ‘நாணி’யுடன் திடமான புளியமரக்கிளையில் மீதமர்ந்து.

காளை அணியும் நவ வர்ணக் காகிதப்பூ மாலைகளும், வாலைத் திருகி நெடுக்குத் தெருவில் ஓட விடுகையில் கூட்டம் எழும்பும் ‘டுர்…’ சப்தங்களும், காளையைத் தழுவச் சென்றவன் அதன் சீற்றத்தில் தடுமாறித் தடுக்கி விழுந்து மடித்துக் கட்டியிருந்த கருநீலக் கட்டம் போட்ட லுங்கி (கைலி) கொம்பில் சிக்கிக் கிழிந்து அவிழ்ந்து அம்மணமாய்த் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் எனப் புழுதி பறக்கக் குறுக்குச் சந்தில் ஓடுவதைக் கண்டுத் திகிலுடன் மரக்கிளையினின்று விழுந்து விடாமல் ‘விழுந்து விழுந்து’ கண்களில் நீர்வரச் சிரித்ததுமே இன்றைய எஞ்சும் ஞாபகங்கள். நினைவேக்கங்கள் என்று கூறுவதற்கில்லை. பொறுக்கி வந்த காகிதப்பூ மாலையைத் தாத்தாவிற்குத் தெரியாமல் கூடத்து ஓரமாய்க் கிடக்கும் அரக்கு மேஜையின் எப்போதுமே கோணலாய் மூடிக்கொள்ளும் டிராயரை எம்பித் திறந்து கரப்புப் புழுக்கைகளுடன் சேகரித்துவைத்திருந்தேன்.

பின்னர் பெரும்பாலான பிராமண மத்யமர்கள் அன்றைய காலகட்டத்தில் செய்ததைப் போலவே என் பெற்றோரும் கிராமம் வீடு விவசாயம் துறந்து நகரம் கல்வி நல்வாழ்வு என்று நகர்ந்துவிட, நானும் நகரருகே ஶ்ரீரங்கவாசியாகி கிரிக்கெட்டிற்கு மாறிவிட்டேன்.
Continue reading

அச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்

Standard

arunn-novel-2-tவணக்கம்

உங்கள் அச்சுவை பெறினும் நூலை சில நிமிடங்களுக்கு முன் படித்து முடித்தேன். சிறு மதிப்புரை கீழே. இதனை goodreads போன்ற தளங்களில் என் பெயரில் பதிய மனம் ஒப்பவில்லை. தனி மதிப்புரையாக இருக்கட்டும் என்று உங்களுக்கு அஞ்சலில் அனுப்புகிறேன். இதனை எங்காவது வெளியிடுவது என்றால் என் பெயரை நீக்கி விட்டு வெளியிடவும். நன்றி.

=====

என் இருபத்தோராம் வயதில், எனக்கு மிகவும் பிடித்த வலைப்பதிவர், “முதல் மரியாதை” திரைப்படம் குறித்து மிகவும் சிலாகித்து எழுதி இருந்தார். தன்னுடைய முப்பதாவது வயதுக்கு மேல் அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்ததால் தனக்கு அது மிகவும் பிடித்திருந்ததாகத் தெரிவித்தார். அது போலவே இந்நூலும் முப்பது வயதைத் தாண்டிய ஆணால் (பெண்ணாலும் ?) தான் புரிந்து கொள்ள முடியும்.
Continue reading

இலக்கியம் இசையும் வயது

Standard

ஒவ்வொரு கலை இலக்கியப் படைப்பிற்கும் ஒரு வயது உள்ளது எனத் தோன்றுகிறது. அப்படைப்பு தன்னியல்பாய் ஒருமித்து வெளிப்படுத்தும் வயது. அவ்வயதோடு நாம் அதை அணுகுகையிலேயே அனைத்துப் பரிமாணங்களோடும் அப்படைப்பு முழுவதுமாய்த் திறந்துகொள்கிறது எனலாம். சமவயதினரோடான நட்பிலன்றோ ஆளுமையை உரித்து உளமாற உறவாடும் வாய்ப்பு அதிகமாகிறது.

இலக்கியப் படைப்பின் வயது நமக்குக் காலத்தால் ஆகியிருக்கும் வயதால் ஆவதன்று. அனுபவங்களினால் வருவது எனலாம். ஆன்னா கரனீன்-னில் இருந்து அதிகம் பெருவதற்கான வயது ஒரு டப்ளினர்ஸ்- வழங்கும் அனைத்தையும் பெருவதற்கான வயதைவிடப் பல வருடங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.

இலக்கியப் படைப்பின் இந்த ஒருமித்த வயதைக்காட்டிலும் குறைவான வயதோடு அதை அணுகுகையில், நம்மைவிட வயதான அப்படைப்பின் முழுத் திறவாமையை ஏற்க இயலாமல், குறைவயது நமக்களித்துவிடும் இயல்பான அனுபவ முதிர்ச்சியின்மையில் படைப்பைத் தூக்கியடிக்கவே, ஓரங்கட்டவே, நிராகரிக்கவே முயல்வோம். பெற்றோர் பெரியோர் பேச்சை எண்ணங்களை குணநலன்களை சக வயது நண்பர்களுடன் விமர்சித்து ஏற்காதிருப்பதைப் போல. புரியாதவை தேவையற்றவை, ஏற்கமுடியாதவை பயனற்றவை, அனுபவிக்க இயலாதவை உணர்வுகளற்ற கற்பனை… இவ்வாறான வயது வீழ்ந்து, காலப்போக்கில் நாமும் பெற்றோர் ஆவோம். மீண்டும் அனுகினால் படைப்பின் பலனைப் பெற்றோர் ஆவோம்.
Continue reading

பொறுப்பற்ற அறிவுஜீவி

Aside

இவை என் இன்றைய கருத்துகள். நாளையே மாறிவிடலாம். மாற்றிக்கொண்டதை நான் இங்கே தெரிவிக்காமலும் இருக்கலாம். மேலும், இன்றைய என் கருத்துகளும் தீர விசாரித்துச் சோதித்துச் சரிபார்த்து நான் கண்டடைந்த முடிவுகள் என்றும் கொள்ள இயலாது.

இன்றைக்குச் சரிபார்க்காமல் கூறியதால்தான் நாளையே அக்கருத்துகளை மாற்றிக்கொள்கிறாயா என்று நீங்கள் கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. அதற்குள் அடுத்த கருத்தைச் சொல்லவேண்டிய அவசியத்தில் அரும்பாடுபட்டு என்னை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாகவே என்னுள்ளே நிறைய கருத்துகள் மட்டுமே உள்ளது. என் கருத்துகளைப் பற்றி உங்களுக்குள் உருவாகும் கேள்விகளுக்கான பதில்கள் என்னுள்ளே என்றுமே உருவாவதேயில்லை என்று சொன்னபிறகும் நீங்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் பொறுப்பல்ல.

உங்கள் சிந்தனைப்போக்கையும், செயல்களையும், வாழ்வின் முக்கியமான முடிவுகளையும் இக்கருத்துகளைக் கொண்டே தீர்மானிப்பீர்கள் என்று நான் கருதுவதை என் மனப்பிறழ்வு என்று நீங்கள் கொள்ளலாகாது என்பதும் என் கருத்தே என்பதை ஏற்காத அளவிலேயே நீங்கள் இருப்பதற்கும் நான் பொறுப்பல்ல.

மேலுள்ள வாக்கியத்தை வாசிக்கும் பயிற்சி பொறுமை வாசித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் இவற்றை உங்களிடம் வளர்த்துக்கொள்ளாமல் போனதற்கும் நான் பொறுப்பல்ல.

நான் இங்கு எழுதிவைக்கும் யாவற்றையும் பொறுப்பானவை என்று நீங்கள் கருதிக்கொள்வதற்கு நான் பொறுப்பல்ல.

இப்படி பொதுவெளியில் எழுதிவைத்துள்ள என் கருத்துகள் எதற்குமே நான் பொறுப்பேற்க மறுப்பதை வெளிப்படையாக எழுதிவைத்தப் பின்னரும் தொடர்ந்து என் கருத்துகளை நீங்கள் வாசிப்பதற்கும் நான் பொறுப்பல்ல.

— மேலே உள்ளவை, தாமாகவே ஒருநாள் தன்னை இன்னார் என்று அறிந்துகொண்டுவிட்ட ஒருவரின் வலைதள முகப்பில் வாசித்தவை. பிறகு அத்தளத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 8 – நேனோ தொழில்நுட்பம்: நேனோபாட் நுண்ணூடுருவிகள்

Standard

சில நேனோ-மீட்டர்கள் அளவில் இருக்கும் எளிய நுண்ணுயிர்கள் (வைரஸ் கிருமிகள்) ஒத்து நேனோ-தொழில்நுட்பத்தில் விளைந்த மற்றொரு பொருள் நேனோபாட் (nanobot) அல்லது நேனோ ஊடுருவி (nano probe).

வீட்டில், அலுவலில், கணினிகளை உபயோகித்திருப்பீர்கள். எண்பதுகளில் (1980களில்) இருந்த கணினியின் திறனைக்காட்டிலும் பலமடங்கு திறனுடன் அதே அளவில் அல்லது மேலும் சிறிதாக இப்போது கிடைக்கிறது. தொடர்ந்து இப்படித் திறன் பல்கியும், அளவு குறைந்தும் கணினிகள் வெளிவருவதற்குக் காரணம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மூர் விதி (Moore’s Law) செயல்படுவதால்.

சுருக்கமாக இதன் ஒரு நிர்ணயத்தை இவ்வாறு கூறலாம்: ஒவ்வொரு இரண்டு வருட அவகாசக் கழிவிலும், கணினி சிப்புகளிலுள்ள டிரான்சிஸ்டர்களின் அடர்த்தி இரட்டிப்பாகும்.

அதாவது, கணினியின் மின்னங்கங்கள் சுருங்கிக்கொண்டே வருகின்றன.

சுருங்குவதால் மற்றொரு பயனும் உண்டு. மின்சாரமும், ஒளி போன்று மின்காந்தக் கதிரியக்கம்தானே (electromagnetic radiation). இதனால் இரண்டு இடங்களுக்கிடையே மின்சாரம் வழியாகத் தகவலை அனுப்புகையில், ஒளி வேகத்தை விஞ்சி அனுப்பமுடியாது. இது கணினி சிப்புகளில் தகவல் பரிமாற்றத்திற்கான வேகத்தடை. ஆனால், தொடர்ந்து சுருங்கிவருவதால், சிப்புகளில் ஏதோ இரண்டு இடங்களுக்கிடையே உள்ள இடைவெளி சுருங்கி, இதனால் மின்சாரம் மூலம் தகவல் பரிமாற்றமும் வேகமாக நிகழ வாய்ப்புள்ளது.

இப்படியே சுருக்கிக்கொண்டே போனால், எங்கு முடியலாம்?
Continue reading

அச்சுவை பெறினும்… நாவல் விமர்சனம் – கோகுல் பிரசாத்

Standard

arunn-novel-2-tதொல்ஸ்தோய் எழுதியதொரு கதையில் இரு பிள்ளைகளுக்கு தகப்பனான ஒருவன் அந்தக் குழந்தைகளின் ஆசிரியர் மீதே காதல் வயப்படுவான். அது அறிந்து அவனது மனைவி அவளது தோழியிடம் தான் ‘எப்படியெல்லாமோ’ நேசித்த பூஜித்த தனது கணவன் தனக்கே துரோகம் இழைத்துவிட்டதை எண்ணி ஆற்றாமையோடு சபித்து புலம்புவாள். அதற்கு பதிலுரைக்கையில் அந்தத் தோழி ‘உன் கணவனின் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நீ அவனைக் காதலித்தாயா?’ எனக் கேட்பாள். இல்புறக் காதலை இல்லற அறனும் அன்பும் பொறுக்க வல்லதா என்பதில் தான் அருண் நரசிம்மனின் இரண்டாவது நாவலான ‘அச்சுவை பெறினும்…’ மையம் கொள்கிறது.
Continue reading

நேனோ: ஓர் அறிமுகம் – கட்டுரை 7 – நேனோ அலுமினியமும் ராக்கெட் அறிவியலும்

Standard

இங்கு சற்று ராக்கெட் அறிவியல் பேசுவோம். தொடர்ச்சியாக, நேனோ அளவில் செய்யப்பட்ட அலுமினா துகள்களினால் ராக்கெட் எவ்வாறு வெடிப்பதிலிருந்து தடுக்கப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்வோம்.

தீபாவளி ராக்கெட்டில் குச்சியின் முனையில் எரிபொருள் மருந்தும், அதை எரிக்க நெருப்பூட்ட இணைந்த திரியும் இருக்கும். பாட்டிலில் சொருகி பற்றவைத்தால் வானத்திலோ வீட்டுக் கூரையிலோ தவ்வும். இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் போன்றவை செயற்கைக்கோள்களை வானத்தில் ஏற்றுவதற்காகத் தயாரிக்கும் பிரம்மாண்டமான ராக்கெட்டுகள் சிக்கலானவை. பற்றவைத்தால் இவ்வகை பிரம்மாண்ட ராக்கெட்டுகளும் மங்கள்யான் போல செவ்வாய் கிரகத்திற்கும் தவ்வும். சில அல்பாயுசில் கடல் ஆராய்ச்சி செய்து அணையும்.

நிறுத்திவைத்துள்ள ராக்கெட்டில் மேலிருந்து கீழாக கவனித்தால், மேல் மூக்கு நுனியில்தான் வானத்தில் இருத்த வேண்டிய செயற்கைகோள் போன்றவை இருக்கும். அதன் கீழே பெரிய உருளையில் திரவ அல்லது திட நிலையில் எரிபொருள். அதற்கருகே கீழே அடுத்த அறையில் எரிபொருளைத் தொடர்ந்து எரிக்க நெருப்பை வளர்க்கும் பிராணவாயு போல ‘ஆக்ஸிடைஸர்கள்’ இருக்கும். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து பற்றவைத்து எரிப்பதற்கு அதற்கும் கீழே எரியறை அல்லது எரிகூண்டு (combustion chamber) உண்டு. இதிலிருந்து நாஸில் எனப்படும் கூம்பு வடிவப் பெருந்துவாரம் வழியே எரியும் வாயு கீழ்நோக்கிப் பீய்ச்சியடிக்க, நியூட்டனின் மூன்றாம் விதிக்குட்பட்டு, ராக்கெட் எதிர்த் திசையில், அதாவது மேலெழும்பி வானத்தில் தவ்வுகிறது. சீராகக் பறப்பதற்குத் தேவையான இறக்கையமைப்பு, வழிகாட்டும் கருவிகள் (guidance system) இத்யாதிகளை இந்த எளிய அறிமுகத்தில் விடுப்போம்.
Continue reading

இசை அறிதலின் பிழையான முன்மாதிரிகள்

Standard

ஜெயமோகன் தளத்தில் அருண் என்று ஒருவர் இன்று கேள்வி கேட்டிருக்கிறாரே, நீ தானா? அன்பர் போன் செய்தார்.

நான் எதற்கு எனக்குத் தெரியாதை அவரிடம் போய்க் கேட்கப்போகிறேன், அதற்குப் பதில் கூறுவதைத் தவிர அவருக்கும்  வேறு வேலைகள் இல்லையா… நினைத்துக்கொண்டாலும், என்ன கேள்வி? என்ன விஷயம்? என்கிறேன். பேஸ்புக்கே பற்றி எரிகிறதே… என்னனு தெரியாதா என்றார் அன்பர். இல்லையே, நீங்க பேஸ்புக்ல தலைய வுட்டுனுக்குறீங்க, நான் ஸென்ஹெய்ஸர் ஹெட்போனில் வுட்டுகினு எம்பாட்டுக்கு பாட்டு கேட்னுகிரேன் என்கிறேன்.

அன்பர் விளக்கிய பின்னர் விஷயம் புரியத் தொடங்கியது. டி.எம்.கிருஷ்ணாவிற்கு மகஸஸே விருது வழங்கப்பட்டிருப்பதைப் பற்றி ஜெயமோகனின் விமர்சனம் தொடர்பாக ஜடாயு என்பவர் எழுதியிருப்பதைச் சுட்டி ஜெயமோகனிடம் ‘இதைக் கவனித்தீரா? இதுக்கு இப்ப நீங்க என்ன சொல்றீங்க?’ வகையில் கேட்கப்பட்ட கேள்வி.

இல்லை அன்பரே, அந்தக் கேள்வியைக் கேட்ட அருண் நானில்லை. எனக்கு அவ்வகை அறிவு வாய்க்கவில்லை. முயன்று மொக்கையாவதற்கும் நேரமில்லை.

தொடர்ந்து ஜெயமோகன் அப்படி என்னதான் விமர்சித்துவிட்டார் என்று அவர் கட்டுரைகள் நான்கைப் படித்தேன். இசை மேல் இன்றளவும் ஓரளவு நாட்டமுள்ளவன் எனும் சுயதகுதியால் தான் அவ்வாறு செய்தேன் (இந்த விளக்கம் ‘உனக்குதான் ஜெ வலைதள எழுத்தே ஒவ்வாதே, எதுக்குப் போய்ப் படிச்ச?’ என்று கேட்கக் காத்திருக்கும் இரண்டு நண்பர்களுக்காக). அடிக்குறிப்பில் சுட்டிகளை அளித்துள்ளேன். அக்கட்டுரைகளை முழுவதுமாய் வாசிக்காமலும் கீழுள்ளதை வாசிக்கலாம். களம் முழுவதுமாய் விளங்காது.

Continue reading

காதாசப்தஸாதி: ப்ராக்ருதி மொழிக் காதல் கவிதைகள்

Standard

IMG_1926

ஹாலா இரண்டாம் நூற்றாண்டில் ஆண்ட சாதவாஹன அரசன் [ https://en.wikipedia.org/wiki/Hāla ]. கவிஞன் அல்லது கவிதையில் நாட்டமுள்ளவன். காதாசப்தஸாதி என்பது இவ்வரசன் (மஹாராஷ்ட்ரிய) ப்ராக்ருதி மொழியில் தொகுத்த காதல் கவிதைகள். சுமார் 700 சிறு கவிதைகள். அதான் சப்த ( = 7). காதா என்றால் பாடல்.

இந்தியப் பிரதேசத்தின் தொன்மையான கவிதைத் தொகுப்பு நூல்களில் ஒன்று. ஹிந்தி, மராத்தி ஜெர்மன் மொழிகளில் நூறு வருடங்களுக்கும் முன்பாகவே மொழியாக்கப்பட்டுப் பெயரெடுத்தவை. வாய்வழியே அறிவுச்சேகரம் செய்த மரபானதால் இக்கவிதைகளில் பலதும் ஹாலாவின் சமகாலத்தைவிடத் தொன்மையானவை எனலாம்.  இந்தக் கவிதைத் தொகுப்பு நூலிற்குப் பின்னர் வந்த பல சமஸ்க்ருத கவி ஆக்கங்கள் சுவடின்றிப்போய்விட்டன, இன்றும் காதாசப்தசாதி கவி அறிஞர் சபைகளிலேனும் கோலோச்சுகிறது. காதல் என்றுமிருக்கும்.
Continue reading

மூதாதையர் குரல்

Video

ஹலபீடுவில் இருந்து பெலவாடி செல்லும் சாலையில் வழி தெரியாமல் எங்கள் வாகனம் திணறிய அவகாசத்தினுள் திடமான கைத்தடி ஒலியுடன் இவள் தோன்றினாள். நின்று நிமிர்ந்து நகைத்து நாலு சொற்கள் நவின்று நிமிராது நடந்து சென்றாள். பார்வையில் நிலைபெற்றதை நோக்கி.

எங்களுக்கும் பெலவாடி கோயில் காலங்கடந்து காட்சிபட்டது.

இயற்கையோவியம்

Image

IMG_1767

கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இப்புறமும் அப்புறமுமாக இனிமையான பயணம். அவகாசமேற்படுத்தி ஓரிரு அனுபவக்குறிப்புகளையாவது எழுதிவைக்க வேண்டும்தான்… மாதிரிக்கு ஓர் இயற்கையோவியம் (ஹாஸனில் இருந்து தர்மஸ்தலா செல்லும் வழியில்).

தற்படம் எடுப்பதைத் தவிர்ப்பதால், (வரவிற்கும் அனைத்துப் படங்களுக்கும்) என் அமெச்சூர் கேமிரா காண்பவற்றினூடே தனித்திருக்கும் ‘மாடல்’ எனும் பெரும் பொறுப்பைப் பயணத்தொடக்கத்திலேயே தன் தலையில் ஏற்றுக்கொண்டுக் கடமையாய்க் கடைசிவரைச் செயல்படுத்தியவர் கவிஞர் மகுடேஸ்வரன்அவர் இப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு.

அகத்திகம்

Aside

என்னை நம்புகிறாயா என்று மனைவி கேட்கிறாள். தக்க பதில் அளிக்கிறேன். அதையே தாய் கேட்கிறாள், தக்க பதில் அளிக்கிறேன். மனைவியை நம்புகிறாயா என்று தாய் வினவினால், அது உனக்கெதற்கு என்கிறேன்.

என்னை நம்புகிறாயா என்று மனிதன் கேட்கிறான். தக்க பதில் அளிக்கிறேன். அதையே இறைவன் கேட்கையில் தக்க பதில் அளித்துக்கொள்கிறேன். இறைவனை நம்புகிறாயா என்று மனிதன் வினவுகையில் அது உனக்கெதற்கு என்றே கூறுவேன்.

அச்சுவை பெறினும்… வாசகி கடிதம்

Standard

arunn-novel-2-tதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்றத் தீ

என்று எங்கோ தமிழ்ப் பால் ஊட்டி வளர்த்திட்டதால், தமிழ்  தாய்மொழியாய் ஆனதில் பெருமையும் பெருமிதமும் கொண்ட “ழ”கரத்தை “ல” என்றும் “ள” என்றும் யாரேனும் கொல்லும் போது நியாயச் சீற்றம் அடையும் சாதாரணத் தமிழச்சி நான். விமர்சனம் செய்யும் தகுதி இல்லையென அறிந்து (அச்சுவை பெறினும்… நாவலைப் பற்றிய) சில கருத்துகளையும் எண்ணங்களையும் மட்டுமே பகிர்கிறேன் இங்கே.

நன்றியும் வாழ்த்துகளும்:

தமிழிலே எண்ணங்கள் தோன்றுவது அரிது. அவற்றைத் தமிழிலே எழுத்து வடிவமாக்கிப் படிப்பவர்களின் நெஞ்சைத் தமிழிலே தமிழால் தொடும்படியாகச் சிறப்பிப்பது அதனினும் அரிது. இதை அழகாகத் தருவித்த ஆசிரியர் அருணுக்கு இது கடவுள் (அருண் வகையில் திருவரங்கன் :)) தந்த வரப்பிரசாதம். தமிழில் ஒரு நல்ல எழுத்தினைப் படைத்திட்ட அருணுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.

பிடித்தவை:

நடைமுறையில் மிகுதியாக இருந்தாலும் சமுதாயக் கோட்பாட்டிற்கு எதிராக இருப்பதால் வெளிப்படையாகப் பேச அஞ்சி இருட்டிலேயே வசிக்கும் இல்புறக் காதலெனும் சர்ச்சையானத் தலைப்பைக் கதையின் கருவாக எடுத்துக்கொண்ட தைரியம்.

நடுவயது நெருக்கடியினால் (midlife crisis) ஏற்படும் மனக்குழப்பங்கள், விரக்திகள், பரிச்சயத்தால் ஏற்படும் அலுப்பு மற்றும் அவமதிப்பினை அழகாகக் கையாண்டது.

நம் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஏற்ப நம் மனம் எவ்வளவு சாதுர்யமாகக் காரணங்களையும் காரியங்களையும் பின்னுகின்றது என்பதை அழகாக வெளிக்கொணர்ந்தது.

திருச்சி, ஶ்ரீரங்கம் ஊர்களை வருணணை மூலம் கண்முன்னே நிறுத்திய அழகு.

காதலில்லாத திருமணமும், திருமணத்தில் முடியாத காதலும், இரண்டுமே வீண். திருமண உடன்படிக்கைக்குள் காதல் அடங்கும். திருமண உடன்படிக்கை என்றும் காதல் உடன்படிக்கை என்றும் ஒருவனால் இரண்டு குதிரைகளை ஓட்ட இயலாது. இதை நியாயப்படுத்துவதற்கான ரங்காவின் சுவை மிக்க வாதங்களும் தர்க்கங்களும்.

பிடித்ததில் மிகவும் பிடித்தவை:

சின்னதாய் வந்தாலும் தன் வசதிக்கேற்ப நேர்மை விளம்பலை (convenience-based honesty) மிக யதார்த்தமாகவும், தெள்ளத் தெளிவாகவும் கோடிட்டுக் காட்டிய ரங்காவின் அண்ணியின் வாதம்.

ரங்காவின் எண்ணங்கள், உணர்ச்சிகள், வாதம் (ஆண் வாதம்) ஒரு ஆணாக ஆசிரியருக்குப் பரிச்சயமானவை. ஆனால் ரேஷ்மாவின் எண்ணங்கள், உணர்ச்சிகள், வாதம் (பெண் வாதம்) – அவற்றை மிகவும் நுணுக்கமாகவும், நிதர்சனமாகவும் வெளிப்படுத்தியது ஆசிரியரின் வெற்றி.

சில கேள்விகள்/நெருடல்கள்:

ரங்கா மணமுடித்தது ஒரு “வேதவல்லி”யாகத்தான் இருந்திருக்க வேண்டுமா?  ஏன் அவள் ஒரு ப்ரியாவாகவோ, ஒரு டயானாவாகவோ இருந்திருக்கலாமோ? ரங்காவிடம் ஒரு தன்னுணர்வற்ற பிறழ்ச்சி (unconscious bias) இருந்ததா? ரங்கா ரேஷ்மாவை விடுவதற்கு இது ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடுமோ?

காதல் காதல் காதல், காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல் என்ற உண்மையானக் காதலாக இருப்பின் அது எல்லா எதிர்ப்புகளையும் தகர்த்தெறிந்து வெல்லும் சக்தி கொண்டது. ரங்காவால் பதினைந்து வருடங்கள் ரேஷ்மாவின் நினைவே இல்லாமல் எவ்வாறு காலம் தள்ள இயன்றது? அக்காதலை மறுபடியும் உயிர்ப்பித்தெடுக்க ஒரு நண்பியின் மரணம் தேவைப்பட்டதோ?

இவை எனக்குப்பட்ட நியாயமான கேள்விகள் என்றாலும் ரங்காவிற்கும் ரேஷ்மாவிற்கும் தத்தம் நியாயமே அவர்களின் உண்மை – அவர்களின் உண்மையே அவர்களின் நியாயம் என்பதையும் உணர்வேன்.

இல்புறக் காதல் பற்றி ரங்காவின் வாதங்கள், ரேஷ்மா பக்க நியாயங்கள், டால்ஸ்தாயின் ‘ஆணா காரனின்’ மூலம் அவருடைய கருத்துகள் என்பவற்றை விரிவாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். இல்புறக் காதலைப் பற்றிய அவரின் சொந்தக் கருத்தை அறிய அவா.

அருண் மேன்மேலும் படிப்போரைச் சிந்திக்க வைக்கும், அதே சமயத்தில் இனிமைத் தமிழின் சுவையுண்டு மகிழவைக்கும் நாவல்களை எழுதித் தன்வகையில் தமிழ்த்தொண்டாற்ற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இப்படிக்கு
சங்கீதா.

அறிவியலை உளறல் செய்தியாக்குவது எப்படி?

Standard

சாதாரண அறிவியல் கூற்றை உளரல் செய்தியாக்குவது எப்படி? இன்றைக்கான உதாரணம் ஒன்றை மட்டும் வழங்குகிறேன்.

இயற்பியலாளர்கள் பின்வரும் தலைப்பு, சுருக்கம், உள்ளடக்கம் கொண்ட ஒரு கட்டுரையை எழுதுகிறார்கள்.
Continue reading

மதிநல கணம்

Aside

‘மணி என்ன?’ என்பவளிடம் ‘அதைத் தெரிந்துகொள்ளும் வசதி இதன் ஓரத்தில் இல்லை’ என்கிறேன், வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து தலைதூக்கி. கையில் மதிபேசியற்ற மற்றொரு மதிநல கணத்தில்.