உயிர் என்றால் என்ன என்பது பற்றி சுருக்கமாக அறிந்தோம். மாற்று உயிர் என்றால் என்ன?
மாற்று உயிர் என்று பெயரிடப்பட்ட ஜீவராசிகள், நம்மைப்போன்ற உயிரினத்துலிருந்து மாறுபட்டு, ஆனால் மொத்தமாக வேறாக இல்லாத, நம் உயிர்தொகை தழைக்கும் உருளையின் (பூமி) நிழலாய், இயங்கும் ஒரு நிழல் உயிருருளை. பூமியிலேயே நிஜத்துடன் தழைக்கும் Shadow Biosphere என்கிறார்கள்.
இவை எப்படி இருக்கலாம்?
உதாரணமாக, நாம் இதுவரை அறிந்துள்ள உயிர் மரத்து ஜீவராசிகளின் உயிரணுக்களில் ஒரு செல் நியூக்ளியஸ் மட்டுமே உள்ளது. ஏன் இப்படி. இரண்டு நியூக்ளியஸ் கொண்ட உயிரினங்கள் இருக்கலாமா? உயிரினங்கள் பற்றிய நம் சோதனைச்சாலை பரிசோதனைகளின் அமைப்பே, செல் நியூக்ளியஸ் இருக்கிறதா, இல்லையா; இருந்தால் அவை யூகரியாக்கள் இல்லையென்றால் அவை ஆர்கரியா அல்லது பாக்டிரியா என்று வகுப்பதாகவே உள்ளது. ஏன் நியூக்ளியஸ் இருந்து, அவை ஒன்றிற்கு மேலாக, இரண்டாக இருக்கக்கூடாது என்று கேட்கிறார்கள் இப்போது.
மேலே படத்தில் இருக்கும் இவ்வகை மாற்று உயிர் விஞ்ஞானிகளின் அனுமானங்களை தர்க்கங்களை வைத்து அறிவியல் புரிந்த ஓவியர் Adam Questell வரைந்தது. இரண்டு செல் நியூக்ளியஸ் கொண்ட மாற்று உயிர். Paul Davies 2007இல் Scientific American சஞ்சிகைக்காக எழுதிய மாற்று உயிர் பற்றிய கட்டுரையுடன் வெளிவந்த படம்.
இவற்றை நாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இக்கேள்வி உயிரியலுக்கு புறம்பானதல்ல என்று புரிகிறது. அதனால் தேடுவதில் பயன் உள்ளது என்று கருதுகிறார்கள்.
இதைப்போலவே மிரர் லைஃப். பிரதிபிம்ப உயிர் எனலாம். ஹோமோ கைராலிட்டி பற்றி முன்னர் செவ்வாயில் உயிர் – 3 பகுதியில் விளக்கினோம். பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே. இதை ஒத்துக்கொண்டால், பலமுறை உயிர் தோன்றும் சாத்தியங்கள் இருந்திருக்கையில், ஒவ்வொன்றும் ஏன் வலப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களைகொண்டே தோன்றவேண்டும். ஒரு வகை சாதா உயிராவது இடப்புறம் சுழற்சிகொண்ட டி.என்.ஏ.களும், வலப்புறம் சுழற்சிகொண்ட அமினோ அமிலங்களுமாய் தோன்றியிருக்கலாமே. அதாவது, இப்போது நாம் அறியும் உயிரினங்களின் மரபணுவின் மிரர், பிரதிபிம்பமாய் மரபணுகொண்ட உயிர்கள்.
இந்த தர்க்கமும் இதுவரை தெரிந்த உயிரியலுக்கு புரம்பானது இல்லை. இவ்வகை மாற்று உயிரை கண்டுகொள்ள செவ்வாயில் உயிர் பகுதியில் விளக்கிய ஹோமோகைராலிட்டி ரசாயசோதனையை மாற்றிப்போட்டு செய்துபார்க்கவேண்டும். இதுவரை இவ்வகை ஆராய்ச்சி பூமியில் நடப்பதாக தெரியவில்லை. ஆனால் இதுவும் மாற்று உயிரின் சாத்தியமே.
அடுத்த வகை மாற்று உயிர் சாத்தியத்திற்கான கேள்வி, ஏன் கார்பன் கட்டமைப்புகொண்ட உயிரினமே இருக்கவேண்டும்? அதாவது, மூலக்கூறு அட்டவணையில் (periodic table) கார்பனுக்கு அடுத்து நான்கு என்ற அதே வாலன்ஸி கொண்ட சிலிக்கன், ஜெர்மானியம் போன்ற மூலக்கூறுகள் வருகின்றன. அதனால், நாம் இதுவரை கண்டறிந்த ஜீவராசிகளின் டி.என்.ஏ.க்களில் உள்ள அமினோ அமிலங்களில் கார்பனுக்கு பதில் சிலிக்கன் இருக்கலாமா என்பது ஆதாரக் கேள்வி. இப்படி அமைந்தால் அவை நிச்சயம் மாற்று உயிர். இவ்வகையில் சிலிக்கன் கொண்டு அமைந்த நுண்ணுயிர்கள், சாதா உயிர்கள், பார்ப்பதற்கு படத்திலுள்ளது போல் இருக்குமாம்.
[படம் – சிலிக்கன் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]
முன்னர் மாற்று உயிர் முதல் பாகத்தில் விளக்கிய உயிர்-மரத்தை வைத்து இவ்வகை மாற்று உயிர் தரும் சாத்தியத்தை யோசித்துப்பாருங்கள். சிலிக்கனுக்கு ஒன்று, ஜெர்மானியத்திற்கு ஒன்று என்று மொத்தமாக வேறு உயிர் மரங்களே பூமியில் பூத்துக்குலுங்கலாம். நாம் இருக்கும், கார்பன் சார்ந்த உயிர் மரம் ஒரு காட்டின் ஒரு மரமாய் இருக்கலாம். இதை எழுதுகையிலேயே இதன் சாத்தியம் சிலிர்கவைக்கிறது.
நேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞாபுனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. நேச்சர் எடிட்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஸ்ரீலங்காவில் ரிடையர்மென்டிலிருந்து வந்து எழுதிக்கொடுத்தார். கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார். மாற்று உயிரினம். வளி-அறிவு-ஜீவராசி.
நாம் இன்னமும் இவ்வகையில் சாதா உயிரைக்கூட பூமியில் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் சாத்தியங்கள் அதிகம் என்பது போல பரிசோதனைகள் குறிசொல்கின்றன. பின்னால் விளக்கியுள்ளேன்.
அடுத்த வகை மாற்று உயிர், கார்பன் இருக்கட்டும், ஆனால் மற்ற மூலக்கூறுகள் மாறலாமே என்கிற சிந்தையிலிருந்து புறப்படுகிறது. அதாவது கார்பனுடன் அமினோ அமிலங்களில் சேரும் மூலக்கூறுகள் நமக்கு இருக்கும் மூலக்கூறுகளிலிருந்து மாறுபட்டிருந்தால்?
இவ்வகை மாற்று உயிரினங்களை எவ்வாறு அறிவது? எளிமையான பரிசோதனை ஒன்றை விளக்குவோம்.
ஏற்கனவே குறிப்பிட்டபடி, மாற்று உயிர்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது, தேடுவது, நம் அளவு உயரம் பருமன் மூளை உடைய சிக்கலான உயிரியலுடைய ”மேம்பட்ட” அறிவு-ஜீவராசிகளை இல்லை. பாக்டீரியாக்களையும் விட சிறிதான நுண்ணுயிர்களை. வைரஸ் போன்ற உயிரணுவின்றி செயல்படும் மைக்ரோபுகள். புரிதலுக்காக, இவற்றை எளிமையான, சாதா உயிர்கள் என்போம். சாதா என்பதால் சோதா உயிர்கள் என்று அர்த்தமில்லை. ஆர்கேயியா என்ற வம்சாவளியே உயிர் மரத்தில் இருக்கிறது இல்லையா [மாற்று உயிர் முதல் பாகத்தில் பாருங்கள்].
இவற்றின் குணங்களாக நாம் எதிர்பார்ப்பது எளிமையாக தங்களையே பிரதியெடுத்து பெருக்கிக்கொள்ள முடிகிற திறனையே. அதனால் நாம் இப்போதைக்கு மாற்று உயிர்களின் உயிரணுக்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் ஆராயவில்லை. தேடவில்லை.
நம்மைபோலன்றி மொத்தமாக வேறுவகையான உயிரினங்களை எப்படித்தேடுவது? நாம் எங்கெல்லாம் இருக்கமுடியாதோ, நம்மைப்போன்ற ஜீவராசிகள் எங்கெல்லாம் வாழமுடியாதோ, எங்கெல்லாம் தேடலை தொடங்கலாமே. இந்த யோசனையின் நீட்சியாக, ஒருவேளை நமக்கு விஷம் என்று கருதும் வேதியியல் பொருட்களை உனவாகக்கொள்ளும் ஜீவரசிகளை ஆராய்ந்தால் அவைகளில் சில மாற்று உயிர்களா என்று அறியமுடியுமா?
இங்கு குழம்பவேண்டாம். நாம் மாற்று உயிர் என்று தேடுவது நம்போன்ற உயிர்களிடத்தே இல்லாத புதிய மூலக்கூறுகளை மரபணுவிலேயே, டி.என்.ஏவிலேயே கொண்ட உயிர்களைத்தான். ஆனாலும் முதல் கட்டமாக அட்லீஸ்ட் நம்மால் உட்கொள்ளமுடியாத மூலக்கூறுகளை உணவாகக்கொள்ளும் உயிரினங்களை சோதிக்கலாம். பிறகு, இவற்றில் சில தங்கள் டி.என்.ஏ.வரை வரை இவ்வகை மூலக்கூறுகளை கொண்டுசென்றுள்ளதா என்றும் சோதிக்கலாம் என்று கருதி ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.
இவ்வகை யோசனையில் ஒன்று அமேரிக்காவில் Felissa Wolfe-Simonனுக்கு தோன்றியது. அவர் நாஸாவிடம் ஆராய்ச்சிபொருளுதவி கேட்டு எழுதிய பிரேரணையில், தான் ஆர்ஸனிக் உட்கொண்டு வாழும் உயிரினத்தை கண்டறிய முயல்வதாக குறிப்பிட்டார். புறநகர் தொழிற்சாலை கழிவுகள் பெரும்பாலும் ஆறுகள், ஏரிக்கள், குளங்களை சென்றடையச்செய்துவிடுகிறோம். இக்கழிவுகள் பல மிகுதியான ஆர்ஸனிக் சூழல் கொண்டவை. தொழில்நுட்பத்தில் பெருவளர்ச்சிபெற்ற ”முதல்-உலக” நாடான அமேரிக்காவில் இவ்வகை ஏரிக்களுக்கா பஞ்சம். அதனால் நாஸாவின் ஆதரவில் கலிஃபோர்னியாவிலுள்ள மோனோ ஏரியில் மாற்று உயிருக்கான ஆராய்ச்சியை ஃபெலிஸா தொடங்கியுள்ளார்.
மோனோ ஏரி, யோஸமைட் பூங்காவின் அருகிலுள்ளது. மிக அதிகமான ஆர்ஸனிக் மாசடைந்துள்ளது. பார்க்கத்தான் பச்சை/நீல நிறத்தில் ரம்மியமாய் இருக்கும். இவ்வகை மாசடைந்த ஏரிக்களை சுற்றி வாக்கிங் போகையில், ஜலம் மொண்டு பருகமுடியாது. ஏரியின் நீர் நமக்கு உணவாக வெறுப்பு தெரிவிக்கும் பலவகை விந்தை நுண்ணுயிர்களை ஏற்கனவே கொண்டது. இவற்றில் பல ஏற்கனவே ஆர்ஸனிக்கை உட்கொள்கின்றனவோ என்ற சந்தேகக்கேஸ்கள்.
எப்படி மாற்று உயிரை கண்டுகொள்வது? ஒரு பரிசோதனை மூலம். [link to related Astrobiology Magazine article]
இந்த ஏரியிலிருந்து சாம்பிளாக எடுத்துவரப்பட்ட பல நுண்ணுயிர்களை, சோதனைச்சாலையில், குடுவையிலிட்டு, ஆர்ஸனிக்கை உணவாக கொடுத்துக்கொண்டே போகவேண்டியது. அதாவது, குடுவையில், ஆர்ஸனிக்கின் வீரியத்தை (concentration) ஏற்றிக்கொண்டே போவது. சாம்பிளில் அநேக நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கின் வீரியத்தினால் விரைவில் இறந்துவிடலாம். ஆனால் ஒருசில நுண்ணுயிர்கள் ஆர்ஸனிக்கை உணவாக உட்கொள்வது சரியெனில், இவை மட்டும் நம்மைப்போல் ஆர்ஸனிக் விஷ-உணவினால் சாகாது. மாறாக, கல்யாண சமயல் சாதம், ஆர்ஸனிக்கும் பிரமாதம் என்று ஒரு வெட்டு வெட்டும். ஆர்ஸனிக்கிலிருந்து கிடைத்த ஆற்றலைவைத்துக்கொண்டு, நுண்ணுயிராதலால், தங்களை பிரதியெடுத்து மேலும் பெருக்கிக்கொள்ளும். இப்படிப்பெருகிய நுண்ணுயிர்களை மீண்டும் பெரிய பாத்திரத்தில் போட்டு ஆர்ஸனிக்கை பொழிந்தால், மீண்டும் பிரதியெடுத்துப்பெருகலாம். ஆர்ஸனிக் வீரியம் அதிகரிக்க அதிகரிக்க, இவ்வகை நுண்ணுயிர்களின் தொகையும் பல்கிப்பெருகலாம். தாங்கள் துளி ஆர்ஸனிக் விஷத்திற்கே பூட்டகேஸாகிவிடும் அகதா கிரிஸ்ட்டி மர்மக்கதைமாந்தர்கள் இல்லை என்பதை நமக்கு தெரியப்படுத்தலாம்.
இதுதான் பரிசோதனை.
மீண்டும் நினைவில்கொள்ளவேண்டியது, இங்கு நுண்ணுயிர்கள் என்று குறிப்பிட்டு நாம் சோதித்துபார்ப்பது, பாக்டீரியாக்களைவிட எளிமையான, வைரஸ் போன்ற மைக்ரோப்கள், அல்லது நேனோபுகளை. இவற்றின் மரபணுவில், நம் மனித (மற்றும், மரம்,மீன், உருளைக்கிழங்கு, பூச்சி, விலங்கு என அநேக ஜீவராசிகளின்) மரபணுவில் இருப்பது போல கரி மற்ற மூலக்கூறுகளுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள சேர்க்கைகள் இருக்கலாம். கரியுடன் ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்ற மூலக்கூறுகளின் சேர்க்கை. மாற்று உயிர் என்று நாம் இங்கு சோதிப்பதில், கரியுடன், பாஸ்பரஸ் சேரும் இடங்களில் மட்டும், பாஸ்பரஸுக்கு பதில், மூலக்கூறு அட்டவணையில் (periodic table) அதற்கு அடுத்து வரும், ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்று பார்க்கிறோம்.
அதாவது, நமக்கு பாஸ்பரஸ் தவிர மூலக்கூறு அட்டவணையில் அதற்கு அடுத்துள்ள ஆர்ஸனிக், பிஸ்மத், என்று வேறு மூலக்கூறுகள் டி.என்.ஏ.வில் சேருவதற்கு இயலாது. உணவாகக்கூட நம் உடம்பில் சேராது. டாக்ஸின், நச்சுனி, என்று நம் மரபணு கட்டமைப்பு வெளியேற்றிவிடும். இல்லை, கட்டமைப்பே காலப்போக்கில் செயலற்று, இறந்துவிடும். ஆனால், மாற்று உயிர்கள், இவ்வகை மூலக்கூறுகளின் சேர்க்கையில் இயங்கலாமே என்று அனுமானிக்கிறோம். இதன் மூலம் நம் விஷத்தை உணவாகக்கொண்டு சந்ததியை பெருக்கும் உயிரினத்தை காணவே இவ்வகை பரிசோதனை. நம்மால் எங்கெல்லாம், எந்த சூழலிலெல்லாம் உஜ்ஜீவிக்கமுடியாதோ, அங்கு தழைப்பதுதானே மாற்று உயிர்.
மரபணுவிலேயே, டி.என்.ஏ.களிலேயே ஆர்ஸனிக் உடைய இவ்வகை நுண்ணுயிர்கள் இதுவரை இச்சோதனைகள் கண்டறியவில்லை. ஆனாலும், சமீபகாலமாகவே இவ்வகை ஆராய்ச்சி தொடங்கப்பட்டுள்ளது என்பதால், நம்பிக்கையுடன் தேடி வருகிறார்கள்.
படத்திலுள்ளது ஓவியர் வரைந்த ஆர்செனிக் மாற்று உயிர். வெள்ளையாக ஜாதிமல்லிகைபோல் இருப்பது சில மில்லிமீட்டர்கள் தடிமனில் ஆர்ஸனிக் மாற்று உயிரினக்கூட்டம். இதில் ஒரு சாதா மாற்று உயிர், சில நானோ மீட்டர் பருமனே.
[படம் – ஆர்ஸெனிக் உயிரினம் வரைந்தவர் Jean-Francois Podevin]
மேலே குறிப்பிட்டது ஒரு வகை மாற்று உயிர் தேடுதல் பரிசோதனையே. மற்றொன்று, கதிரியக்க குணமுள்ள ஆர்ஸனிக்கை சிறிதளவு டிரேசர் என்று நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் உடம்பில் செலுத்தி, அவை மரபணு, டி.என்.ஏ. வரை சென்று மாற்றமேற்படுத்துகிறதா என்றும் பரிசோதித்துவருகிறார்கள். டி.என்.ஏ.வில்தான் பாஸ்பரஸ் இருக்கிறது என்றல்ல. நம்போன்ற ஜீவராசிகளின் உயிரணுவிலும், அதன் செல்-சுவர்களில், செல்-ஜவ்வுக்களில், லிப்பிட் (lipid) எனப்படும் புரதம் இருக்கிறது. இவற்றிலும் பாஸ்பரஸ் அதிகம். மாற்று உயிர்களில் இவ்விடங்களிலும் பாஸ்பரஸிற்கு பதிலாய் ஆர்ஸனிக் ஒட்டிக்கொள்கிறதா என்றும் இந்த சோதனைகள் மூலம் அறியமுடியும்.
அதேபோல, உலகின் கடல்களில் நீர் மொண்டு அவற்றில் உள்ள லட்சக்கணக்கான நுண்ணுயிர் ஜீவராசிகளை பிரித்தெடுத்து சோதித்துவருகின்றனர். உதாரணமாக, விஞ்ஞானி கிரெய்க் வெண்டர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சமீபத்தில் மனித மரப ணுவின் அணிவரிசையை ஒழுங்குசெய்ய (human genome sequencing) பல முக்கியமான ஆராய்ச்சிகள் செய்தவர். இதற்கு அடுத்து ஈஸிசேரில் காலை நீட்டி ரிடையர் ஆகாமல், இவரே 2004இல் ஸர்கோஸா கடலில் இருந்து மொண்டு எடுத்த ஒரு டம்ளர் நீரிலிருந்து, 1.2 மில்லியன் புதிய மரபணுக்களையும், 1800 புதிய நுண்ணுயிர் மைக்ரோபுகளையும் கண்டறிந்துள்ளதாக அறிவித்தார். விஞ்ஞான உலககையே ஸ்தம்பிக்கவைத்த அறிவிப்பு. தன் அறிவிப்பில், இங்க நம்ம கடலிலேயே இவ்வளவு ஜீவராசிகள் நமக்கு இன்னமும் தெரியாம இருக்கு, நீங்க செவ்வாய்ல உயிரத் தேடுறீங்களா என்றார்.
அவர் சொல்வதில் பெரும் உண்மை இருக்கிறது. அநேகமாக நாம் அறியும் மைக்ரோ ஜீவராசிகள் அனைத்துமே, விரவியிருக்கும் உயிரியல் பலசரக்குகளில் ஒரு பகுதியான, சோதனைச்சாலையில் ஒரளவு பரிசீலிக்கமுடிந்த சொற்பமே. நம் உலகிலேயே, நம் பரிசோதனைமுறைகளில் தப்பிய இவ்வகை மைக்ரோஜீவராசிகள் நிச்சயம் ஏராளம் இருக்கிறது. இவற்றில் மாற்று உயிர் எனும் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகள் நிச்சயம் இருக்கவே சாத்தியம் அதிகம். உயிர் இருக்கிறது, இல்லை என்பதையறிய மேற்கொள்ளும் இந்த வகை சோதனைமுறைகளை விரிவுபடுத்தவேண்டும் என்று தீவிரமாக அறிவியலளர்கள் முயன்றுவருகிறர்கள். பவளப்பாறைகள் முதல், மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள், விலங்குகள் என கடல்வாழுயிரினங்களிடையே கார்பன்டைஆக்ஸைடு வாயுவின் பாதிப்பை, அதன் தேக்கத்தை பற்றிய ஆராய்ச்சிகள் உலகில் பல இடங்களில் சமீப காலங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் உப நோக்கம் நிழல் உயிருருளையின் பிரதிநிதிகளை கண்டறிவதே.
ஆனால், செட்டி வகை ஏலியன்ஸ் தேடல்கள் [செட்டி (SETI) என்ன செய்கிறது] இவ்வகை மாற்று உயிர்களை தேடவில்லை. தொடர்புகொள்ளவும் எத்தனிக்கவில்லை. அவர்கள் தேடுவது, சாதா உயிர்களை அல்ல. மைக்ரோபுகள், பாக்டீரியாக்கள் தாண்டி, சிக்கலான உயிரணுக்கள் கொண்ட, கையில் டிஜிட்டல் வாட்சில் மணிபார்த்துக்கொள்ளும் அறிவு-ஜீவராசிகளை. மாற்று உயிர் தேடுவது, கண்டறிவதுமூலம் நமக்கு உயிர் பிரபஞ்சத்தில் பல இடங்களில் விரவியிருக்கலாம் என்று புரியலாம். அதிலிருந்து புரப்படும், அறிவுள்ள உயிர் மட்டும் அரிதாக இருக்கலாம்.
பார்ப்போம், மாற்று உயிரே இதுவரை மாட்டவில்லை.
ஏன் என்ற காரணத்தின் கதவுகளை தட்டினேன், பதிலை தேடியபடி. கதவு திறந்தது. நான் உள்ளேயிருந்தே தட்டியுள்ளது புரிந்தது.
அபாரமான இந்த ஜெலாலுதீன் ரூமியின் (சூஃபி துறவி) கருத்தை ஒத்ததே நம்முடைய ஏலியன்ஸ் தேடலும் என்று தோன்றுகிறது.